தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் எழுதிய சிறப்பு பாடல் வெளியீடு

தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ  சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம்  24 ஆண்டுகளுக்குப் பிறகு  பிப்ரவரி 5ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் மத்திய அரசின் தொல்லியல் துறையும்  இணைந்து இந்த கும்பாபிஷேக விழாவை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த கோவிலின் சிறப்பையும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தையும் தமிழர்களின் பெருமையையும் போற்றும் வகையில் திரைப்பட இயக்குனர் ஆதிராஜன்  ஒரு சிறப்பு பாடலை  எழுதி வீடியோவாக தயாரித்து வெளியிட்டிருக்கிறார். சிலந்தி, ரணதந்த்ரா,  அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன், ஏற்கனவே சிலந்தி, அருவா சண்ட, ராத்ரி, அர்ஜுன், நடிகையின் டைரி உள்ளிட்ட சில படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். சிவபெருமானைப் போற்றும்”ஓம் சிவாய நம சிவாய…”என்று தொடங்கும் இந்த பாடல் அவர் எழுதிய பத்தாவது பாடல் ஆகும். இந்த பாடலுக்கு திரைப்பட இசையமைப்பாளர் பி.சி. சிவன் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலை அஜய் ஷ்ரவன் பாடியிருக்கிறார். யு.முத்தையன் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். இந்தப் பாடலை க்ரீன் மேஜிக் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.