சென்னையில் ஒரு நெகிழ்ச்சி அனுபவம்!-தன்னார்வலர்களுக்கு நன்றி சொன்ன ஒரு விழா!

nss1.1.16சென்னையின் பெருமைகளாகவும் ,அடையாளங்களாவும் எல்.ஐ.சி. கட்டடம், ரிப்பன்கட்டடம், மெரினா பீச், அண்ணா நினைவிடம், கன்னிமரா நூலகம்,கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று சிலவற்றைக் கூறலாம்.

இப்போது இவை எல்லாவற்றையும் முந்திக் கொண்டு உலகம் முழுதும் பேசப்படுவதாக தன்னார்வலர்களின் தொண்டு சென்னையின் பெருமையாகியுள்ளது.

மழை வெள்ள பாதிப்பையும் தாண்டி உதவிக்கு நீண்ட கரங்கள் மழை  சோகத்தைக் கூட மூழ்கடித்து விட்டன. தன்னலம் கருதாத அவர்களின் சேவையைப் பாராட்டும்  வகையில் சென்னையில் பாராட்டுவிழா மற்றும் நன்றி கூறும் விழா நடைபெற்றது.

தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உருவான ‘நன்றி சொல்கிறோம்’  என்கிற பாடல் ஆடியோ உருவாகியுள்ளது.மனோஜ் கிருஷ்ணா, சமூக ஆர்வலர் ஏ.ராஜசேகர், ராஜகோபால் ,ராஜாராம் ஆகியோரால் இம் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இசையமைப்பாளர் பி.பி. பாலாஜி இசையில் , ஏர்டெல் சூப்பர் சிங்கர் வென்ற பாடகர்கள் சந்தோஷ் ஹரிஹரன், செண்பகராஜ், தீப்தி, வீணா, கிருஷ்ணசாய், வித்யா லெட்சுமி, சுஷ்மிதா பாடியுள்ளனர்.கவிஞர் விவேகா தன்னார்வலர்களின் சேவையில் மகிழ்ந்து சம்பளம் எதுவும் பெறாமல் இலவசமாக பாடல் எழுதிக் கொடுத்து ஊக்குவித்து இருக்கிறார்.

இதன் வெளியீட்டு விழா சென்னை போரூர் லீ பேலஸ் ஓட்டலில் நடந்தது.

விழாவில் பாடலை கவிஞர் விவேகா வெளியிட்டார்.

drs11விழாவில் நிவாரணப்பணிகளில் முழுமூச்சாகப் பங்கேற்ற  சென்னை நேஷனல் மருத்துவ மனையின்  மருத்துவ இயக்குநர் டாக்டர் டி.ஆர். ஹேமநாயக்குலு பேசும் போது,

” நாங்கள் செய்தது சிறு உதவிதான். வெள்ளம் என்று கேள்விப் பட்டவுடன் ஹொகனெக்கல் நினைவுக்கு வந்தது. முதல்நாள் 10 பரிசல்களை வரவழைத்தோம். மறுநாள் 15 பரிசல்களை வரவழைத்தோம்.   பலரைக் காப்பாற்றினோம். பரிசல் ஆட்களில் ஓட்டுபவருடன் உதவிக்கு ஒருவர் என்று வரவழைத்தோம். சிறப்பாகப் பணி செய்தார்கள். ” என்றார் அடக்கமாக .

சேலம் ஈஸ்ட் வெஸ்ட் குழுமத்தைச்சேர்ந்த டாக்டர் சபரிஷ் மோகன் குமார் பேசும் போது

” நாங்கள் மருந்து தயாரிப்பு கம்பெனி வைத்திருக்கிறோம். சென்னையில் நேஷனல் மருத்துவமனை தொடங்கவுள்ளோம். மழையின் போது உதவுவது களத்தில் இறங்குவது என்று முடிவு எடுத்தோம். எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 50 பேர் இறங்கினோம். பரிசல் மூலம் மீட்டது, உணவு, உடை, மருந்துகள் வழங்கியது, மருத்துவ முகாம் என்று பல ஆயிரம் பேரை காப்பாற்ற முடிந்தது. இதில் எங்களுடன் பலரும் இணைந்து கொண்டனர் எங்கள் ஊழியர்கள் ஆளுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று கொடுத்தனர். சில ஊழியர்கள் அரைமாத சம்பளம் கூட தரத்தயார் என்றனர். மும்பையில் எனக்கு பேராசிரியராக இருந்தவர் நிமேஷ்.அவர்  250 வாட்டர் பில்டர்கள் அனுப்பி வைத்தார்.

இதற்காக எங்களுடன் கரம் கோர்த்தவர்கள் பலர். சேலம் ‘சிட்டிசன் போரம்’ மூலம் பியூஷ் என்பவர் மூங்கில் வீடுகள் செய்து அனுப்பி யிருந்தார். சேலத்திலிருந்து இப்படி உதவி பொருள்கள் 22 லாரிகளில் வந்தன. ‘விஸ்வரூபம்’ போன்ற பல தன்னார்வ குழுக்கள் எங்களுடன் இணைந்து கொண்டது மகிழ்ச்சி யான நெகிழ்ச்சி அனுபவம். இதிலிருந்து ஒன்று புரிகிறது. உதவி செய்ய பணம் வேண்டாம். மனம் போதும் ” என்றார்.

சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் சென்னையில் தொடங்கவுள்ள மருத்துவமனை ‘சென்னை நேஷனல் மருத்துவ மனை’ இதன் கட்டமைப்பு வேலைகள்  இப்போதுதான் நடை பெற்று வருகின்றன. அடுத்த மாதம் மருத்துவமனை தொடங்கவுள்ளது.

கட்டமைப்புவேலைகள் நடைபெற்று வரும் போதே சென்னை வெள்ளம் வரவே மருத்துவமனையை நிவாரண முகாமாக மாற்றி, சமையல் கட்டாக மாற்றி சுமார் 15 ஆயிரம் பேரைக் காப்பாற்றி ஆயிரக்கணக்கான பேருக்கு உணவு சமைத்து உதவியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • viveka1.1ஆடியோ விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசும் போது ” இந்த வெள்ளம் நமக்குப் பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. எத்தனை கோடி கையில் வைத்திருந்தாலும் ஒரு பிடி சோற்றுக்காக காத்திருக்க வைத்தது. அப்போது தாயினும் சாலப் பரிந்து உதவிய இந்த தன்னார்வலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒலிம்பிக்கில் இந்தியா  10 தங்கப் பதக்கங்கள் வாங்கியிருக்கலாம். இந்தியா 10 நோபல் பரிசுகள் வாங்கியிருக்கலாம். அப்போதெல்லாம் கூட இவ்வளவு மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்து இருக்க மாட்டேன். சென்னையின் தன்னார்வலர்களின் உதவிகளைப் பார்த்து உலகமே திரும்பிப் பார்த்தது. அந்த மனித நேயத்தை எண்ணி மகிழ்ந்தேன்;நெகிழ்ந்தேன்.  சாதிகளைக் கடந்து மதங்களைக் கடந்து வேற்றுமைகளைக் கடந்து மனித நேயம் வெளிப்பட்டு இருக்கிறது.

2016- ஐ வரவேற்கும் நாம், நம் இளைஞர்கள் மூலம் விதைக்கப் பட்டுள்ள மனித நேய நம்பிக்கை பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த மனித நேய எழுச்சி.பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.  சமூக வலைதளங்களில் வம்பளப்பது மட்டுமே இளைஞர்கள் வேலை, வதந்தி பரப்புவது மட்டுமே இளைஞர்கள் வேலை என்று கேட்டவர்களை வாயடைத்து இருக்கிற அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. அந்த உதவும் எண்ணம் முனை மழுங்கடிக்கப் படக் கூடாது  என்கிற வகையில் ‘நன்றி சொல்வோம்’ பாடல் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். உதவும் கரங்களே உயர்ந்த கரங்கள் .அப்படிப்பட்ட தன்னலமற்ற தன்னார்வலர்களை கௌரவப் படுத்தும் முயற்சியில் என்னாலான பங்காக  இந்தப் பாடலை எழுதியுள்ளேன்.இந்த உயரிய செயலைச் செய்த தன்னார்வலர்களை உச்சிமோந்து பாராட்ட வேண்டும், போற்ற வேண்டும் ” என்றார்.

இசையமைப்பாளர் பி.பி.பாலாஜி பேசும் போது, ” வெள்ளம் வந்த போது நான் வீட்டில் இல்லை. வெளியிலிருந்து வீடு போன போது கார் நீரில் மூழ்கியிருந்தது. அந்த வேளச்சேரி முழுக்க நீர். நாமும் ஏதாவது செய்ய எண்ணி உதவினேன். உதவியவர்களுக்கு ஏதாவது செய்ய எண்ணிய போது  மனோஜ்கிருஷ்ணா, ஏ.ராஜசேகர்.ராஜகோபால், ராஜாராம் என்னை ஊக்கப் படுத்தி முன்னெடுத்து இம் முயற்சியை சாத்தியமாக்கினார்கள்.விவேகா இலவசமாகப் பாடல் எழுதி உதவியுள்ளார்” என்றார்.

தலைவாசல் விஜய் பேசும் போது”உலகிலேயே அதிகமான இணைஞர்களைக் கொண்ட நாடு நம் இந்தியா.இணைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். வெள்ளம் மழை உதவிகளோடு நின்று விடாமால் பிளாஸ்டிக்கை ஒழிக்கவும் முன்வர வேண்டும் ” என்றார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தன்னார்வலர்கள்   கலந்துகொண்டனர்.

 

பாடலைக்கேட்க இணைப்பு

https://www.youtube.com/watch?v=lBchm0KO1cM