ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிக்கும் ‘இரும்பன்’ படத் தலைப்பை மாற்றிய சீமான்!

’பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’, ‘எட்டுத்திக்கும் பற’ ஆகிய படங்களை இயக்கிய கீரா, இயக்கும் புதிய படம் ‘இரும்பன்’. ஜூனியர் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.

லெமுரியா மூவிஸ் சார்பில் தமிழ் பாலா மற்றும் ஆர்.வினோத் குமார் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். லெனின் பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.அஹமத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளியில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தயாரிப்பாளர் கே.ராஜன், பாடலாசிரியர் சினேகன், இயக்குநர்கள் பொன்ராம், மு.களஞ்சியம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் சீமான் பேசுகையில்,

“தம்பி கீரா அற்புதமான எழுத்தாளர், படைப்பாளி அவருடைய இந்த படம் சிறப்பாக இருக்கும் என்பது முன்னோட்டமே சொல்லிவிடுகிறது. ஜூனியர் எம்.ஜி.ஆர், தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் போல் பெரிய இடத்துக்கு வர வேண்டும். இவர்கள் சினிமாவில் பின்புலத்தோடு அறிமுகம் ஆனாலும், சினிமாவில் நிலைத்து நிற்கா கடினமாக உழைக்க வேண்டும். தம்பி விஜய் சினிமாவில் வர தந்தை எஸ்.ஏ.சி தான் காரணம் என்றாலும், அந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டு இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக தம்பி விஜய் உயர்ந்ததற்கு அவரது கடின உழைப்பு தான் காரணம். சினிமா மட்டும் அல்ல, அனைத்து துறைகளில் முன்னேற உழைப்பு தான் முக்கியம். அந்த வகையில், ஜூனியர் எம்.ஜி.ஆர் கடினமாக உழைத்தால், ஐயா எம்.ஜி.ஆர் பெயரைக் காப்பாற்றலாம்.

ஐயா எம்.ஜி.ஆர் வீட்டு வழியாக செல்லும் போது இந்த படத்தின் பேனரை பார்ப்பேன். அப்போது வேறு ஒரு தலைப்பு வைத்திருந்தார்கள். தம்பி கீரா பெயரை அதில் பார்த்ததும். நிச்சயம் தம்பி நல்ல படத்தை தான் எடுத்திருப்பார் என்று நினைப்பேன். அப்போது அந்த தலைப்பில் எனக்கு மாற்று கருத்து இருந்தது. தற்போது குறவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் குறவர்கள் அல்ல, அவர்கள் மராட்டியத்தில் இருந்து இங்கு வந்தவர்கள், அவர்களை தவறாக குறவர்கள் என்று சொல்கிறார்கள். உண்மையான குறவர்கள் என்றால் அது தமிழர்கள்தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி தான். இதை நாம் மட்டும் சொல்லவில்லை .பல மேலை நாட்டு வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். மனிதம் பேசிய முதல் மொழி தமிழ் என்று அமெரிக்க வரலாற்று ஆசிரியர் சொல்கிறார். ஆக, இந்த பூமியில் தோன்றிய முதல் மனித இனம் தமிழர்கள் தான். அவர்கள் குன்றுகளில் வாழ்ந்ததால், குன்றில் வாழ்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டது. காலப்போக்கில் குன்றில் வாழ்ந்தவர்கள் என்ற வார்த்தை குறவர்களாக மாறிவிட்டது. ஆக, உண்மையான குறவர் இனம் என்பது தமிழர்கள் தான். 

Irumban

ஆனால், இன்று நம் அடையாளத்தை வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள், இதற்கான பிரச்சனையும் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் பெரிய அளவில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம், வாழலாம். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் எங்கள் அடையாளத்தையும், வரலாற்றையும் திருடாதீர்கள் என்று தான் சொல்கிறேன். இந்த பிரச்சனை தொடர்பாக என்னிடம் சிலர் முறையிட்டார்கள். உடனே தம்பி கீராவிடம் தலைப்பை மாற்றிவிடு என்று கூறினேன். படம் வெளியாகும் போது பிரச்சனை வரும் அப்போதும் நான் உனக்கு எதிராகக் குரல் கொடுக்க நேரிடும் தம்பி, அதனால் இப்போதே தலைப்பை மாற்றிவிடு என்றேன், அவனும் அதை ஏற்றுக்கொண்டு தலைப்பை ‘இரும்பன்’ என்று மாற்றிவிட்டார். இந்த தலைப்பும் சிறப்பாக இருக்கிறது. 

படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் நன்றாக இருக்கிறது. தம்பி ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் லெனின் பாலாஜியின் பணியும் சிறப்பாக இருக்கிறது. காடுகளையும், நீர் வீழ்ச்சிகளையும் படமாக்கிய விதம் நன்றாக இருக்கிறது. காடுகள் இல்லை என்றால் இன்று நாடுகள் இல்லை. காடுகள் இருப்பதற்கு பறவைகளும், விலங்குகளும் தான் காரணம், எனவே அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் வாழ்த்துகள்.” என்றார்.

facebook sharing button