சோனி பிக்சர்ஸ் -கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம்!

உலக நாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மற்றும் ’சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளன. இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51-ஆவது திரைப்படம் ஆகும். இப்படத்தை சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ், பன்முக நாயகன் கமல்ஹாசன் , ஆர்.மகேந்திரன் மற்றும் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகன் பிருத்விராஜ் நடித்த ‘நைன்’ எனும் மலையாளத் திரைப்படம் மூலம் தென்னிந்திய திரையுலகில் கால் பதித்தது சோனி பிக்சர்ஸ் நிறுவனம். மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘மேஜர்’ எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானது. தற்போது, தமிழ் சினிமாவில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உடன் இணைந்து இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51-ஆவது திரைப்படம் ஆகும். கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் இந்த ஆண்டு (2022) கோடை விடுமுறையில் வெளியாகிறது. ‘விக்ரம்’ திரைப்படம் ராஜ்கமல் நிறுவனத்தின் 50-ஆவது தயாரிப்பு.

இந்திய சினிமாவின் இணையற்ற நடிகரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் கூறுகையில், “ஒரு சிறந்த திரைப்படம் ரசிகர்களிடம் தாக்கத்தை உருவாக்க வேண்டும். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும். சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிப்பதில் பெருமையடைக்கிறேன்” என்றார்.

சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் விவேக் கிருஷ்ணானி கூறுகையில், “திரையுலக ஜாம்பவான் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும். ராஜ்குமார் பெரியசாமியின் கதை சொல்லும் திறமையாலும், பெரும் ரசிகக் கூட்டத்தின் மனங்களை ஈர்த்திருக்கும் சிவகார்த்திகேயனின் ஆற்றல்மிகு நடிப்பினாலும் இப்படம் நிச்சயம் பார்வையாளார்களால் கொண்டாடப்படும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத திரை அனுபவமாக இருக்கும். தனக்கென தனிச்சிறப்புகள் கொண்ட தமிழ்த் திரையுலகில் இத்திரைப்படத்தின் மூலம் கால் பதிப்பதில் சோனி பிக்சர்ஸ் பெருமையடைகிறது. பிராந்திய மொழிகளின் சினிமாச் சூழலை நன்கு அறிந்த, இந்திய சினிமாவில் கணிசமான தாக்கத்தை உருவாக்கிய திரையுலக ஆளுமைகளோடும், இளம் தலைமுறைகளோடும் அதிகளவில் எங்கள் பணி தொடருமென நம்புகிறோம்” என்றார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், “சிறப்பானதும் புதுமையானதுமான கதை அம்சம் கொண்ட இந்தப் படத்தை இயக்குவதில் பெருமிதம் அடைகிறேன். நான் சிறுவயதில் இருந்தே உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகன். அவர்மீது எனக்கு தனி மரியாதை உண்டு. அவருடைய நடிப்பு மற்றும் பன்முக திறமைகளைக் கண்டு வியந்திருக்கிறேன். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள் எனக்கு மிக நெருங்கிய நண்பர். இந்தப் படத்தை இயக்குவது என் மனதிற்குப் பிடித்த ஒன்று. மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்

இப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் கூறுகையில், “இந்தத் திரைப்படத்தில் நடிப்பது என்பது கலவையான பலவித உணர்வுகளை எனக்கு வழங்குகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்திய சினிமாவின் தலைசிறந்த கலைஞர். கலைஞானி. சர்வதேசத் திரையுலகில் தமிழ் சினிமாவின் அடையாளமாக வாழ்பவர். கலைமேதை கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. சர்வதேச அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கிய சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதிலும் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் சாத்தியமாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் என் நண்பர், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள்தான். அவருடைய சிறப்பான திரைக்கதையினால் இப்படம் வெற்றியடையும் என் உறுதியாக நம்புகிறேன். என் சினிமா வாழ்க்கையில் இப்படம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் எப்போது தொடங்கும் என ஆவலோடு இருக்கிறேன்” என்றார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தகவல் மற்றும் முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா:

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் மோஷன் பிக்சர் குழுமத்தின் கீழ் இயங்கும், உள்ளூர் மொழிகளில் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனமே, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்‌ஷன்ஸ். உலகின் பல பகுதிகளில் (ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், ஐரோப்பா, ரஷ்யா, கொரியா, சீனா, ஜப்பான், இந்தியா, மெக்சிகோ, பிரேசில் மற்றும் தைவான்) ஆண்டுக்கு 30 படங்களை இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்:

சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் டோக்கியோவை மையமாகக் கொண்ட சோனி கார்ப்பரேஷன் குழுமத்தின் கிளை. உலக அளவில் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பு, திரைப்படங்களின் உரிமையைப் பெறுதல் மற்றும் விநியோகம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.

தொலைக்காட்சித் தயாரிப்பு, உரிமை மற்றும் விநியோகம், தொலைக்காட்சி நெட்வொர்க்குகள், டிஜிட்டல் கன்டென்ட் உருவாக்கம் மற்றும் விநியோகம்; படப்பிடிப்பு வசதிகள், புதிய பொழுதுபோக்கு தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஆகியவையும் இந்நிறுவனத்தின் பணிகளில் அடங்கும்.

சோனி பிக்சர்ஸ் டெலிவிஷன் உலகம் முழுவதிலும் சொந்தமாகவும், பங்குதாரர்களோடு இணைந்தும் நடத்தும் பல தயாரிப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

கொலம்பியா பிக்சர்ஸ், ஸ்கிரீன் ஜெம்ஸ், ட்ரைஸ்டார் பிக்சர்ஸ், 3000 பிக்சர்ஸ், சோனி பிக்சர்ஸ் அனிமேஷன், ஸ்டேஜ் 6 பிக்சர்ஸ், AFFIRM பிலிம்ஸ், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் க்ளாசிக்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களை உள்ளடக்கியது மோஷன் பிக்சர் குழுமம்.

மேலும் தகவலுக்கு..
http://www.sonypictures.com/corp/divisions.html

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் 1981 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். தலைசிறந்த படைப்பான ‘ராஜ பார்வை’ படம் இதன் முதல் தயாரிப்பு. 40 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட மிகச் சில திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

’அபூர்வ சகோதரர்கள் ’ , ’சத்யா’, ’தேவர்மகன்’, ’குருதிப்புனல்’ மற்றும் விமர்சன ரீதியாக சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’ஹே ராம்’, ’விருமாண்டி’ மற்றும் ’விஸ்வரூபம்’ கலாட்டா கதையான ’சதி லீலாவதி’, என அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.

இந்தியத் திரை உலகிற்குப் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ததில் ராஜ்கமல் பிலிம்ஸ்தான் முன்னோடி. ‘குருதிப்புனல்’ திரைப்படத்தில் டால்பி ஸ்டீரியோ ஒலியை அறிமுகப்படுத்தியது, விஸ்வரூபத்தில் ஆரோ 3டி (Auro 3D) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது என உலக அளவிலான தொழில்நுட்பங்களை இந்திய மற்றும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை ராஜ்கமல் பிலிம்ஸையே சேரும்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள, அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு (2022 ) கோடையில் வெளியிடப்பட உள்ளது.