திரைப்பட வாய்ப்புக்களை மிக கவனமாக தேர்ந்தெடுக்கிறேன்: நடிகை சாக்‌ஷி அகர்வால்!

பிக்பாஸ் மூலம் பட்டி தொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். தற்போது தமிழ் திரையுலகின் வளர்ந்துவரும் இளம் நடிகையாக அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்சன், வில்லி, கிளாமர் என அனைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் அசத்தி வரும் சாக்‌ஷி, தென்னிந்திய சினிமாவின் ஹாட் ஹீரோயினாக மாறி வருகிறார்.

கடந்த ஆறு மாதத்தில் அவர் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் “நான் கடவுள் இல்லை” படத்தில் முழுநீள ஆக்‌ஷன் அவதாரத்தில் தோன்றிய அவர், தனது அற்புதமான நடிப்பில் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காட்டினார். அதே போல் நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து, சமீபத்தில் வெளியான ‘பஹீரா’ படத்தில் எதிர்நாயகியாக வில்லி வேடத்தில் அனைவரையும் அதிர வைத்தார். தற்போது ஹங்கமா (hungama) ஓடிடியில் வெளியாகியுள்ள “என் எதிரே ரெண்டு பாப்பா” படத்தில் ஹாட் கிளாமர் ஹீரோயினாக கலக்கியிருக்கிறார்.

எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் ஒரு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார். அவரது கதாபாத்திரம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கலக்கி வருகிறார் சாக்‌ஷி.

சமீபத்திய திரைப்படங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது…

”பிக்பாஸ் எனக்கு மிகப்பெரிய அடையாளம், பிக்பாஸ் எல்லோரிடமும் என்னை பற்றி அறிமுகம் தந்தது. பிக்பாஸ் அறிமுகத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது. உண்மையில் என் திரைப்பட வாய்ப்புக்களை மிக கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. திரைப்படம் என்பது எனது கனவு. அதனால் தான் டான்ஸ், ஆக்சன் கற்றுக்கொள்ள தனியாக கிளாஸ் போய்க்கொண்டிருக்கிறேன். ”நான் கடவுள் இல்லை” படத்தில் நான் நடித்த ஆக்சன் காட்சிகள் நன்றாக இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி.” 
பல மொழிகளில் நடிக்கிறீர்களே, மொழிப்பிரச்சனை இருக்கிறதா?
”அப்படியெல்லாம் தோன்றியதில்லை. தென்னிந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இங்கு வாழ்க்கை ஒன்று தான். கலைஞர்கள் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். மொழிப்பிரச்சனை எனக்கு பெரிதாக தெரிந்ததே இல்லை. ”
உங்கள் கனவு கதாபாத்திரம் என்ன? என்ன மாதிரி கதாபாத்திரங்கள் நடிக்க விருப்பம்?
”என் கதாபாத்திரங்கள் ஒரே சாயலில் இருக்க்க் கூடாது. ஒரே மாதிரி பாத்திரங்களில் ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் எனது திறமையை வெளிப்படுத்தவே ‌விருப்பம். வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு கிராமத்து வேடத்தில் நடிக்க வேண்டும். எனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

ஆக்சன், கிளாமர், வில்லி, குணச்சித்திரம், க்யூட் ஹீரோயின் என கலக்கி வரும் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன, அவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களால் வெளியிடப்படும்.