ஒடிடியில் படம் பார்த்தால் வேலைக்கு ஆகாது – ’டைட்டில்’ பட விழாவில் ராதாரவி பேச்சு!

டிபிகே இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் டில்லி பாபு.கே தயாரிப்பில், ரகோத் விஜய் இயக்கத்தில் விஜித் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘டைட்டில்’. அனல் ஆகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலெர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ராஜ்கபூர், பேரரசு, ஜி.எஸ்.விக்னேஷ், நடிகர்கள் ராதாரவி, மைம் கோபி, ஜீவா, ஆர்.கே.சுரேஷ், பெசண்ட் ரவி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், “ஒரு திரைப்படம் எடுப்பது என்பது மிகப்பெரிய சிரமமான விஷயம். அதிலும், சிறிய படத்தை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல. எனவே, படத்தில் நடிக்கும் நடிகர்கள் அந்த படத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வேண்டும். இதை எனது வேண்டுகோளாகவே வைக்கிறேன்.” என்றார்.

படத்தின் இயக்குநர் ரகோத் விஜய் பேசுகையில், “ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறோம். இது நல்ல படம் என்பதை மக்களுக்கு சொல்வது பத்திரிகைகள் தான். ஆகவே, இந்த படத்தை பத்திரிகையாளர்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் பேசுகையில், “என்னால் முடியாது என்று நான் நினைத்த பொழுது என்னை நம்பி என்னால் முடியும், என்று என்னை நம்பியவர் என் தாய். என் தாய்க்கும் எனது சீதா பாட்டிக்கும் இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 6 படங்கள் நின்று போய்விட்டது. இது எனது 7 வது படம், நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

நடிகர் ராதாரவி பேசுகையில், “ஒரு படம் என்றால் அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வேண்டும். நடிகர்கள் தங்களது சம்பளத்தை தாங்களே ஏற்றிக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொடுத்தால் வாங்கி கொள்ளாமல் இருக்கவா முடியும். ஒரு படத்தை காப்பதனுமா அது தமிழ்நாட்டு மக்களால் மட்டுமே முடியும். எல்லோரும் படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும். ஒடிடியில் பார்த்தால் வேலைக்கு ஆகாது. திரையரங்கம் சென்றால் படம் பார்த்துவிட்டு வர வேண்டும், அதைவிட்டு விட்டு பாப்கார்ன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை உண்ண வேண்டாம்.

ஒரு பெரிய நிறுவனம் நினைத்தால் வெற்றி படம் எடுக்க முடியும் என்பதை தாண்டி தமிழன் படம் எடுத்தால் வெற்றி பெறவேண்டும் என்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும். நடிகர் கமல் இந்த வயதிலும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார் என்றால் அதற்கான அவர் பெரிய அளவில் உழைத்திருக்கிறார். எந்த நேரமும் சினிமா பற்றியே சிந்திக்கிறார். சிறிய படங்கள் வெற்றி பெற வேண்டுமானால் அந்த படத்தில் பணியாற்றியவர்கள் விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் ஒத்துழைபு கொடுக்க வேண்டும். இந்த டைட்டில் படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “எதிர்மறை தலைப்புகளை வைத்தாலும் வெற்றி குடுக்க முடியும் என்பதை நிரூபித்தவர் கே.பாக்யராஜ் அவர்கள். என்னுடைய திருப்பாச்சி படத்தின் தலைப்புக்கும் அப்படிப்பட்ட எதிர்மறை கருத்துக்கள் வந்தது. இருந்தாலும் அடையெல்லாம் கடந்து அந்த படம் வெற்றி பெற்றது. இந்த டைட்டில் படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “திரையரங்கில் டிக்கெட் எடுப்பதற்கு ஆன்லைன் வழித்தளத்தயே பயன்படுத்த வேண்டும். அதுவே ஒரு சிறந்த வழி. எனவே சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமே வாங்க முடியும், என்ற ஒரு நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதை நான் கோரிக்கையாக வைக்கிறேன். யூடியூப் வலைதளங்களுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாகரீகமான தலைப்பு வைங்க. மக்களை தவறாக வழி நடத்தாதீங்க. தலைப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு திரைப்படத்திற்காகட்டும், செய்திக்காகட்டும் தலைப்பு மிக மிக முக்கியம். ஆனால், இந்த படத்தின் தலைப்பே ‘டைட்டில்’ என்பதால் ரசிகர்களை நிச்சயம் ஈர்க்கும்.” என்றார்.

கே.பாக்யாராஜ் பேசுகையில், ”ஒரு படத்தின் தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுவே மக்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்க்கும். குறிப்பாக பெண்களை ஈர்க்கும் வண்ணமே ஒரு தலைப்பு இருக்க வேண்டும் என்று அந்த காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது. எனது படத்தில் கூட நிறைய எதிர்மறை தலைப்பு வைக்கின்றேன் என பல்வேறு விதமான விமர்சனங்கள் எனக்கு எதிராக வரும். ‘சுவரில்லா சித்திரம்’ என்ற படம் இது போன்ற எதிர்மறை அலைகளை மீறி வெற்றி பெற்றது. எனது அனைத்து படங்களிலும் தலைப்பு என்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும், அதே சமயத்தில் மக்களை யோசிக்க வைக்கும் வண்ணம் இருக்கும். இந்த படத்தின் தலைப்பும் ‘டைட்டில்’ என்று இருப்பது யோசிக்க வைக்கிறது. நிச்சயம் படமும் வெற்றி பெறும்.” என்றார்.

இறுதியாக பேசிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஒரு திரைப்படத்தை எவ்வாறு பிரபலமடைய செய்யலாம் என்பதனை விவரித்தது மட்டும் இல்லாமல், திரையுலகில் காலடி எடுத்து வெய்ப்பதற்கு பொறுமை மற்றும் நம்பிக்கை தேவை. அது உங்களிடம் இருக்கின்றது என்றால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நாம் ஒன்று கன்வின்ஸ் ஆகனும் இல்லை என்றால் கன்வின்ஸ் பண்ணனும். விட்டு குடுத்தால் தான் ஒரு படம் பண்ண முடியும். திரைப்படம் எடுப்பது என்பது பல்வேறு தியாகம் மற்றும் இழப்புகளை உள்ளடக்கியது, என்றார்.