தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டது : ‘பொன்னியின் செல்வன்’ பார்த்துவிட்டு கமல்ஹாசன் பேச்சு!

பொன்னியின் செல்வன் படத்தை அப்படத்தில் நடித்திருந்த கலைஞர்களுடன் அமர்ந்து கமல்ஹாசன் பார்த்தார். படம் பார்த்துவிட்டு அவர் ஊடகங்களிடம் பேசும்போது,

“ நான் இங்கே வந்திருப்பது தமிழ் சினிமாவின் ரசிகனாக, தயாரிப்பாளராக, இந்த நடிகர்கள் எல்லாம் நடித்ததைப் பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகனாகவும் வந்திருக்கிறேன். ஒரு சிறந்த படத்தை – தமிழ், நாம் என்கிற எண்ணத்துடன் ரசிகர்கள் பார்க்க வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் பல நடிகர்கள் தங்கள் விருப்பப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள்.

ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட மலைப்பு கண்டிப்பாக எல்லா தமிழ் ரசிகர்களுக்கும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் ஆரம்பத்தில் பொற்காலத்தைப் பற்றி ஒரு வசனம் வரும் என் குரலில். அதை மீண்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என்கிற ஓர் உணர்வு எனக்கு ஏற்படுகிறது.ஒரு தமிழ்த்திரைக் கலைஞனாக தயாரிப்பாளராக இது எனக்குப் பெருமிதம் ஊட்டும் நெஞ்சம் விம்மும் ஒரு நேரமாக இருக்கிறது.

சினிமாவில் ஆரோக்கியமான போட்டியும் பொறாமையும் இருக்க வேண்டியதுதான்.ஆனால் மற்றவர்கள் வீழ்ச்சியைப் பார்த்து மகிழ்வதில் எந்த சந்தோஷமும் கிடையாது.
ஏனென்றால் இந்தப் படகில் நாம் அனைவருமே பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.இதில் ஓட்டை விழுந்தால் நானும் சேர்ந்து மூழ்குவேன் என்பதுதான் உண்மை.

இது வெற்றி பெறும்போது அந்த வெற்றிக் கனியில் ஒரு துளி ,ஒரு விள்ளல் எனக்கும் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்.

இது காலகாலமாக நடந்து கொண்டு வரும் ஒரு விஷயம்தான். தமிழ் சினிமாவிற்கு நூறு வயது எனக்கு 63 வயது.இந்த நல்ல தருணத்தில் இவர்களுடன் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் படத்தின் இறுதியில் பட்டியலிடப்பட்டிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. . இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், மணிரத்னம், லைகா புரொடக்ஷன்ஸை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு திரைப்படங்களை உருவாக்க முடியும். தற்போது நூற்றுக்கணக்கானவர்கள் இடம்பெற்றிருக்கும் பட்டியலை பார்த்து வியக்கிறோம். மலைப்பாகவும் இருந்தது. இப்படி தயாரிப்புக்கு துணையாக நின்ற லைகா சுபாஸ்கரன் அவர்களை, தமிழ் சினிமா சார்பாகவும், இதுபோன்றதொரு பிரம்மாண்ட முயற்சியை எடுத்ததற்காகவும் நன்றி தெரிவிக்கிறேன்.

பொன்னியின் செல்வனில் நான் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தம்பி கார்த்தி நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பல வேடங்களில் நானே நடிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். போர்க்களக் காட்சிகளைப் படமாக்குவது எத்தனை கடினம் என்பது எமக்குத் தெரியும். கத்தி, கேடயம், கவசம், கிரீடம், குதிரை, புழுதி இதனுடன் நடிப்பு என எல்லாவற்றையும் நன்றாக செய்ய வேண்டும். இவை எல்லாவற்றையும் விக்ரம் மிக நன்றாக செய்திருக்கிறார். இந்த படத்தைப் பார்க்கும் போது நான் தயாரித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. அதுவும் உண்மை. ஏனென்றால் தமிழ் சினிமா தயாரித்திருக்கிறது. இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். இந்த உணர்வும், கூட்டுறவும் நீடிக்க வேண்டும். நாளை என்னுடைய படத்திற்கும் நீங்கள் இதுபோல் கொண்டாட வேண்டும்.
இது ராஜ்கமல் படமாக இருந்தால் தான் இப்படி சந்தோஷமாகக் கொண்டாடுவேன் என்பதல்ல. இது எங்கள் தமிழ்ப் படம் நல்ல படம், மக்கள் ரசிக்கிறார்கள் அதற்காகத்தான் இந்த சந்திப்பு. மகிழ்ச்சி”என்று கமல்ஹாசன் பேசினார்.

சீயான் விக்ரம் பேசுகையில், ” எங்களுடைய கனவு நனவாகிவிட்ட நிஜமான சந்தோஷம் இது. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு மிகவும் நன்றி. மூன்று தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்கள் இதனை பார்த்துக் கொண்டாடுகிறார்கள். இந்த படைப்பில் நாங்கள் இருக்கிறோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. படத்தின் தொடக்கத்தில் கமல்ஹாசன் அவர்களின் குரலில் தான் தொடங்கும். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது எல்லாம் கடந்து இது அவருடைய படமாக நினைத்து, இங்கு வருகை தந்து, பார்த்து ரசித்ததுடன் மட்டுமல்லாமல், அந்தப் படத்தைப் பற்றி தன்னுடைய எண்ணத்தை மக்களிடத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய இந்த நேர்மையான அணுகுமுறையை மனதாரப் பாராட்டுகிறோம்.” என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில்,

” அனைவருக்கும் முதலில் நன்றியைத் தான் தெரிவிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொருவரும் ‘இது நம்ம படம்’ என்று கொண்டாடுகின்றனர். அதிகாலை ஐந்தரை மணி காட்சிக்கு அம்மாவையும், பாட்டியையும் அழைத்து வந்து காண்பது என்பது இதுவரை நாம், நம் தமிழ் சினிமாவில் காணாத ஒரு விசயம். திருநெல்வேலியில் ஒருவர், ‘என்னங்க தியேட்டரெல்லாம் எப்படி மாறிவிட்டது. நான் தியேட்டருக்கு வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு’ என்று சொல்கிறார். இதுவரை தியேட்டருக்கே வராதவர்கள் கூட இந்த படத்திற்காக தியேட்டருக்கு வருகை தருகிறார்கள்.

உலக நாயகன் கமல்ஹாசனுடன் படத்தை பார்ப்பது எப்போதும் உற்சாகமான அனுபவம். நாங்கள் எத்தனை வெற்றிகளைப் பெற்றாலும் அது அவருக்கே சமர்ப்பணம். ‘பருத்திவீரன்’ படத்தின் தொடக்க விழாவின்போது உலகநாயகன் கமலஹாசன், மருதநாயகம் படத்தின் முன்னோட்டத்தைக் காண்பித்தார். அதில் அவருடைய நடிப்பும், குதிரை ஏற்றமும்.. இன்றும் பிரமிப்பு நீங்காமல் என் கண்களுக்குள் இருக்கிறது. ” என்றார்.