‘ஈடாட்டம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

சின்னத்திரையின் நட்சத்திர நடிகர் ஸ்ரீ குமார்கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஈடாட்டம்’எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்கள் பேரரசு, எழில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹைனா ,தயாரிப்பாளரும், தொழிலதிபருமான என்.ஆர். தனபாலன் ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் ஈசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ஈடாட்டம்’. இதில் ஸ்ரீகுமார், நடிகர் ராஜ சூர்யா,நடிகைகள் வெண்பா, அனு கிருஷ்ணா ,, தீக்ஷிகா, விஜய் விசித்திரன் , ‘காதல்’ சுகுமார்,, பவர் ஸ்டார்,, ‘பூவிலங்கு’ மோகன்,, புலிக்குட்டி, விஜய் சத்யா, சாந்தி ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க மேற்பார்வையை கஜபதி ,மேற்கொள்ள, ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம்ஸ்  , கையாள, ஜான் பீட்டர், இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை செந்தில் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜென் முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை சுரேஷ் ஹார்ஸ் பாபு அமைத்திருக்கிறார். சைபர் கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஈசன் மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்தி அருண் கேசவன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் கவனத்தை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்கள் பேரரசு, எழில், தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான என். ஆர். தனபாலன், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹைனா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஈசன் பேசுகையில்,” கலை தாய்க்கு என்னுடைய முதல் வணக்கம். கலையை மதித்தவர்கள் யாரும் கெட்டுப் போனதில்லை. கலையை நிஜமாக நேசித்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

13 வயதில் எனக்கு சினிமாவின் மீது ஆசை ஏற்பட்டது. அப்போது முதல் கோடம்பாக்கத்தில் வாய்ப்புகளைத் தேடி நான் சைக்கிளில் அலைந்திருக்கிறேன். எனக்கு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தான் பூர்வீகம். அங்கிருந்து 90களில் சென்னைக்கு வந்தேன். நான் சைக்கிளில் அலைந்த போது சினிமா எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய மாமா ஏ. சி. சந்திரகுமார் திரைப்பட இயக்குநர். ‘செவத்த பொண்ணு’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார். என்னுடைய தாத்தா ஆறுமுக நாடார் நாடக மன்றம் என்று ஒரு கலைக்குழுவை வைத்து நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

என்னுடைய மாமா, ’20 ஆண்டுகளாக போராடுகிறேன். எனக்கே சினிமா கை வரவில்லை. அதனால் பேசாமல் ஊர் பக்கம் சென்று விடு’ என எச்சரித்தார். ஆனால் நான் அவருக்குத் தெரியாமல் சென்னையில் வாய்ப்புக்காக சுற்றி இருக்கிறேன்.

சினிமாவிற்காக சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டேன். இன்று சிலம்பம் என்றால் அனைவருக்கும் தெரியும் வகையில் ஆண்டவன் அருளால் பிரபலமாகி இருக்கிறேன்.

இந்த நிலையில் இரண்டு பேர் தூண்டுதலின் பேரில் நானும் இணைந்து படத்தை தயாரிக்க தொடங்கினோம். ஒரு கோடியில் தயாரிக்கலாம் என்றும், ஒவ்வொருவரும் தலா முப்பது லட்சத்தை முதலீடு செய்யலாம் என்றும் திட்டம் போட்டு படத்தின் பணிகளைத் தொடங்கினோம். முதலில் என்னுடைய பணத்தை செலவழிக்க தொடங்கினேன். ஆர்வத்தில் செலவுகளை செய்யத் தொடங்கினேன். 20 லட்ச ரூபா செலவு செய்த பிறகு.., இரண்டு நண்பர்களும் வெளியேறி விட்டார்கள். படத்தை நிறைவு செய்ய தெரியாமல் தடுமாறி நின்ற போது, என்னை வளர்த்த தாய் ரங்கநாயகி…, அவருடைய வீட்டை விற்று கொடுத்த பணத்தில் படத்தை நிறைவு செய்திருக்கிறேன். இந்த செயலை என்னைப் பெற்ற தாய் கூட செய்ய மாட்டார்கள். என்னை வளர்த்த தாய் என் மீது வைத்த பேரன்பின் காரணமாகத்தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அவர்கள் இல்லையென்றால்… இந்த ஈசன் மூவிஸ் இல்லை. இந்த ‘ஈடாட்டம்’ திரைப்படமும் இல்லை.

இன்னொரு விசயத்தை குறிப்பிட வேண்டும். எனக்கு சினிமா ஆசை இருந்ததே தவிர… சினிமாவை முறையாக கற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய ஆசையை படமாக உருவாக்கியதற்கு.., இப்படத்தில் பணியாற்றிய கஜபதி தான் காரணம். நான் இந்த படத்தில் இயக்குநர் என்று பெயரை மட்டும் தான் போட்டிருக்கிறேன். ஆனால் அனைத்து பணிகளையும் செய்தது கஜபதி தான்.

இந்த திரைப்படத்தில் பணியாற்றிய ஜேசன் வில்லியம்ஸ், ஜென் முத்துராஜ் என ஒவ்வொருவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இசைத்துறையில் ஒருவரால் லட்சக்கணக்கில் ஏமாற்றப்பட்டேன். அதன் பிறகு தான் ஜான் பீட்டரைச் சந்தித்தேன். அவர் எனக்கு பேருதவி செய்தார். சினிமாவை நிஜமாக நேசிப்பவர்கள்.. சினிமாவிற்கு உதவி செய்கிறார்கள் என்பதை ஜான் பீட்டர் மூலமாக உணர்ந்தேன்.

என்னிடம் சிலம்பம் கற்ற மாணவி பிரியா என்பவர் ஐந்து லட்ச ரூபாய் உதவி செய்ததால் இந்த படம் சரியான நேரத்தில் நிறைவடைந்தது. அதற்கும் இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

13 வயதில் சினிமா ஆசையுடன் சென்னைக்கு வந்த நான் 43 வயதில் இயக்குநராகியிருக்கிறேன். 30 வருஷ தவம் நிறைவேறி இருக்கிறது. இதில் நான் மட்டும் வெற்றி பெறவில்லை. அனைவரும் ஒன்றிணைந்துதான் வெற்றி பெற்றிருக்கிறோம்.

சினிமாவில் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவேன். ஏனெனில் என்னுடைய குடும்பம் கலை குடும்பம். இந்த சின்ன படத்திற்காக நான் 20 லட்சம் ரூபாய் வரை ஏமாந்திருக்கிறேன். சினிமாவில் ஏமாற்றுபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த திரைப்படத்தை வாழ்த்த வேண்டும் என அழைப்பு விடுத்தவுடன் வருகை தந்து வாழ்த்திய கே ராஜன், பேரரசு, எழில், ஏ ஆர் ரஹைனா தனபாலன் சிலம்பாட்ட கலைஞர் சண்முகம் சிலம்பாட்ட கழகத் தலைவர் ஆகியோர்களுக்கு நன்றி. ” என்றார்.

இயக்குநர் எழில் பேசுகையில், ” சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவதில்லை என காதல் சுகுமார் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் வெற்றி பெற்ற நான்கு திரைப்படங்களும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள்தான். சின்ன பட்ஜெட் படங்கள் தான் இந்தத் துறையை ஆரோக்கியமாக இயங்க வைக்கிறது. சின்ன பட்ஜெட் படங்கள் தான் புதிய இளம் திறமையாளர்களின் கனவுகளை நனவாக்குகிறது. ஈசன் போன்ற ஏராளமான புது இயக்குநர்கள் அறிமுகமாவதற்கு உதவி செய்வது சின்ன பட்ஜெட் படங்கள் தான். ஈடாட்டம் திரைப்படத்தை படக்குழுவினர் அற்புதமாக உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் முன்னோட்டம்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்குவது போல் அமைந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஈசன் ஈடாட்டத்தை உருவாக்குவதற்காக பட்ட கஷ்டத்தை கேட்கும் போது சினிமா மீது ஒரு பயம் வருகிறது. இவற்றையும் கடந்து இப்படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹைனா பேசுகையில், ” பொதுவாக பெரிய பட்ஜெட் படங்களின் விழாக்களுக்கு நான் செல்வதில்லை. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தான் செல்கிறேன். ஏனெனில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு என்னாலான ஒத்துழைப்பை வழங்குவேன். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்தால் போதும். அழைப்பிதழில் என் பெயர் இடம்பெற வேண்டும் என்ற அவசியமில்லை. அதை நான் எதிர்பார்ப்பதுமில்லை. தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, எழில் போன்றவர்கள் இங்கு வருகை தந்து பட குழுவினரை வாழ்த்தி உற்சாகப்படுத்துகிறார்கள் என்றால் இது தான் ஆரோக்கியமான சூழல் என கருதுகிறேன். இசையப்பாளர் ஜான் பீட்டர் இசையமைத்த இரண்டு பாடல்கள் இங்கு திரையிடப்பட்டது. இரண்டும் அற்புதமாக இருந்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவர் இதில் பணியாற்றி இருப்பதால் இந்த படம் நேர்த்தியாக உருவாகி இருக்கும். இரண்டு பாடல் காட்சிகளிலும் அவருடைய உழைப்பு தெரிந்தது. இந்தப் படம் அற்புதமான கதையை கொண்டிருக்கிறது. ஒருவன் குடித்துவிட்டு எந்த அளவிற்கு பிரச்சனையை செய்ய முடியும். குடித்த பிறகு.. அவனுடைய மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது… இதனால் சமூகத்திற்கு ஏற்படும் தீமைகளை… இயக்குநர் படமாக்கி இருப்பதால், இதனை பாராட்டுவதற்காகவே இங்கு வருகை தந்திருக்கிறேன். இதற்காக பட குழுவினரை வாழ்த்துகிறேன். பொதுவாகவே சமூகத்துக்கு ஏதேனும் நல்லது நடக்கிறது என்றால்… உடனே நான் அங்கு சென்று விடுவேன். இசையமைப்பாளர் சங்கர் கணேசின் மகனான ஸ்ரீக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்”.என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில்,” இப்படத்தின் இசையமைப்பாளர் ஜான் பீட்டரிடம் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். ஒரு பாடலாசிரியர் இருக்கிறார். ஒரு பாடகர் இருக்கிறார். இயக்குநர் இருக்கிறார். அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. இப்படி அவரிடம் பல முகங்கள் இருக்கிறது. அவரிடம் இருக்கும் நல்ல மனசின் காரணமாகத்தான் சிக்கலான தருணத்தில் தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீயை சீரியல்களில் பார்த்திருக்கிறேன். அருமையாக நடிக்கிறாரே…! இவர் ஏன் சினிமாவுக்கு வரவில்லை? என யோசித்திருக்கிறேன். அவரை சந்தித்து கேட்டபோது, ‘வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார். ஆனால் அதன் பிறகு தான் அவர் இசையமைப்பாளர் சங்கர் கணேசின் மகன் என்றே எனக்கு தெரியும். தந்தையின் பெயரை சொல்லி வாய்ப்பு கேட்காமல், தன் சுய முயற்சியால் இந்த உயரத்தை அவர் தொட்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஸ்ரீயிடம் ஒரு தனித்துவமான நடிப்பு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை பயன்படுத்திக் கொண்டு, அவர் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும். ஏதோ ஒரு தடை இருக்கிறதாக நினைக்க வேண்டாம். ஏனெனில் ஒரு கலைஞருக்கு அவருடைய தன்மானம் தான் பெரிய தடை. தன்மானத்தை அதிக அளவில் வைத்திருந்தால் வாய்ப்பு கிடைக்காது. தன்மானத்தை கைவிட்டால், நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்தப் படத்திற்கு பாடல் எழுதி இருக்கும் பாடலாசிரியர் இளைய கம்பன் என்னுடைய நண்பர். திறமையானவர். இளைய கம்பன் என்ற பெயரே அவர் மீது எனக்கு இருக்கும் பெரிய ஈர்ப்பு.

திரையுலகில் கதாசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும். ஏனெனில் ஒரு பாடலுக்கு இசை அமைப்பாளர் மெட்டமைத்தாலும்.. பின்னணி பாடகர்கள் பாடினாலும்.. அதற்கு கதையை அறிந்து… சூழ்நிலை அறிந்து… பாடல் வரிகளை எழுதும் கவிஞர்கள்தான் முக்கியம்.

படமே எடுக்காமல் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டிருக்கும் மோசடி பேர்வழிகளை… ‘பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் ‘என ஊடகங்கள் விவரிக்கிறது. இதனை நிஜமாகவே படமெடுக்கும் இயக்குநர்களுக்கு மனவருத்தத்தை உண்டாக்குகிறது. இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் திரைப்பட இயக்குநர் என்ற வார்த்தையை இணைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் வசனம் என்னைக் கவர்ந்திருக்கிறது. சட்டத்திற்கும் போலீஸிற்கும் நல்லவர்கள் தான் பயப்படுகிறார்கள். சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்பவர்கள் போலீசுக்கு தர வேண்டியது கொடுத்துவிட்டு வெளியில் மகிழ்ச்சியாக உலா வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பது உண்மைதான். சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்பவர்கள் போலீசை மதிப்பதே இல்லை. யார் ஆட்சி செய்தாலும் போலீஸ், போலீசாக இருக்க வேண்டும்.

கடன் கொடுப்பவர்கள் பணத்தை கொடுக்கும் வரை கடவுளாக தெரிகிறார்கள். கடன் கொடுத்த பிறகு கடன்காரன் கடன் கேட்டு வந்தால், ‘சகுனம் சரியில்லை’ என்று கடன் காரன் கூறுகிறான். இதுபோன்ற நன்றிகெட்ட சூழலில் தான் நான் தற்போது வாழ்கிறோம்.

குடியால் பாதிக்கப்படும் இளைஞனின் கதையை இயக்குநர் ‘ஈடாட்டம்’ மூலமாக கொடுத்திருக்கிறார். இந்த படம் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”ஈடாட்டம் என்றால் என்ன? பொருள் என படக் குழுவினரிடம் கேட்டேன். நமக்கு போராட்டம் தெரியும். அதன் பிறகு சூதாட்டம் தெரியும். அதற்கு நான் செல்வதில்லை. சிலம்பாட்டம் தெரியும். இந்த ஆட்டங்களை எல்லாம் தெரிந்து கொண்ட எனக்கு,’ ஈடாட்டம்’ என்றால் என்ன? என்று தெரியவில்லை. அப்போது அவர்கள், ”பொறாமை.. வஞ்சகம்.. வஞ்சனை.. பொல்லாப்பு..” என அர்த்தம் சொன்னார்கள்.

மனதில் வஞ்சனை வைத்திருப்பவர்கள் மனிதர்களே இல்லை. மனிதருக்குரிய பண்பும் அல்ல. மனிதநேயம்.. மனித தர்மம்… மனிதாபிமானம்.. இந்த மூன்றும் யாருக்கு இருக்கிறதோ… அவர்கள் தான் மாமனிதன்.

தான் மட்டும் வாழ வேண்டும் என நினைப்பது தவறில்லை. நாம் நன்றாக இருக்க வேண்டும். நமது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுவதும் தவறல்ல. இது ஆத்மா. இதை கடந்து.. நானும் வாழ வேண்டும். என்னை சுற்றி இருப்பவர்களும், என்னை நம்பி இருப்பவர்களும் வாழ வேண்டும் என எண்ணுபவர்கள் புண்ணிய ஆத்மாக்கள். ஆனால் என்னைப் பற்றி கவலை இல்லை. நாட்டை வாழ வைக்க வேண்டும்.. மக்களை வாழவைப்பதற்காக என்ன தியாகம் வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருப்பது.. மக்கள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள்.. பெருந்தலைவர் காமராஜரை போன்ற மகாத்மாக்கள். நாம் மகாத்மாவாக வேண்டும். இந்த காலத்தில் மகாத்மாவாக முடியாது. ஆனால் புண்ணியத்மா ஆகலாம்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஒரு நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார். குடியால் கெட்டுப்போன ..அதனால் தடுமாறுகிற ஒரு இளைஞனின் கதையை அற்புதமாக சொல்லி இருக்கிறார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மகனான ஸ்ரீ ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இந்த விழாவிற்கு வருகை தந்து, என்னை சந்தித்து ‘வாங்க முதலாளி’ என அன்புடன் அழைத்தார். ஆனால் தற்போது தயாரிப்பாளராகிய நாங்கள் யாருக்கெல்லாம் பணம் கொடுக்கிறோமோ… அவர்கள் முதலாளிகளாகிவிடுகிறார்கள். நாம் தொழிலாளிகளாகி விடுகிறோம். ஆனால் ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களையும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இணைந்து தான் உருவாக்குகிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தின் இயக்குநர் ஈசன் நன்றி கடன்பட்டிருக்கிறார். தன்னுடைய பேச்சில் வளர்ப்புத் தாயை மட்டும் குறிப்பிடாமல்…, இப்படத்தை நிறைவு செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்த கஜபதியையும் அவர் குறிப்பிட்டார்.

சிறிய பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்கள் அனைத்தும் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கான வழிவகைகளை மத்திய அரசும், மாநில அரசும் திட்டம் தீட்டி அவர்களை காக்க வேண்டும். இதனை ஒரு வேண்டுகோளாக முன் வைக்கிறேன். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த தயாரிப்பாளரின் வீட்டிற்கு வருமான வரி துறையினரின் சோதனையை அனுமதிக்கிற மத்திய அரசு.. தோல்வி அடைந்து காணாமல் போன தயாரிப்பாளரை பற்றியும் விசாரிக்க வேண்டும். மத்திய அரசு காட்டில் உள்ள வனவிலங்குகளை கண்டறிவதற்காக திட்டம் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது நல்ல திட்டம் தான். விலங்குகளை காப்பாற்றுகிற இந்த திட்டத்தை போல்…, 15 ஆண்டு காலமாக திரைப்படம் எடுத்த தயாரிப்பாளர் நிலை என்ன? அவர்களின் குடும்பம் என்னானது? அது தொடர்பாகவும் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

மத்திய அரசும், மாநில அரசும் திரைப்படத்துறை சார்பாக வரி வருவாயை ஈட்டுகிறது. ஆனால் இதனை மத்திய அரசு ஒரு தொழிலாக அங்கீகரிக்கவில்லை.

‘ஈடாட்டம்’ வெறியாட்டமாக மாறாமல்.. வெற்றியாட்டமாக மாறி.. மக்களின் பேராதரவை பெற்று, வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.