‘தூநேரி ‘ விமர்சனம்

ஷேடோ லைட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுனில் டிக்ஸன் இயக்கத்தில் ஜான் விஜய், நிவின் கார்த்திக், மியாஸ்ரீ, மரியா சார்ம், அஷ்மிதா, நகுல், அபிஜித், சாத்விகா, சந்தோஷ், மணிகண்டன், கிருஷ்ணகுமார் நடித்துள்ள படம் ‘தூநேரி’

மலைப்பகுதி பழையதனி வீடு பேய், இரவு, இடுகாடு,குழந்தைகள் , கொலைகள், அலறல்,பீதி , பேய் வழியே ஒளிந்திருக்கும் மனிதர் என்ற சூத்திரத்தில் பின்னப்பட்ட படம்.


சரி கதை என்ன?

சென்னையிலிருந்து காட்டுப்பகுதிக்கு தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் இடமாற்றலில் வருகிறார் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்திக். அவர்கள் குடியேறும் வீட்டுக்கு எதிரிலேயே இடுகாடு உள்ளது. ஆரம்பத்திலேயே அதைக்கண்டு மனைவியும் குழந்தைகளும் அஞ்சுகின்றனர். வேறு வீட்டுக்கு இடம் மாற முயன்றபோது அந்த வீடுகள் ஏற்கெனவே இருக்கும் வீட்டை விட பயமுறுத்துவதாக இருப்பதால் முதலில் குடியேறிய வீட்டிலேயே தங்கிவிடுகின்றனர். அந்த ஊரில் கருப்பசாமியின் ஆவி நடமாடுவதாகவும் அது பலரையும் பலி வாங்குவதாகவும் பேச்சு உள்ளது. அதற்கேற்ப அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன.

போலீஸ் இன்ஸ்பெக்டருக்குச் சந்தேகம் வர அவர் கருப்பசாமி பற்றி ஊரில் விசாரணை நடத்துகிறார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தைகளைப் பேய் பயமுறுத்துகிறது. இதை முதலில் நம்ப மறுக்கும் இன்ஸ்பெக்டர் பின்னர் அது உண்மைதான் என்று அறிந்து அதிர்ச்சி அடைகிறார். இதற்கெல்லாம் காரணம் அந்த ஊரில் இருக்கும் மந்திரவாதிதான் என்று கருதி அவரைக் கைது செய்கிறார். இதற்கிடையில் இன்ஸ்பெக்டரின் மனைவி மற்றும் குழந்தைகள் பேயிடம் சிக்கிக்கொள்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற முடிந்ததா என்பதை திகிலுடன் விளக்குகிறது படம்.

சமீபகாலத்தில் சில பேய்ப் படங்கள் காமெடி படங்களாக வந்தன. ஆனால் தூநேரி பயமுறுத்தும் பேய்க் கதையாக உருவாகி இருக்கிறது. படம் நகர்ப்பகுதியில் பளிச்சென தொடங்கினாலும் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்திக் இடமாற்றலாகி காட்டுப்பகுதி கிராமத்துக்கு வரும்போதே இருள் சூழ்வதுடன் திகிலும் தொடங்கிவிடுகிறது.

இரவு நேரத்தில் மலைப்பாதையில் கார் வருவதும் அங்கு இருக்கும் வீட்டின் தோற்றம், எதிரிலேயே சுடுகாடு என தொடக்கத்திலேயே பயத்தின் பிடியில் ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குநர்.

பகலில் பசுமையும் வளமையும் நிறைந்த காட்சிகளை காட்டி பரவசப்படுத்தும் தூநேரி, இரவிலே கொடூரமான துர்மரணங்களை நிகழ்த்தி அச்சுறுத்துகிறது.

வழக்கம்போல் எல்லோரும் பேய்க்குப் பயந்தாலும் நாயகன் மட்டும் பயப்படமாட் டார் . அந்த பாணியில்தான் நிவின் கார்த்திக்கும் பேயாவது, பிசாசாவது என்று துணிவுடன் இருந்தாலும் ஊரில் மக்களைக் கொல்லும் கருப்பசாமி பேய் பற்றி விசாரணை தொடங்கி அதை நெருங்கிச் செல்லும்போது அடுத்தடுத்து மர்ம முடிச்சுகள் அவிழ்வது விறுவிறுப்பு.

பேய்ப் படங்கள் என்றாலே பாலியல் காட்சிகளும், கோரமான காட்சிகளும் மிகுந்து இருக்கும் நிலையில் ‘தூநேரி’ குடும்பத்தோடு கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நான்கு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக இடம் பெறும் வகையில் தூநேரி திரைக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களோடு பேய்கள் நடத்தும் அமானுஷ்ய விளையாட்டுகள் பார்வையாளர்கள் அனைவரையும் கவரும்.

கிளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் பேய் சண்டை அதிர வைக்கும் வகையில் படமாகி இருக்கிறது.

கருப்பசாமியாக ஜான்விஜய் வித்தியாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார். முரட்டுத்தனமாக ஊர் மக்களை நடுங்க வைக்கும் அவரது நடிப்பும் அதேபோல் அழகாக வந்தாலும் பிற்பகுதியில் மியாஸ்ரீ ஆடும் பேயாட்டமும் மிரள வைக்கிறது.

சுனில் டிக்சன் அனிமேசன் கலையில் வித்தகர். நேர்த்தியான பிசிறு தட்டாத அனிமேஷன் காட்சிகளில் கவர்கிறார்.படத்தில் 30 நிமிடங்கள் வரும் அனிமேசன் காட்சிகளால் வளப்படுத்தியுள்ளார்.

தூநேரி படத்தின் திரைக்கதை கருப்பசாமி என்ற கதாபாத்திரத்தில் தொடங்கி முடிவுறுகிறது.அத்தகைய வலு மிகுந்த பாத்திரத்தைத் தனது தோளில் சுமந்துள்ளார் ஜான் விஜய்.

கதிகலங்க வைக்கும் கருப்பசாமியாகவும், கண் கலங்க வைக்கும் கருப்பசாமியாகவும் கவர்ந்துள்ளார்.

பல மலையாளப்படங்களில் நடித்து புகழ் பெற்ற மியா ஶ்ரீ. தூநேரி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

படத்தில் இவர் போட்ட பேயாட்டங்கள் பார்வையாளர்களை ஆட்டம் காணச்செய்யும். அஷ்மிதா, நகுல், அபிஜித் என திகில் படத்தில் 3 குழந்தை நடசத்திரங்கள் குழந்தைதனத்தை வெளிப்படுத்தி, பயப்படாமல் நடித்திருப்பதற்கே பாராட்டலாம்.

கலையரசனின் இசையும் காட்சிகளை திக் திக் நிமிடங்களாக்கியுள்ளது.

தூநேரி – பேய் பட, திரில்லர் பட விரும்பிகளுக்குப் பிடித்த விருந்து.