ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் புதிய திரைப்படம் தொடங்கியது !

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாக ஆரம்பமானது.

தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்குப் புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையில், இந்திய சினிமாவில் ஒரு புதிய பிரம்மாண்டமாக,  புதுமையான களத்தில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் தொடர்ச்சியாக,  ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில், மிகப்பிரம்மாண்டமான படமாக இப்படம் இருக்கும். இதுவரை திரையில் தோன்றியிராத மிக வித்தியாசமான தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தென்னிந்தியா முழுக்க, இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில்,  பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்பராயன் வடிவமைக்கவுள்ளார்.

  • படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும்  தொழில் நுட்பக் கலைஞர்களின் முழு  விவரங்கள் ஒவ்வொன்றாக, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.