சூர்யா படம் வந்தால் பயப்படும் தெலுங்கு ஹீரோக்கள்: நாகார்ஜுனா பேச்சு

IMG_1927
பிவிபி சினிமாஸ் தயாரிக்க , நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி தமிழ்- தெலுங்கு இரண்டு மொழிகளில் இயக்கும் படத்தின் தமிழ் வடிவம்தான் ‘  தோழா’ . இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியின் அரங்கத்தில் நடை பெற்றது.

படம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி நடிகர் சிவகுமார் , கலைப்புலி எஸ் தாணு, டி.சிவா, நடிகர் சூர்யா, நடிகர் சங்கம் சார்பில் பொன்வண்ணன் , குட்டி பத்மினி, லலிதகுமாரி, இயக்குநர்கள் மகிழ் திருமேனி , இறுதிச் சுற்று சுதா கொங்கரா, அட்லி , தயாரிப்பாளர்கள் சசிகாந்த் ,  தனஞ்செயன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர் .

கோபி சுந்தர் இசையில் உருவான  ஏழு பாடல்களுக்கும் தனித் தனி டீசர் வெளியிடப்பட்டு ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு பிரபலம் வெளியிட்டு படக் குழுவை வாழ்த்திப் பேசினர்.

“பிவிபி நிறுவனம் , நாகர்ஜுனா , கார்த்தி ,தமன்னா என்று மிக சரியானவர்கள் இணைந்து இருக்கும் படம் இது . எதையுமே பிரம்மாண்டமாக  செய்வதில் வல்லவர்கள் பிவிபி நிறுவனத்தினர் . இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். எனது வாழ்த்துகள் ” என்றார் கலைப்புலி எஸ் தாணு .

தயாரிப்பாளர்  டி  சிவா தமன்னாவைப்புகழ்ந்தார் . “மும்பையில் இருந்து வந்து உழைத்து அவர் அடைந்திருக்கும் உயரம் பாராட்டுக்குரியது “என்றார் .

“கார்த்தியோடு பருத்தி வீரன் படத்தில் நடித்த பெருமை எனக்கு உண்டு . மிகச் சிறந்த நடிகராக அவர் உயர்ந்து கொண்டு இருக்கிறார் . நாகர்ஜுனா சார் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல , சிறந்த மனிதரும் கூட, சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள் “என்று கூறி தோழா படத்தை வாழ்த்தினர் பொன். வண்ணன்

“நாகார்ஜுனாவோடு ஒரு தெலுங்குப் படத்தில் நடித்த பெருமை எனக்கு உண்டு . மிகச் சிறந்த மனிதர் அவர் ” என்று சொன்ன குட்டி பத்மினி , கார்த்தியையும் படக் குழுவையும் வாழ்த்தினார்

“நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவள் நான் . அந்த வகையில் இந்த தோழா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து  கொண்டது சந்தோசம் தருகிறது ” என்றார் லலித குமாரி .

மணிரத்னம் இயக்கி சூர்யா நடித்த ஆயுத எழுத்து படத்தில் கார்த்தியும் தானும் உதவி இயக்குநராக பணியாற்றியதை குறிப்பிட்டுப் பேசிய இயக்குனர் சுதா ” அப்போது எல்லாம் கார்த்தி எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். மணிரத்னம் சார் அதை பயங்கரமாக கிண்டல் செய்வார்.  கார்த்தி இப்படி உடலை செதுக்கி ஒரு நடிகராக உயர்வார் என்று நான் அப்போ யாருமே நினைக்கவே இல்லை . அவரது முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள் . எனது இறுதிச் சுற்று படம் வெளிவர பிவி நிறுவனம் பல உதவிகள் செய்தது. அதற்கு நன்றி ” என்றார் .

நடிகர் சிவகுமார் தன் பேச்சில் ” 1940களில் தமிழ்நாட்டில் வெளியான தேவதாஸ் என்ற தெலுங்குப் படம் பட்டி தொட்டியெல்லாம் சக்கைப் போடு போட்டது . அதன் ஹீரோ நாகேஸ்வரராவ் . அவரது தீவிர ரசிகன் நான் . அந்த நாகேஸ்வர ராவின் மகன்தான் இன்று நம்மிடையே இருக்கும் இந்த நாகார்ஜுனா . நாகேஸ்வரராவின் மகனோடு அவரது ரசிகனான எனது மகன் நடிப்பது எனக்கு பெருமை ” என்றார்

இசையமைப்பாளர் கோபி சுந்தர் பெசும்போது “கார்த்தி நாகார்ஜுனா நடிக்கும் படத்துக்கு இசை அமைத்தது போல , சூர்யா சாரின் படத்துக்கும் இசையமைக்க வேண்டும் எனது எனது ஆசை ” என்றார்

படத்தின் இயக்குநர் வம்சி  “பொதுவாக ரெண்டு ஹீரோவை வைத்து இயக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் நாகார்ஜுனா சார் , கார்த்தி சார் இருவரும் அவ்வளவு நட்புடன் பழகியதால் எந்தப் பிரச்னையும் இல்லை . ஆனால் கார்த்தியும் தமன்னாவும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள் . ஆனால் அது நடிப்பில் சாதிப்பதற்கான சண்டை” என்றார்

தமன்னாவிடம் கொஞ்சு தமிழ்  எதிர் பார்த்தால் கெஞ்சு தமிழ்  பேசினார். கார்த்தி  ரசிகர்கள் எல்லாம் சின்னப் பையன்களாக வந்திருந்த போதிலும் பாய்ஸை பார்த்து  ஐ லவ் யூ  கைஸ் என்றார் தமன்னா. தொடர்ந்து பேசிய தமன்னா,    உங்களோட பகிர்ந்துக் கொள்ள”உள்ளுக்குள்ள ” இன்னும் நெறைய இருக்கு , அதுக்கு இப்போ நேரம் போதாது என்றவர் கார்த்தி   பற்றியும் சில விஷயங்கள் பாராட்டி புகழ்ந்தார். தனது பேச்சில் ” எல்லோருக்கும் நன்றி . இந்த வாய்ப்பு அளித்த இயக்குநர் , தயாரிப்பாளர் பிவிபி அனைவருக்கும் நன்றி , நாகார்ஜுனா சாரோடும் கார்த்தியோடும் நடித்தது மகிழ்வான விஷயம்.  கார்த்தியோடு போட்டி போடுவேன் . ஏன்னா அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது . . யாரிடம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அவர்களோடுதான் போட்டி போட வேண்டும் ” என்றார் .

கார்த்தி பேசும் போது,. “இந்தப் பள்ளியில் தான் நானும் அண்ணன் சூர்யாவும் படித்தோம் . இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த பள்ளிக்கு கிரிக்கெட் ஆட வந்திருப்பதாக இப்போது  என்னிடம் நாகர்ஜுனா சார் சொன்னார் .

ஒருவருக்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத இரண்டு நண்பர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெண் ஆகிய கதாபாத்திரங்களைக் கொண்டது இந்த தோழா படம்.   நானும் நாகர்ஜுனா சாரும் இப்போது உண்மையிலேயே அப்படியே ஆகி விட்டோம் . ஹைதராபாத்தில் அவரது ஸ்டுடியோவில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது .

சைக்கிள் ஓட்டுவது எனது பொழுதுபோக்கு . அங்கேயும் ஓட்டினேன் . அவரிடம் பேசும்போது ”எதற்கு இவ்வளவு ஸ்பீட் பிரேக்கர்ஸ் போட்டு இருக்கீங்க/” என்றேன்.  சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் சைக்கிள் எடுத்துக் கொண்டு போனால் , ஒரு ஸ்பீட் பிரேக்கரையும் காணவில்லை . எனக்காக உடனே எல்லாவற்றையும் ஆள் வைத்து தூக்கி விட்டார் . எவர் என் மீது கொண்ட அன்புக்கு வேறு என்ன சொல்ல வேண்டும் ?” என்றார் .

நாகார்ஜுனா பேசும்போது ” நான் சென்னையில் பிறந்தவன்.எனவே நானும் சென்னைக்காரன்தான்.

இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவம் . கார்த்தியும் நானும் மனதளவில் இந்தப் படத்துக்குப் பிறகு மிகவும் நெருங்கி விட்டோம் .

படத்தில் நான் முழுக்க சக்கர நாற்காலியிலேயே உட்கார்ந்து இருக்கும் கேரக்டர். என்னை உட்கார வைத்து விட்டு கார்த்தியும் தமன்னாவும் நிறைய டான்ஸ் ஆடி இருக்கிறார்கள் . அப்போது எனக்கும்  எழுந்து ஆட வேண்டும் போல இருக்கும் .

இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா ?

சூர்யாவுக்கு ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு . குறிப்பாக தெலுங்கானாவில் இருக்கும் ரசிகர் படை அவரது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல . சூர்யாவின் படம் தெலுங்கில்  டப்பிங் ஆகி வருகிறது என்றால் தெலுங்கு ஹீரோக்கள் பயந்து போய் தங்கள் படத்தின் ரிலீசை தள்ளி வைப்பார்கள் . அவ்வளவு பெரிய மாஸ் அவர் . அவரது அடுத்த படம் 24- என்னுடைய வாழ்த்துகள் ” என்றார் , கள்ளமில்லா வெள்ளை மனதோடு !

அது மட்டுமல்ல கார்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி , இதயத்தை திருடாதே படத்தில் அவர் பேசிய ‘ஓடிப் போலாமா?” வசனத்தை பேசி அரங்கை அதிர வைத்தார் .

குட்டி ஹெலிகாப்டர் பறந்து வந்து படத்தின் பாடல்கள் அடங்கிய  தகடை அளிக்க, பாடல்களை வெளியிட்டுப் பேசிய சூர்யா ” எனது 24 படம் பற்றி நிறையப் பேர் அரங்கில்  குரல் கொடுக்கிறீர்கள் .இன்னும் இரண்டு வாரத்தில் படத்தின் டீசர் வருகிறது . அதுவரை பொறுமை

இப்போது தோழா பற்றிப் பேசுவோம் .

எல்லோருக்கும் எனது வாழ்த்துகள். நாங்கள் படித்த பள்ளியில் நட்பின் பெருமை சொல்லும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது .

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பற்றி அடிக்கடி கார்த்தி வியந்து சொல்வார். கதை , திரைக்கதை, பாடல்கள், படம் எடுக்கப்பட்ட விதம் அனைததையும் பற்றிப் பாராட்டிப் பேசிக் கொண்டே இருப்பார்

அயன் படத்தில் கூட நடித்தது முதலே பார்த்து வருகிறேன் . தமன்னா  சிறந்த உழைப்பாளி மற்றும் திறமைசாலி . அவரது முயற்சியும் உழைப்பும்தான் அவரை உயர்த்தி இருக்கிறது .

கோபி சுந்தரின் பாடல்கள் எல்லாமே மிக சிறப்பாக இருக்கிறது . விரைவில் ஒரு படத்தில் அவரோடு சேர்வேன்.

எங்கள் நாகார்ஜுனா சார் .. எப்பேர்ப்பட்ட மிகச் சிறந்த மனிதர் !

”வாழ்க்கை என்றால் பிரச்னைகள் வரத்தான் செய்யும் . அதை சந்தோஷமாக எதிர்கொண்டால் பிரச்னை ஓடிவிடும்’ என்பார் . சொல்கிறபடியே வாழ்பவர் . அதனால்தான் இன்னும் இவ்வளவு இளமையாக அழகாக இருக்கிறார் . வாழ்க்கையைப் பற்றிய அவரது இந்த அற்புதமான பார்வை , நாகார்ஜுனா சாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டு,  பின்பற்ற விரும்பும் விஷயம் “என்றார் .

நன்றி உரையாற்றிய தயாரிப்பாளர் பரம் வி பொட்லுரி “தோழா ஒரு தமிழ் படம் . இதில் நடித்து இருக்கும் கார்த்தி தமிழ் . நாகர்ஜுனா மற்றும்  நாங்கள் தெலுங்கு .  இசையமைப்பாளர் கோபி சுந்தர் மலையாளம் . தமன்னா மும்பை .. அந்த வகையில் இது இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் படம் ” என்றார்.
ஜான்  நடன  அகடமியின் மேடை நடனத்தில்  புதுமை செய்ய மெனக் கெட்டதற்கு  ஓரளவு பலன் வந்துள்ளது. இந்த விழாவானது பிரம்மாண்டத்தால் களைக்  கட்டியது..  மா.. கா.ப. ஆனந்த்-துடன் இன்னொரு பெண் தொகுப்பாளரும் இணைந்து நிகழ்ச்சி வழங்கி ஒரு வழியாக சமாளித்து விட்டனர்; ஒரு  திருவிழா மாதிரி பிரமாண்டத்தால்  களை கட்டியது   தோழா  புதுப் படப் பாடல்கள்  வெளியீடு!