நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் : உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஜீ ஸ்டுடியோஸ், பேவீவ் புரோஜக்ட்ஸ் சார்பில் போனி கபூர் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படம் தற்போதும் சுமார் 60 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நிகழ்ச்சியில் உதயநிதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின் , “மனதுக்கு நேர்மையான படத்தை கொடுத்துள்ளோம். அதற்கு நீங்கள் கொடுத்த பாராட்டிற்கு நன்றி. தயாரிப்பாளர்கள் இருவருக்கும் நன்றி. எனக்கு எந்தவிதமான கஷ்டம் இல்லாமல் படம்பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த ரமேஷ் திலக்கிற்கு நன்றி. கலை இயக்குநர் உடைய பணி எல்லாராலும் பாராட்டபட்டது. சுரேஷ் உடைய கதாபாத்திரம் தான் இந்த படத்தின் உயிர். தமிழரசு இந்த படத்தில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி. எடிட்டர் அவர் உழைப்புக்கு நன்றி. நடிகை யாமினிக்கு நன்றி. நடிகர் இளவரசு உடன் நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்தபிறகு தான் படத்தில் ஆரி தான் ஹீரோ என்று தெரிந்தது. தன்யா அவர்களுக்கு நன்றி. படத்தின் இயக்குநர் படத்தை தமிழுக்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் தான். ஜெயித்து காட்டிவிட்டார் அருண். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி அருண் மற்றும் அவரது மனைவிக்கு சமர்ப்பணம். நன்றி.” என்றார்.

இனி திரைப்படத்தில் நடிக்க மாட்டீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி, “நான் ஒரு முறை தான் சொன்னேன். ஆனால், நீங்கள் நான் நடிக்க மாட்டேன் என்று பல முறை சொல்கிறீர்கள். சமூக பொறுப்புள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அப்படிப்பட்ட கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்.” என்றார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசுகையில், “பாடலாசிரியராக இந்த மேடையில் தான் அறிமுகமானேன். எல்லோருக்கும் இந்த மேடையில் நன்றி கூறிகொள்கிறேன். இந்த படத்தை இயக்க நான் சரியான ஆள் என என்னை தேர்ந்தெடுத்த உதய் சாருக்கு நன்றி. உதய் சார் எனக்கு இந்த படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார். கனா படத்தில் நான் புதுமுகங்களை பயன்படுத்தியது போல், இந்த படத்திலும் இருக்க வேண்டும் என உதய் சார் கூறினார். இந்த படத்தில் வசனகர்த்தா தமிழ் பெரும் உழைப்பை கொடுத்துள்ளார். யுகபாரதி அவர்களுக்கு நன்றி, அவர் பல விஷயங்களை கற்றுகொடுத்தார். வட்டார மொழிக்கு எனக்கு பலர் உதவினர், அவர்களுக்கு நன்றி. இந்த படம் சமூகநீதி பேசும் படம், அதற்காக தான் நாங்கள் அனைவரும் உழைத்துள்ளோம். நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பு இந்த படத்திற்கு பொருத்தமான ஒன்று. அதை வாங்கிகொடுத்த உதய் சாருக்கு நன்றி. உதவி இயக்குனர்கள் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உடைய பங்களிப்பு முக்கியமானது. இந்த படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. என்னுடைய மனைவிக்கு நன்றி. இந்தப்படத்தை செய்ய அவர் தான் தூண்டுகோலாக இருந்தார் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் மயில்சாமி பேசுகையில், “நெஞ்சுக்கு நீதி நன்றி விழாவில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. உதயநிதி சாருடன் இது எனக்கு ஐந்தாவது படம். படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் உதயநிதி சார் தான். எனக்கு வண்டி ஓட்ட தெரியாது, இந்த படத்தில் எனக்கு டிரைவர் பாத்திரம். என் கதாபாத்திரத்தை முதலில் செய்ய இருந்தவர் பொன்வண்ணன் தான். சில காரணங்களால் அவர் செய்ய முடியவில்லை. படத்தில் காமெடி மயில்சாமி கதாபாத்திரமாக இருக்க கூடாது என இயக்குநர் கூறினார். படத்தில் நான் பேசிய வசனங்களுக்கு மக்கள் பாராட்டு தர காரணம் எழுத்தாளர் தமிழ். எழுத்தாளர் தமிழ் வசனங்களை மிகுந்த சிரத்தை எடுத்து உருவாக்கினார். படத்தின் வசனங்களை பேசும் போது மிகுந்த சந்தோசத்தில் இருந்தேன். இந்த படம் நல்ல பெயர் பெற்று தந்துள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என மனமார்ந்த் நன்றி.” என்றார்.

எழுத்தாளர் தமிழ் பேசுகையில், “இந்த படத்தை நாங்கள் நினைத்ததை விட மக்களிடம் நீங்கள் கொண்டுபோய் சேர்ததுள்ளீர்கள். எங்களுக்கு இந்த படம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நீங்கள் அதை செய்திருக்கிறீர்கள். எல்லா மக்களுக்குமான படமாக இந்த படம் மாறியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி. மயில்சாமி சார் படத்தின் உள்ளே வந்த பிறகு, அந்த கதாபாத்திரம் முக்கியமானதாக மாறியது. இந்த படத்தின் கடைசி நிகழ்வு இது. ஆனாலும் இது நிறைவான ஒன்றாய் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

எடிட்டர் ரூபன் பேசுகையில், “இந்த படத்தில் சமூக அக்கறை உள்ள அருண்ராஜா அவர்களை தேர்ந்தெடுத்ததற்கு உதய் சாருக்கு நன்றி. கலை மற்றும் சினிமா மேல் மிகுந்த ஆர்வம் உள்ள நபர். இந்த படம் ஒரிஜினல் படமாக இல்லாமல், தமிழுக்கு ஏற்றார் போல் உருவாக்கியுள்ளார் இயக்குனர். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம். எல்லோருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பேசுகையில், “இந்த படத்தில் பங்களிப்பு கொடுத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. எனக்காகவே இந்த பாத்திரத்தை எழுதியது போல் இருந்தது. என் மேல் பெரிய நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த அருண்ராஜா, எழுத்தாளர் தமிழரசு, தயாரிப்பாளர்கள், உதயநிதி சார் ஆகியோருக்கு நன்றி. படத்தில் உதவி இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோருக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் இளவரசு பேசுகையில், “படத்தின் பெரிய பலத்தில் ஒரு பலம் கலை இயக்குநர். இந்த படத்தில் சுரேஷ் ஒரு காட்சியில் எல்லோரையும் தாண்டி நடித்தார். என் கதாபாத்திரத்தை அருண்ராஜா வடிவமைத்த விதம், எனக்கு மன அழுத்தத்தை கொடுத்ததது. அந்த அளவு அந்த கதாபாத்திரம் அவ்வளவு சிக்கலை சந்திக்கும் என்பதை வெளிகாட்டி இருந்தது. அருண்ராஜா நினைத்ததை என்னால் முழுதாய் கொடுக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தம்பி உதயநிதி இந்த படத்தில் கொடுத்த நடிப்பிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.” என்றார்.

நடிகர் ஆரி பேசுகையில், “இந்த படம் சமுகத்திற்கு தேவையான ஒன்றாக இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் எதிர்காலத்தில் சமூகநீதிக்கான ஒன்றாய் இருக்கும். இந்த படத்தின் உருவாக்கத்திற்கு முழு காரணம் இயக்குனர் குழு. என் பாத்திரம் இப்படி வரவேற்பு பெற காரணம் இயக்குனர், உதய் சார் மற்றும் எடிட்டர் தான் காரணம். அவர்களுக்கு நன்றி. படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இந்த படத்தை வெற்றி படமாக்கிய பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.” என்றார்.