சூர்யா – இயக்குநர் ஹரி – தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா மீண்டும் ”அருவா” திரைப்படத்துக்காக இணைகிறார்கள்!

இந்தியாவில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக்காகி, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்று, நேரடி தமிழ் படங்களுக்கு  நல்ல வியாபாரத்தை வெளிமாநிலங்களில் ஆரம்பித்து வைத்த திரைப்படம் சிங்கம். சூர்யா நடிப்பில் வெளிவந்த இப்படத்தை இயக்குநர்  ஹரி இயக்கி , ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா பிரமாண்ட  பொருட்செலவில் தயாரித்திருந்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த வெற்றிக்கூட்டணி “அருவா“ திரைப்படத்துக்காக மீண்டும் இணைகிறது.

           தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் K .E .ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் “அருவா“ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 39வது படமான இது இயக்குனர் ஹரிக்கு 16வது படம், சூர்யாவும் இயக்குனர் ஹரியும் இணையும் 6வது படமாகும்.

சூர்யா , இயக்குநர் ஹரி , தயாரிப்பாளர் K .E .ஞானவேல்ராஜா ஆகியோருடன் முதன் முறையாக இப்படத்தின் மூலம்  இசையமைப்பாளர் D.இமான் இணைகிறார்.

இந்தியளவில் புகழ் பெற்ற முன்னணி நடிகை ஒருவர் இதில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கி ஒரே ஷெட்யூலாக நடைபெற்று 2020 தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது.

      சிங்கம், பாகுபலி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு படங்களை தயாரித்தும், விநியோகித்தும் மக்களை மகிழ்வித்து வரும் முன்னணி தயாரிப்பாளரான ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல் ராஜா மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ள இப்படத்தை மிகப்பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.