நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை அளித்தவர் நண்பர் கே.வி. ஆனந்த்:தங்கர் பச்சான்

சிறந்த ஒளிப்பதிவாளர்கள் சிறந்த இயக்குநர்களாக மிளிர்வது அரிதாகவே நிகழ்கின்றன. திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை கற்காமலேயே நேர்த்தியான தொழில் நுட்பத்தின் மூலம் நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை அளித்தவர் நண்பர் கே.வி. ஆனந்த்.

“கோ” தமிழ்த் திரைப்படம் பார்த்தபின் அவருடன் என்னால் பேசாமல் இருக்க இயலவில்லை! இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகச்சிறந்த அரசியல் திரைப்படம் அது. குறிப்பாக தற்கால அரசியல் குறித்த ஒரு குறியீட்டுப் படம்.

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் பணியாற்றும்போது நண்பர்கள் ஜீவா,ஆனந்த் இருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அடிக்கடி சந்திக்காமல் போனாலும் எங்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதலும் அன்பும் மதிப்பும் குறையாமல் இருந்தது.

நட்சத்திர நடிகர்களைக் கொண்டு படங்களை இயக்குவது அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும் அமைந்தது. பெரிய நடிகர்கள் கிடைக்காததால் அவர் மனதுக்குள் நல்ல படைப்புகளை வெளிக்கொணர முடியவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது.

மன மாற்றத்திற்காக இயற்கை வேளாண்மைக்குள் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் இன்று மரணமடைந்து விட்டார் எனும் துயரச்செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது.
இந்த பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஆனந்தின் மரணமும் ஒரு எண்ணிக்கையில் மறைந்து விடக் கூடியது அல்ல! ஒளிப்பதிவு மாணவர்களிடத்தில் மறைந்த ஜீவாவும் ஆனந்தும் என்றும் பேசுபொருளாக மதிக்கக் கூடியவர்களாக நிலைத்துக் கொண்டே இருப்பார்கள்.