நவம்பர் 28-ல் கௌதம் கார்த்திக் -மஞ்சிமா மோகன் திருமணம்!

நடிகர் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமணம் நவம்பர் மாதம் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்த செய்தியைப் பகிர இருவரும் இன்று ஊடகங்களைச் சந்தித்தனர்.

இது ஒரு காதல் திருமணம். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் முழு மனதுடன் சம்மதித்துள்ளார்கள்.

‘தேவராட்டம் ‘படத்தில் இருவரும் இணைந்து நடித்த பிறகு ஓராண்டுக்குப் பிறகு தான் நட்பு காதலாக மாறியது.

இது குறித்து கௌதம் கார்த்திக் பேசும்போது.


” நான் தான் முதலில் காதலைச் சொன்னேன்.
பொறுப்பில்லாமல் இருந்த என்னைப் பொறுப்பான மனிதனாக மாற்றியதில் மஞ்சிமாவின் பங்கு உண்டு.நான் சோர்வடையும் போதெல்லாம் ஊக்கமளிப்பவர். மஞ்சிமா அழகான பெண் மட்டுமல்ல ஒரு தனி ஆளுமை உள்ள ஒரு பெண் அதனால்தான் என்னைக் கவர்ந்தார்.

இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்போம். நான் நடித்து
‘1947’ படம் முடிந்துள்ளது.வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் அறிவிப்பார். சிம்புவுடன் ‘பத்து தல’ படத்திலும் நான் நடித்திருக்கிறேன்.

2013 முதல் எனக்கு ஊக்கம்கொடுத்து என்னை ஆதரித்து வருகிறீர்கள். உங்களது ஆசிகளும் வாழ்த்துகளும் எங்களுக்குத் தேவை. இந்த திருமணம் மிக எளிமையாக நடைபெறுகிறது. வரவேற்பு எல்லாம் வைக்கவில்லை. எங்களை வாழ்த்துங்கள் .ஆசீர்வதியுங்கள்”என்று கூறினார்.

மஞ்சிமா மோகன் பேசும்போது,

“வேறு மொழியில் இருந்து நடிக்க வரும்போது எப்படி நம்மை ஏற்றுக்கொள்வார்களோ என்கிற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் என்னை முழு மனதோடு ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி.
அதற்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த திருமணத்தில் எங்கள் வீட்டில் பூரண சம்மதம். இரட்டிப்பு மகிழ்ச்சி.நீங்கள் அனைவரும் வந்ததற்கு நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் அவசியம் தேவை “என்று கூறினார்.