எஸ்.எழில் இயக்கும் விமல் நாயகனாக நடிக்கும் “தேசிங்கு ராஜா2”

எஸ்.எழில் இயக்கும் “தேசிங்கு ராஜா2”.நாயகனாக நடிக்கும் விமல்.இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார்.

விமல் ஜோடியாக பூஜிதா பொனாடா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். மேலும், ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொல்லு சபா சாமிநாதன், மாதுரி முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் கலக்குகிறார்கள்.

வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க காமடி கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எழில்.

“காதல் படங்களில் இருந்து காமெடிக்கு திசை திரும்பியது ஒன்றும் பெரிய குறை இல்லை” ; இயக்குநர் எழில்

படம் பற்றி இயக்குநர் எழில் கூறும்போது, “காமெடி என்று வந்துவிட்டால் விமல் அந்த அலைவரிசைக்கு பிரமாதமாக செட் ஆகி விடுவார். ரவி மரியா, ரோபோ சங்கர், கிங்ஸ்லி, மதுரை முத்து, மதுமிதா என காமெடி கூட்டணி களை கட்டியுள்ளது. குறிப்பாக முதல் பாகத்தில் பண்ணையாராக நடித்த ரவிமரியா இதில் அரசியல்வாதியாக அட்ராசிட்டி செய்கிறார்.

‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்கு எப்படி எனக்கு எனர்ஜியோடு அழகான பாடல்களை வித்யாசாகர் கொடுத்தாரோ இதிலும் அதேபோல கொடுத்திருக்கிறார். பாடல்கள் பெரிதாக பேசப்படும். தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் செலவை பார்க்காமல் தயாரித்துள்ளார்.

25 வருடங்களில் 15 படங்கள் இயக்கி உள்ளேன். இதை பெரிய சாதனை என்று சொல்ல முடியாது. ஆனாலும் நண்பர்கள் விரும்பினார்கள் என்பதற்காக 25 ஆம் ஆண்டு விழா நடத்தினோம். ஆரம்பத்தில் காதல் படங்களை எடுத்துக் கொண்டிருந்த நான் அப்படியே காமெடிக்கு திசை திரும்பியது ஒன்றும் பெரிய குறை இல்லை. இங்கே சிந்திய வியர்வைக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது. நிறைய பாடமும் கற்று இருக்கிறேன். பிழைகளை திருத்திக் கொண்டு அடுத்தடுத்து சென்று கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்தபோது பிஸியான சூழலிலும் என்னிடம் அரை மணி நேரத்திற்கு மேல் பேசினார். சினிமாவில் புகழ் வெளிச்சம் கிடைக்கும்போது நம் குணத்தை அது மாற்றாமல் இருக்க வேண்டும். வெற்றி கூட சுலபம்தான்.. ஆனால் அதை தக்க வைக்க பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது. இத்தனை வருடமாக சினிமாவில் இருந்தாலும் என்னுடைய கனவும் நேற்று வந்து சினிமா பண்ணுறவங்க கனவும் ஒன்றுதான்.. கற்பனைக்கும் கனவுக்கு வயதில்லை” என்று கூறியுள்ளார்.

படபிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர் வெளியீட்டாக படம் தயாராகி வருகிறது.