‘க்’ விமர்சனம்

நாயகன் யோகேஷ் ஒரு கால்பந்து வீரர். அவருக்கு விளையாட்டின் போது அடிபட்டத் தலை மட்டும் காலில் காயம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யோகேஷ் அங்குள்ள ஜன்னல் வழியாக ஒரு கொலை நடப்பதைப் பார்க்கிறார

கொலையைத் தான் பார்த்ததாகப் போலீஸ் மற்றும் மருத்துவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவர்களோ அதை நம்பாமல் அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள். மேலும் யோகேஷுக்கு உளவியல் ரீதியாக பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இறுதியில் உளவியல் பிரச்சினையிலிருந்து யோகேஷ் மீண்டாரா? கொலைக்கும் யோகேஷுக்கு சம்பந்தம் இருந்ததா? கொலை செய்தது யார் என்பதை யோகேஷ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கஃ கதை.

படத்தில் வசந்த் சந்திரசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் யோகேஷ். புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு சரியாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் முக பாவனைகளைக் கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார். இவரது மனைவியாக வரும் அனிகா கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்திருக்கிறார்.

தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார் குரு சோமசுந்தரம். சின்னச் சின்ன அசைவுகளில் கூட யதார்த்த நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். ஒய் ஜி மகேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜீவி படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய பாபுதமிழ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். மிகவும் சிக்கலான கதையை எடுத்து இயக்கியதற்குப் பாராட்டுகள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை வசனங்கள் மற்றும் காட்சிகளைக் கவனித்தால் மட்டுமே படத்தின் கதை தெளிவாகப் புரியும் .அந்தளவிற்கு எடுத்து இருக்கிறார். சின்ன சின்ன வசனங்களுக்கு கூட இறுதியில் அர்த்தம் கொடுத்து இருக்கிறார்.

கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையைக் காட்சிகளோடு ஒன்ற வைத்திருக்கிறார். ராதா கிருஷ்ணனின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

மொத்தத்தில் ‘க்’ புதிய முயற்சி எனப் பாராட்டலாம்.