தயாரிப்பாளரான இயக்குநர் பா.ரஞ்சித் !

ranjit1‘கபாலி’ இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பாளராகிறார்!
‘அட்டகத்தி’ படமூலம் சிறந்த இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இரண்டாவது படமாக ‘மெட்ராஸ்’ படத்தில் தன்னை மீண்டும் சிறந்த இயக்குநர் என்று நிரூபித்துக்கொண்டார். மூன்றாவது படமாக ரஜினி நடித்த ‘கபாலி’ – மூலம் உலகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டார்.
இதனால் ரஜினியின் அடுத்தபடத்தையும் இவரே இயக்குகிறார்.  இவர் இப்பொழுது தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார். ‘நீலம்’ புரொடக்சன்  என்று பெயரிட்ட இப்படநிறுவனம் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ (PARIYERUM PERUMAL) என்ற படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் மாரி செல்வராஜ் (MARI SELVARAJ ). இவர் இயக்குநர் ராமிடம் ‘கற்றதுதமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிதுள்ளார்.
திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. லவ், ஆக்ஷன், என எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் விதமாகவும் கதை அமைந்துள்ளது.
இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நாயகனாக நடிக்கிறார். ‘கிருமி’ படம் மூலம் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்த இவர் இப்படத்திற்காக சிறந்த பயிற்சி எடுத்து வருகிறார். இவரது ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
ஒளிப்பதிவு : ஸ்ரீதர்
கலை      : ராமு
ஜனவரி மாத இறுதியில் இதன் படபிடிப்பு ஆரம்பமாகிறது. இதற்காக டைரக்சன் குழு இப்பொழுதே நெல்லையில் தங்கியுள்ளார்கள். படப்பிடிப்பு முழுவதும் நெல்லையில் நடைபெறுவதால் அந்த மாவட்ட மக்களை நடிக்க வைப்பதிற்கான தேர்வு இப்பொழுது நடைபெற்று வருகிறது.