ஒத்த கருத்துடைய இருவர் உலகத்தில் இல்லை: ‘ பியூட்டி’ பட இயக்குநர் கோ.ஆனந்த சிவா!

தான் இயக்கும் ‘ பியூட்டி’ படத்தைப் பற்றி இயக்குநர் கோ. ஆனந்த் சிவா கூறும் போது,

“முற்றிலும் வித்தியாசமான, எதிர்மறை எண்ணம் கொண்ட ஒருவருடன் நான் பழக நேர்ந்த பொழுது, அவரின் செயல்பாடுகள் என்னைப் பெரிதும் பாதித்தன. அவரிடம் நான் பார்த்த பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து நான் எழுதி, இயக்கியிருக்கும் படம்தான் இந்த ‘பியூட்டி’ .!

”ஒத்த கருத்துடைய இருவர் உலகத்தில் இல்லை” என்று சொல்லப்படுவதுண்டு… மதுவில் கூட பலவிதமான மணம், நிறம், சுவை கொண்ட மது வகைகள் இருக்கின்றன… போதைக்காக என்றாலும் அவரவர்களுக்குப் பிடித்தமான மணம், நிறம், சுவையைத்தான் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்… இது எல்லோருக்குமான பொதுவான ரசனை… என் கதாநாயகனுக்கும் அப்படியொரு விருப்பம் இருக்கிறது… ஆனால், நாயகியின் விருப்பம் முற்றிலும் வேறாக இருக்கிறது… இதனால், அவர்களின் அழகான காதலில் சிக்கல்கள் உருவாகி, பெரிதாகி ஆபத்தில் போய் முடிகிறது…
அந்த இளம் காதலர்களின் வாழ்க்கை என்னவாகிறது? இதுதான் ‘பியூட்டி’ படத்தின் கதை செல்லும் பாதை.

இப்படம் சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளுடன் பரபரப்பான பொழுது போக்குப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது…
கதைக்குப் பொருத்தமான கதாபாத்திரமாய் மாறியிருக்கும் ரிஷியும், அறிமுகமாக இருந்தாலும் கதையின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் நாயகி கரீனா ஷாவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்…காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

கதைக்கும், கதை நடக்கும் காலகட்டத்துக்கும் ஏற்ப ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆர்.தீபக் குமாரும், பாடல்களுக்கு மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இசையமைப்பாளர் இலக்கியனும் “பியூட்டி”யின் உருவாக்க வெற்றியில் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள்…
இரண்டு பாடல்களை அழகான தமிழ்ச் சொற்களால் மிகச்சிறந்த பாடல்களாக்கி இருக்கிறார் திரு.வெ.இறையன்பு அவர்கள்…
மற்றொரு பாடலாசிரியர் தமிழ்முருகன், எடிட்டர் சங்கர்.K, ஸ்டண்ட் மாஸ்டர் “Fire” கார்த்திக், ஆர்ட் டைரக்டர் ஜெயவர்மா எனத் திறமைக் கரங்கள் கொண்ட அனைவரின் ஒத்துழைப்புடன் ‘பியூட்டி’எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியிருக்கிறது…

‘பியூட்டி’யை பொறுப்புடன் தன் தோளில் தாங்கிக் கொண்டு உலகமெங்கும் கொண்டு சேர்த்துவிடும் உத்வேகத்தோடு பரபரப்பாக இயங்கும் ஓம் ஜெயம் தியேட்டர் படநிறுவனத் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான ஆர்.தீபக் குமார் அவர்களின் முயற்சியால் “பியூட்டி” நிச்சயமாக ஒரு வெற்றிப் படமாக அமையும்..!” என்கிறார் நம்பிக்கையுடன்.

பியூட்டி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது .இவ்விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் பாடல்களை வெளியிட,விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பெற்றுக் கொண்டார்.இயக்குநர் ஆர். அரவிந்தராஜ், ஆனந்தம் யூத் பவுண்டேஷன் எஸ் செல்வகுமார் ,கவிஞர் ஆ. ஜான் தன்ராஜ், மாத்தி யோசி இதழ் ஆசிரியர் கே.லோகநாதன், முன்னாள் காவல்துறை அதிகாரி டி.டி. சுந்தரவரதன் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.