சிஷ்யரின் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி வைத்த இயக்குநர் வசந்த்!

தனது உதவி இயக்குநரின் தயாரிப்பு நிறுவன துவக்க விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய இயக்குநர் வசந்த்

இயக்குநர் வசந்த்திடம் இடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் கண்ணன் சுந்தரம். தற்போது சென்னை வளசரவாக்கத்தில் ‘தேர்ட் ஐ டாக்கீஸ்’ (THIRD EYE TALKIES) என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது.

மதிப்பிற்குரிய இயக்குநர் வசந்த் தலைமையில் இயக்குநர்கள் அஹமது, பிரேம்குமார், எங்கேயும் எப்போதும் சரவணன், தேவ் இயக்குனர் அர்ஜித் ரவிசங்கர், ‘அடங்காதே’ சண்முகம், க/பெ ரணசிங்கம் புகழ் விருமாண்டி, சதீஷ் செல்வகுமார், SK வெற்றிச்செல்வன், ஆர்கே மற்றும் நடிகர் பக்ஸ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிறுவனம் துவங்கியது குறித்து நிறுவனர் கண்ணன் சுந்தரம் கூறும்போது, “திரையுலகில் இத்தனை வருட அனுபவத்தை முதலீடாக வைத்து தேர்ட் ஐ டாக்கீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் படங்கள், யூடியூப் சேனல்கள், இணையதளம் போன்ற வெவ்வேறு தளங்களில் பயணிக்க உள்ள இந்நிறுவனம் பின்னாளில் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், “இதனால் எனது சினிமா பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இறைவன் மற்றும் 96 புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ஆகியவற்றில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். அடுத்த வருடம் ஜூன் மாதம் தனியாக படம் இயக்கும் வகையில் அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்” என்றும் கூறியுள்ளார் கண்ணன் சுந்தரம்.