தற்கொலை எண்ணத்தை மாற்றும் விதமாக உருவாகியுள்ள ‘யோசி’ ஏப்-7-ல் வெளியாகிறது!

15 வருடங்களுக்கு பிறகு ஊர்வசி-கலாரஞ்சனி சகோதரிகள் மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘யோசி’ திரைப்படம் ஏப்-7 ரிலீஸ்.

இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் என நான்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா என்பவர் அமைத்துள்ளார். பாடல்களை ரட்சகன் மற்றும் இசையமைப்பாளர் வி.அருண் இருவரும் எழுதியுள்ளனர். படத்திற்கு ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ரோஷன் பிரதீப்.ஜி மற்றும் ரதீஷ் மோகனன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். ஆசன காட்சிகளை ஜாக்கி ஜான்சன் வடிவமைத்துள்ளார்.

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவன் ஒருவன் மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர் பிழைக்க மிகப்பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறான். அவனுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது, அவற்றிலிருந்து அந்த மாணவனால் தப்பிக்க முடிந்ததா என்பதை மையப்படுத்தி விறுவிறு திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடிப்பில் பல சாதனைகளை செய்த நடிகை ஊர்வசியின் நெருங்கிய உறவினரான அபய் சங்கர் தான் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருக்காக மட்டுமல்ல, கதையால் ஈர்க்கப்பட்டும் இந்த படத்தில் ஊர்வசியும் அவரது சகோதரி கலாரஞ்சனியும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.