கெளதம் கார்த்திக்- சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது!

பார்சா பிக்சர்ஸ் P.R. மீனாக்‌ஷி சுந்தரம் – பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் I B கார்த்திகேயன் வழங்கும் கெளதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது

கெளதம் கார்த்திக் – சரத்குமார் இருவரும் இணைந்துள்ள புதிய படம் ஒன்றிற்கு ‘கிரிமினல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு தீவிரமான க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் இந்தப் படத்தை எழுதி இயக்க, பார்சா பிக்சர்ஸின் P.R. மீனாக்‌ஷி சுந்தரம், IB கார்த்திகேயனின் பிக் பிரிண்ட் பிக்சர்ஸூடன் இணைந்து தயாரிக்கிறது. ஜனவரி 23, 2023-ல் மதுரையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொத்தப் படத்தையும் 40 நாட்களில் ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

பார்சா பிக்சர்ஸின் தயாரிப்பாளர் P.R. மீனாக்‌ஷி சுந்தரம் பேசும்போது, “எங்களுடைய புதிய புராஜெக்ட்டான ‘கிரிமினல்’ வெற்றிகரமாக மதுரையில் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. மொத்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலாக 40 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் கெளதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிக்க இருக்கிறார்கள். கெளதம் கார்த்திக் அக்யூஸ்ட்டாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும் புதிதாகவும் பார்வையாளர்களுக்குத் தெரிவார்”.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் IB கார்த்திகேயன் பகிர்ந்து கொண்டதாவது, “‘கிரிமினல்’ படத்தின் கதையும், தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் அதைத் திரைக்கதையாக மாற்றியிருக்கக் கூடிய விதமும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் விதமாக அமையும். அவர் கதையை சொன்னபோது, கதையின் பல தருணங்கள் ஒரு அனுபவமிக்க தேர்ந்த இயக்குநர் சொல்வது போல இருந்தது. கெளதம் கார்த்திக் , சரத்குமாரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.