கோலிவுட்டின் அழகான அம்மாவாக வலம் வருகிறார் – நடிகை ஆஷா சரத் !

வெகு சில நடிகைகளே அம்மா கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கியும் அதே நேரம் பிரபலமாகவும் மாறியுள்ளார்கள். இதற்கு சமகால எடுத்துக்காட்டாக ஆஷா ஷரத் விளங்குகிறார்.அதற்கு ஒரு உதாரணமாக ‘அன்பறிவு’ திரைப்படத்தில்,அம்மா பாத்திரத்தில் அவரது அருமையான நடிப்பிற்காக, ஆஷா சரத் இப்போது பெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.

இது குறித்து கூறிய நடிகை ஆஷா ஷரத்…
“தமிழ்த் துறையில் எனது நடிப்புக்கு கிடைத்து வரும் அங்கீகாரத்தைப் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. த்ரிஷ்யம் படத்தொடர் எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இயக்குநர் ஜீத்து ஜோசப் எனக்கு அற்புதமானதொரு பாத்திரத்தை வழங்கினார், அந்த கதாபாத்திரம் ஒரு வலுவான போலீஸாகவும், அதே நேரம் மனதளவில் உடைந்து போன தாயாக, குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் பாத்திரமாகவும் இருந்தது. அதில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் தமிழ் ரீமேக் மூலம் கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகருடன் திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது நடிப்பை விமர்சகர்கள் ,பார்வையாளர்கள் பாராட்டிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போது, அன்பறிவு படத்தில் எனது கதாப்பாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்து வருவது என்னை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தியுள்ளது .
அடிப்படையில் நான் பரதநாட்டிய நடனக் கலைஞர், கேரளாவில் நடக்கும் அனைத்து சர்வதேச விழாக்களிலும் நான் பங்கேற்று நடனமாடியுள்ளேன். என் நடனத்திறமை குறிப்பிடத்தக்க வகையில், நடிப்பின் நுணுக்கங்களை வெளிப்படுத்தவும், நடிகையாக எனது வாழ்க்கையை வடிவமைப்பதிலும், எனக்கு பேருதவியாக இருந்துள்ளது.

தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் மையமாக உள்ளது. இது மற்ற மாநில திரைத்துறை நடிகர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஒரு அழகான பாத்திரத்தை அளித்து, அவர்களை அபிமான நடிகர்களாக மாற்றி வருகிறது. இங்குள்ள அனைவரின் அன்பையும் பாராட்டையும் நான் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறும் ஆஷா ஷரத் தற்போது தமிழ்திரைத்துறையில் பெரும் நட்சத்திரங்களின் படங்கள் பலவற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.