நன்றாகத் தமிழ் பேசும் பஞ்சாபி நடிகை பவ்யா த்ரிக்கா!

   கடந்த வருடம் இறுதியில் வெளிவந்து இளைஞர்கள் மட்டுமின்றி வெகுவாக எல்லார் மனதையும் கவர்ந்த ஜோ திரைப்படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவர் பவ்யா த்ரிக்கா.

ஜோ திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் என்பதே உண்மை. சென்னையில் வாழும் பஞ்சாபி பெண்ணான இவர் தமிழை அச்சு அசத்தலாக பேசுவது ஆச்சரியத்திற்குரியது. நடிப்பின் மேல் ஆர்வம் இருந்தாலும் படிப்பிலும் கவனம் சிதறாமல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்து பட்டம் பெற்றார். இதைப் பற்றி அவர் பேசும்போது,

“சிறுவயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக இருந்தது. என் அப்பாவின் உறுதுணை எனக்கு கை கொடுத்தது. பல தமிழ் திரைப்படங்களை பார்த்து தமிழும், சினிமாவின் சாராம்சத்தை பார்த்தே வளர்ந்தேன். நடிப்பிற்கான தேடலில் இருக்கும் போது ‘கதிர்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. அதைத்தொடர்ந்து, கல்லூரியிலும் என்னுடைய தோழிகள் என்னை ஊக்குவித்ததால் ‘ஜோ’ என்ற திரைப்படத்தில் நான் நடித்தேன். ஜோ திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்வான நினைவுகளாக இருக்கிறது. வெற்றி அப்படிங்கறது ஒரு சராசரியாக இருக்கக்கூடிய நடிகைகளுக்கு எந்த அளவுக்கு மாறும் என்று நினைக்கும் போது ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. இன்று நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னை அங்கீகரித்து வந்து பேசுகிறார்கள் அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளேன். அதே நேரத்தில், ஜோ திரைப்படம் எனக்கு கொடுத்த அங்கீகாரமும் புகழும் மனதில் வைத்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.

இந்த ஆண்டில் சிறந்த நடிகையாக வலம் வருவேன் என்று நம்புகிறேன். எனக்கு சமந்தாவை ரொம்ப பிடிக்கும் காரணம் என்னவென்றால் எந்தவித பின்புலமும் இல்லாமல் தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் நடிச்சு மக்கள் மனசுல இடம் பெற்று இருக்காங்க அவங்க எனக்கு ஒரு முன்னுதாரணமா இருக்காங்க” என்று கூறினார். A2B விளம்பரத்தில் வரும் சிறு குழந்தையின் முகம் இவருடையது என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய நடிப்புத் திறமையால் மக்களை கவரும் பணியில் இருக்கும் இவர் மீது சினிமாவின் பெரும் வெளிச்சம் இவர் மேல் பட காத்திருக்கிறது.