திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகும் “நேற்று நான்.. இன்று நீ”

கல்வித் துறையிலும் பத்திரிகை துறையிலும் சிறப்பாக பயணித்து வரும் ‘தேசத்தின் குரல்’ பத்திரிகை நிறுவனர். H. பாட்சா திரையுலகிலும் தன் பயணத்தை துவக்கியிருக்கிறார். அவரது அப்பா டாக்கீஸ் நிறுவனம் மூலமாக “நேற்று நான்.. இன்று நீ” என்ற திரைப் படத்தினை தயாரித்திருக்கிறார்.

குறுகிய கால அளவில் குறைந்த முதலீட்டில் நல்ல கதையையும் நடிக நடிகையர்களையும் நம்பி தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப் போடு தரமான திரைப் படங்களை தயாரிப்பதே H. பாட்சாவின் நோக்கம். அதன் முதல் படியே இத்திரைப்படம்.

திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் B. நித்தியானந்தம் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

E ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்ய ஜெகன் கல்யாண் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு – ஜோன்ஸ் ஃபெர்னான்டோ. முல்லை செல்வராஜ் வசனம் எழுதியுள்ளார்..

புதுமுகங்கள் ஆதித், வினிதா, தமிம், வினுபிரியா இவர்களுடன் ஆர். அரவிந்தராஜ், பிஜாய் மேனன், H. பாட்சா ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.

சுவாரசியமான கதை களத்தோடு திகிலும் மர்மமும் நிறைந்த படமாக “நேற்று நான்.. இன்று நீ” உருவாகிறது. அயல்நாட்டிலிருந்து தாய் மண்ணுக்கு வந்து தன் பூர்வீக சொத்தை அடைய வந்த நாயகி எதிர் கொள்ளும் அமானுஷ்ய திகில் மர்மங்களையும் தெய்வ சக்தியையும் சொல்லும் மாறுபட்ட திரைப்படம் இது.

குடும்பத்தோடு கண்டு ரசிக்க அடுத்த மாதம் இத்திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.