இந்து முறைப்படி திருமணம்: இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிவிப்பு!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் ஜூன் 9-ம் தேதி அதாவது 9.6.2022 அன்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சென்னையில் தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் தனது திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை அறிவித்துள்ளார்.

அப்போது விக்னேஷ் சிவன் பேசும்போது “வாழ்க்கையில் இப்போது நானும், நயன்தாராவும் அடுத்த கட்டத்துக்குப் போகப் போகிறோம். எனது காதலியான நயன்தாராவைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.

எங்களது திருமணம் வருகிற 9-ந் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்து முறைப்படிதான் எங்களின் திருமணம் நடைபெறும், அன்று மதியம் எனது சமூக வலைத்தள பக்கத்தில் எங்களது திருமணப் புகைப்படம் வெளியாகும். இதுதான் எங்களது திட்டம்.

இந்தத் திருமணத்தில் எங்களது இரு குடும்பத்தினரின் நெருங்கிய நட்பு வட்டம் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜூன் 11-ம் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களான உங்களைச் சந்திக்க உள்ளேன்…” என்றார்.

இதற்கிடையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்வு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். இதற்காக இந்தத் திருமண வைபவத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் திருமணத்திற்காக 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 30 பேர் வி.வி.ஐ.பி.க்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த வி.வி.ஐ.பி.க்களில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரும் அடக்கம் என்று தெரிய வந்துள்ளது.

இவர்களின் திருமண விழாவில் திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுவதால், யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இத்திருமணம் தொடர்பான தகவலை விக்னேஷ் சிவன் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி உள்ளன.

ரசிகர்கள், நண்பர்கள், திரையுலகத்தினர் உள்ளிட்ட பலரும் இப்போதே நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.