பல ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த ஒரு வெற்றி : பரத்!

சென்றவாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை DINA STUDIOS , INCREDIBLE PRODUCTION, LEAPING HORSE ENTERTAINMENT சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர். ப்ளு வேல் எண்டர்டயின்மண்ட் இந்த படத்தை வெளியிட்டிருந்தது. இப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்திருந்தது. அதைக் கொண்டாடும் வகையில் படக்குழு இன்று மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றை நடத்தினார்கள்.

விழாவில்,
தயாரிப்பாளர் மணி தினகரன் பேசியதாவது,
“இயக்குநரின் ப்ளானிங் நேர்த்தி, மற்றும் பத்திரிகைகளின் பாராட்டு தான் எங்களை பெரிய வெற்றி அடைய வைத்தது. அனைவருக்கும் நன்றி,” என்றார்.

Blue Whale Entertainment அபிஷேக் பேசியதாவது,
“பெரிய டென்சனில் இருந்த ஒரு சமயம் தான் இந்தப்படத்தை போய்ப்பார்த்தேன். ஆனால், படம் பார்த்த பிறகு டென்சன் விலகியது. பெரிதாக என்கரேஜ் பண்ணியது. அப்போது தான் முடிவு செய்தேன். இந்தப்படம் பெரிதாக கொண்டு செல்ல வேண்டும் என்று. அது நடந்து விட்டது,”என்றார்.

சக்திவேல் பெருமாள்சாமி பேசியதாவது,

“அரவிந்த் என்பவர் தான் இந்தப்படத்தை பார்க்க வைத்தார். ஒரு முக்கியமான டிஸ்டிப்யூட்டரோடு தான் பார்த்தேன். ஒருசில காரணங்களால் அவரால் பண்ண முடியவில்லை. பிறகு நானே செய்யலாம் என்று முடிவெடுத்தேன். எங்களுக்கு பத்திரிகையாளர்கள் கான்பிடண்ஸ் கொடுத்தார்கள். பைரஸியில் படம் பார்ப்பவர்களால் எங்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதையும் தாண்டி நாங்கள் ஜெயிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. மேலும் இந்தப்படம் இந்த வாரமும் ஓட வேண்டும் அப்போது தான் வசூலில் நாங்கள் அடுத்த நிலையை அடைய முடியும். அதற்கு அனைவரும் சப்போர்ட் பண்ணணும். மேலும் இந்தவாரம் மூன்று பெரிய படங்கள் வருகின்றன. அந்தப்படங்களோடு எங்கள் படமும் ஓட வேண்டும். அதற்கு மீடியா ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” என்றார்

நடிகர் தங்கதுரை பேசியதாவது,

“படத்தைப் பத்தி மீடியா நல்லா எழுதி இருந்தாங்க. அவ்வளவு பேருக்கும் நன்றி. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இயக்குநர் ஆகியோர் அனைவருக்கும் நன்றி. பரத் சார் என்னை சூட்டிங் ஸ்பாட்டில் நல்லா என்கரேஜ் பண்ணார். அவருக்கும் நன்றி. இன்றைய வாழ்க்கை ரொம்ப வேகமாக போவதால் நாம் யாரும் வீட்டில் நேரம் செலவிடுவதில்லை. ஆனால் அப்படி இருக்கக் கூடாது என்பதை படம் மிக அழகாக பதிவு செய்திருந்தது. இந்தப்படத்தை பார்த்த பிறகு நான் மனைவியோடு இரண்டு நாள் நேரத்தை செலவு செய்தேன். நாம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் வீட்டிற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்” என்றார்

ஆதவ் கண்ணதாசன் பேசியதாவது,

“கன்டென்ட்டை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளருக்கு பெரிய நன்றி. இயக்குநர் ஸ்ரீசெந்தில் சார் ஒரு சைடாக யோசிக்க மாட்டார். இந்த காளிதாஸ் மூலமாக பரத்திற்கு பெரிய ப்யூச்சர் கிடைக்கும். ரிவியூ தான் இந்தப்படத்தை பெரிதாக கொண்டு சேர்த்தது. அவர்கள் அனைவருக்கும் நன்றி. இன்னும் ஒருவாரம் இந்தப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கனும்,” என்றார்

இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியதாவது,

“நல்லா ஒருபடம் பண்ணி இருந்தோம். அதைக் கொண்டுவர ரொம்ப கஷ்டப்பட்டோம். ஒருவழியாக கொண்டுவந்தோம். படம் ப்ரிவியூ ஷோ போடும் வரை பயம் இருந்தது. ஆனால் ப்ரிவியூவில் பார்த்தவர்கள் படத்தை பாராட்டி மக்களிடம் கொண்டு சேர்த்தனர். படம் துவங்கியதற்கான காரணமாக இருந்த தினா சாருக்கு பெரிய நன்றி. அவர் எனக்காக படம் எடுத்தார். முழு உழைப்பை போட்டால் இந்த பிரபஞ்சம் நமக்கு சப்போர்ட் பண்ணும். அது மெய்யாகி இருக்கிறது. சிவநேசன் சார் சொன்ன லைன் தான் இந்தக்கதை. இது 30 நாட்களில் எழுதப்பட்ட கதை. எழுதியதும் பரத் சாரை மீட் பண்ணி கதை சொன்னேன். அதில் இருந்து 24 மணி நேரத்திற்குள் இந்தப்படம் முடிவாகிவிட்டது. நிறைய நல்ல மனங்கள் தான் இந்தப்படத்தை நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்த்தது.

இந்தப்படத்திற்காக பரத் சார் நல்ல உழைப்பை போட்டார். படம் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை வருவதற்கு நடிகர்கள் ரொம்ப முக்கியம். அந்த வகையில் பரத் சிறப்பாக செய்தார். ஆன் ஷீத்தல் டூப் இல்லாமலே நடித்தார். என்னோட டெக்னிஷியன்ஸ் எல்லாருமே நல்லா வேலை செய்தார்கள். புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டர் என்பதைத் தாண்டி எனக்கு ரொம்ப நண்பராகிவிட்டார். எனக்குள் பெரிய எனர்ஜியை ஏற்றியவர் அவர் தான். சக்திவேல் ராமசாமி, அபிஷேக், சிவகுமார் ஆகியோர் படத்திற்குள் வந்தபிறகு எங்கள் நம்பிக்கை பெரிதாகி விட்டது. ஜெயவேல் அண்ணன் தான் என்னை சினிமாவிற்குள் கொண்டுவந்தார். அவர் படம் மூலமாகத் தான் நான் உள்ளே வந்தேன். இந்த நேரத்தில் அவருக்கு பெரிய நன்றி”என்றார்.

அம்மு ராமச்சந்திரன் பேசியதாவது,

“ஸ்ரீசெந்தில் சாருக்குத் தான் நான் பெரிய நன்றி சொல்லணும். அவர் என்னை நடிக்க அழைத்த போது நான் டிராபிக் ராமசாமி படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். என்னால் டேட் கொடுக்க முடியாத சூழல் இருந்தது. ஆனாலும் எனக்கு உதவி பண்ணி என்னை நடிக்க வைத்தார். பரத்தோடு நடித்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இப்படியான ஒரு கேரக்டர் எனக்கு கொடுத்ததன் மூலமாக எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நல்ல விதமாக படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்

நடிகர் பரத் பேசியதாவது,

“வெற்றி நாயகன் என்ற வார்த்தையைக் கேட்டு ரொம்பநாள் ஆச்சு. நேற்று மும்பையில் சூட்டிங்கில் இருக்கும் போது காளிதாஸ் சக்ஸஸ் மீட் இருக்கு என்று சொன்னார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் சினிமாவிற்கு வந்த 17 ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் சில படங்கள் தவறி இருக்கிறது. அது எல்லா ஹீரோக்களுக்கும் வரும் தான். ஆனால் என்றாவது ஒருநாள் நமக்கு ஒரு நல்லபடம் அமையும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது. சினிமா என்பது வணிகம் சார்ந்தது. நிறைய நல்லபடங்கள் நடித்திருந்தாலும் வணிக ரீதியான வெற்றி ரொம்ப முக்கியம். 2017- ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். சினிமாவில் நிறையபேர் இந்தப்படத்தை பார்த்து விட்டார்கள். நிறையபேர் படம் நல்லாருக்கு. ஆனால் இவர் நடித்து இருக்கிறார். இவருக்கு மார்க்கெட் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அது எனக்கு நிறைய மன உளைச்சலைத் தந்தது. ஆனால் இந்தப்படத்தை முதலில் பார்த்த பிரஸ் பெரிதாக கொண்டாடினார்கள். நெகட்டிவ் ரிவியூ ஒன்று கூட இல்லை. அதற்கு ஊடகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. இப்போ ஒரு நல்லபடம் எடுத்தால் மட்டும் போதாது. அதை வாங்கியவர்கள் எப்படி வெளியிட வேண்டும், அதற்கு தியேட்டர்ஸ் எப்படி போட வேண்டும் என்பது மிக முக்கியம். அதை அபிஷேக் சார் சிறப்பாக செய்தார். எல்லாருமே இந்தப்படத்தை பெரிதாக்க வேண்டும் என்று மொத்தமாக உழைத்தோம். அடுத்தவாரமும் இந்தப்படத்தை நாங்க கொண்டு போகணும். ஏன்னா அடுத்தவாரம் ஹீரோ, தம்பி, தபாங் 3 ஆகிய படங்கள் வெளிவருகிறது. அதோடு நாங்கள் நிற்க வேண்டும். இயக்குநர் ஸ்ரீசெந்தில் மிக நேர்த்தியாக உழைத்து இருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் நின்றுவிட்டார். தமிழ்சினிமாவில் ஒரு தரமான இயக்குநர் லிஸ்டில் அவர் இருப்பார். பல ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த ஒரு வெற்றி இது. அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது”என்றார்.