பாராட்டுக்களை தலையில் வைத்துக்கொள்ள கூடாது – ‘கம்பெனி’ பட விழாவில் பாரதிராஜா பேச்சு!

ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஆர்.முருகேசன்,

“ இந்தப் படத்தை முடிப்பதற்குள் நான் பல போராட்டங்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டேன். படம் தொடங்கிய உடன் கொரோனா பிரச்சனை வந்தது. அது முடிந்த பிறகு இந்த படத்தில் நடித்த என் மகனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அதனால் சுமார் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அவருக்கு உடல்நிலை சரியானதும் மீண்டும் கொரோனா பிரச்சனை, இப்படி பல பிரச்சினைகளைச் சந்தித்து தான் இந்த படத்தை முடித்தேன். நான் இளம் வயதில் நிறைய சிரமப்பட்டிருக்கிறேன். இதே வடபழனி பகுதியில் உணவின்றி சுற்றித் திரிந்திருக்கிறேன், ஒரு நாள் பசியால் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அப்படி பல கஷ்டங்களை சந்தித்தாலும், வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற லட்சியத்தோடு இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். ஏதோ பிறந்தோம், இறந்தோம் என்று வாழாமல், நான் பிறந்தேன், சாதித்தேன் என்று காட்ட வேண்டும், என்ற லட்சியத்தோடு இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். படத்தையும், படக்குழுவினரையும் வாழ்த்த வந்த அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன், நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில்,

இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழையே மிக பிரம்மாண்டமாக இருந்தது. எனக்கு கொடுத்த அழைப்பிழைப் பார்த்த போதே தயாரிப்பாளரின் தனித்துவம் தெரிந்தது. மேடையில் பேசும் போதும் உள்ளத்தில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னார். அதுவே அவர் உயரிய நிலைக்கு வருவதற்கு சான்று. பெயரே கம்பெனி. அனைவரும் சேர்ந்து உருவாக்க கூடிய இந்த கம்பெனி நான்கு பேரை வைத்து விளம்பரம் செய்திருக்கிறீர்கள். நான்கு வேதங்கள், நான்கு திசைகளாக, எட்டுத்திக்கும் கொடிகட்டிப் பறக்கும். அதுமட்டும் இல்லாமல், பாடல் வரிகள், “அடடா…அடடா…ஆனந்தம் அதுவே பேரின்பம்…” என்றார்கள் அதற்கு மேல் என்ன வேண்டும், எனவே ஆனந்தமும், பேரின்பமும் சேர்ந்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் .” என்றார்.

சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் பேசுகையில்,

“ இந்தப் படத்தை நான் வாழ்த்துவதை விட, எனக்கு இவர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். நான் மீடியாவில் வருவதற்கு காரணமே பாரதிராஜா சார் தான். அவருடைய மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு படம் வெளியாகி விட்டது. இன்னும் இரண்டு படங்கள் வெளியாக வேண்டும். நானும் ஒரு படம் எடுத்திருக்கிறேன், அதன் சிரமம் எனக்கு தெரியும். படப்பிடிப்பின் போது பல பிரச்சினைகள் வரும், அதை எல்லாம் சமாளித்து படத்தை சிறப்பாக முடித்திருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் கஷ்டப்பட்டதை இங்கு சொன்னார். அவரைப்போல் நானும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். டீ கிளாஸ் கழுவி, பிறகு டேபிள் துடைத்து, அதன் பிறகு சப்ளையர் ஆகி பிறகு தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி தான் இந்த இடத்திற்கு வந்தேன். இப்போது 28 கிளைகளை கொண்ட பெரிய நிறுவனத்தை வளர்த்திருக்கிறேன். அதனால் எல்லோரும் கஷ்ட்டப்பட்டு தான் வந்திருப்போம். பாரதிராஜா சார் இதைவிட கஷ்ட்டப்பட்டிருப்பாரு. அதனால் இந்த கஷ்டங்கள் எல்லாம் நமக்கு பெரிய வெற்றியாகும். இந்த படத்தோட வெற்றி விழாவில் நாம் மீண்டும் சந்திப்போம். எனக்கு வாய்ப்பளித்து வாழ்க்கை கொடுத்திருக்கும் தயாரிப்பாளர் முருகேசன் மற்றும் இயக்குநர் தங்கராஜ் ஆகியோர் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இந்த படத்திற்காக நான் எந்த உதவியும் செய்யவில்லை, அவர்கள் தான் எனக்கு ஓட்டலில் ரூம் போட்டு தங்க வைத்துச் சிறப்பான முறையில் உபசரித்தார்கள். இசையமைப்பாளர் படத்திற்குத் தூணாக இருந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இந்த நான்கு பேருடைய உழைப்பிற்காக இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும். பாரதிராஜா சாரின் ஆசி உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அவருடைய ஆசியோடும், இறைவனின் ஆசியோடும் படம் பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

நாக் ஸ்டுடியோ கல்யாணம் பேசுகையில்,

“இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள். இந்த படத்தோட இயக்குநர் கொரோனா பிரச்சினையில் சிக்கினாலும், அதில் இருந்து மீண்டு படத்தை முடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு படத்தை வெற்றிகரமாக முடித்தார். அவர் என்னிடம் வரும்போதெல்லாம் முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டே வருவார். அப்போது நான், என்னடா இவரு இப்படி வருகிறாரே, படத்தை முடிப்பாரா, என்று நினைத்தேன். ஆனால், படம் முடியும் போது, எந்தவித முகச்சுழிப்பும் இல்லாமல், அனைத்து பணிகளையும் வேகமாக செய்து படத்தை முடித்துவிட்டார். இந்த படத்துல நான்கு பேர் நடித்திருக்கிறார்கள். அதில் சில புதியவர்கள், சிலர் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள். அதுபோல் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைவரும் வளரும் கலைஞர்கள், தயாரிப்பாளர் புத்தம் புதுசு. வேலூரில் இருந்து எதுவும் தெரியாமல் வந்து, ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி இந்த படத்தை எடுத்திருக்கிறார்.பாரதிராஜா சார் என்னை தலையில் அடித்திருக்கிறார். ஆனந்த் தியேட்டரில் தியேட்டர் கொடுக்க மாட்டேன், என்று கூறியதால் அவர் என்னை தலையிலேயே அடித்தார். ’ஒரு கைதியின் டைரி’ படத்திற்கு, ஆனால் அவர் இப்போது அதை மறந்து விட்டார் போலிருக்கு. பிறகு தியேட்டர் கொடுத்து விட்டேன், படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால இந்த மேடையில் நான் நிற்க எனக்கு எல்லோரும் சப்போர்ட் பண்ணியிருக்காங்க. ஆனால், இந்தப் படத்தை பற்றிப் பேச எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆனால், புதிய கான்செப்ட் படம் என்பதால், இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில்,

“ நான் ஒரு பார்வையாளராக தான் இந்த டிரைலரையும், பாடல்களையும் பார்த்தேன், மிக சிறப்பாக இருந்ததோடு, எந்தவித முகச்சுழிப்பும் இல்லாமல் பார்க்க முடிந்தது. அதுமட்டும் அல்ல, பாடல் காட்சியில் நாயகன், நாயகி முத்தம் கொடுப்பது போல் நெருங்கி வருகிறார்கள், ஆனால் கொடுக்கவில்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், சில ஹீரோக்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் வேண்டும் தான், ஆனால் அளவாக இருக்க வேண்டும். எந்த நேரமும் இச்சி….இச்சி….என்று கொடுக்கக் கூடாது, பிறகு போடா எச்ச பயலே, என்று சொல்லி விடுவார்கள். இதெல்லாம் சினிமாவுக்குத் தேவை தான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நம் பண்பாடு, கலாச்சாரம் கெடாமல் அளவாக வைக்க வேண்டும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி காலங்களில் இதுபோன்ற காட்சிகள் வைத்தார்கள், ஆனால், நெருங்கி வரும்போது, இரண்டு கிளிகளைக் காட்டுவார்கள் அல்லது மலர்கள் மோதிக்கொள்வது போல் காட்டுவார்கள். ஏன், பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜ் படங்களில் இல்லாததா, ஆனால் அதை அவர் நகைச்சுவையாகச் செய்வார், அதனால் அதில் எந்த பாதிப்பும் இருக்காது, அதுபோல தான் வைக்க வேண்டும். என் தங்கை, தாய், பாட்டி, அக்கா என அனைவரும் பார்க்க வேண்டும். கலாச்சாரம் கெடாமல் படம் எடுக்க வேண்டும், அப்படித் தான் இவர்கள் எடுத்திருக்கிறார்கள், அதற்காகவே இந்த படம் வெற்றி பெறும்.

தயாரிப்பாளர் முருகேசன் பட்டபாட்டை அப்படியே சொன்னாரு. தமிழ்ச் செல்வன் கஷ்டப்பட்டதை சொன்னாரு, உண்மை தான் தம்பி, ஆனால், இங்கு அதுபோல் வளர முடியாது. தயாரிப்பாளரை க்ளோஸ் பண்ணிடறாங்க தம்பி. உங்கள போல் வளர்ந்து வளர்ந்து வர முடியாது. நீங்க 28 கடை இருக்குனு சொல்லும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், என் தயாரிப்பாளர் 28 படம் எடுத்தேன் என்று சொல்ல சொல்லுங்க முடியாது. பாரதிராஜா காலத்தில் இருந்தது, அப்போது உதவி செய்தார்கள். ஆனால், இப்போது யாரும் தயாரிப்பாளருக்கு உதவி செய்வதில்லை. பாரதிராஜா சாரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், கடந்த 10 வருடங்களாக சுமார் 1000 படங்கள் எடுத்தார்களே அந்த தயாரிப்பாளர்கள் இப்போது எங்கே? ஏன் அவர்கள் படம் எடுக்கவில்லை? அனைவரும் நலிந்து போய்விட்டார்கள். சினிமா நல்ல தொழில், ஆனால் யாரும் உதவி செய்வதில்லை. குறிப்பாக நடிகர்கள் எந்தவித உதவியும் செய்வதில்லை. டப்பிங் முன்பாக முழு சம்பளத்தையும் கேட்டு நிற்கிறார்கள், அப்போது என் தயாரிப்பாளர் என்ன செய்வார், எங்கு போவார். நீங்க சம்பாதித்து வீடு வாங்கிட்டு போகணும், என் தயாரிப்பாளர் வீட்டை வித்துட்டு ரோட்டுக்கு வரணுமா. ஒரு மளிகை கடை வைத்து நஷ்டம் அடைந்தால் கூட, அதில் போட்ட தொகையில் 70 சதவீதம் திரும்ப வருகிறது. ஆனால், என் தயாரிப்பாளர் செய்யும் முதலீடுக்கு என்ன வருகிறது, முழுவதுமாக நஷ்டம் தான் அடைகிறார்.

டிவியில் இருந்து ஒரு நடிகர் சினிமாவுக்கு நடிக்க வந்திருக்கிறார். அவருக்கு ஒரு தயாரிப்பாளர் 12 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி நடிக்க வைத்திருக்கிறார். அதற்கு அந்த நடிகர் படப்பிடிப்பு துவங்கும் முன்பு 8 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் படப்பிடிப்பு முடிந்த பிறகு மீதியுள்ள 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும், என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதற்கு தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லி படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படப்பிடிப்பு முடிய நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், அந்த நடிகர் பாக்கித் தொகையை கொடுத்தால் தான் நடிப்பேன், என்று கூறியிருக்கிறார். இது நியாயமா? அந்த நடிகர் யார் என்பதை அடுத்த மேடையில் நிச்சயம் சொல்வேன். நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன், அனைவரையும் தட்டிக் கேட்பேன், என்னை யாராலும் தடுக்க முடியாது. அப்படி இங்கு பேசுவதைத் தடுத்தால், ரோட்டில் மீட்டிங் போட்டு பேசுவேன், இனி இவர்களை விடுவதாக இல்லை.

முருகேசன் இந்த படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார், தங்கராஜ் சிறப்பாக இயக்கியுள்ளார். பாடல் சிறப்பாக உள்ளது. முன்னோட்டம் மற்றும் பாடல் காட்சியைப் பார்த்த போது படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. சரியான முறையில் விளம்பரம் செய்தால் கம்பெனி கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும், வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசுகையில்,

“படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் சிறப்பாக இருந்தது. படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதில் நடித்திருக்கும் நான்கு பேரில் தயாரிப்பாளரின் மகனும் ஒருவர். தனது மகனை ஒரு ஹீரோவாக்கி பார்த்திருக்கும் தயாரிப்பாளர் முருகேசனை என்றும் மறக்கக் கூடாது, எப்போதும் பெற்ற தாயையும், தகப்பனையும் மதிப்பவர்கள் தோற்க மாட்டார்கள், அந்த வகையில் இந்த படத்தின் ஹீரோவும் தோற்காமல் பெரிய வெற்றி பெறுவார். சிறிய படங்களுக்கு நல்ல காலம் பொறக்க போகுது. அதற்கான நடவடிக்கையில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். செல்போனில் படம் பார்க்கும் வசதியை ஏற்பாடு செய்கிறோம். அது செயல்முறைக்கு வந்தால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் என்பதே வராது. அதேபோல், நடிகர், நடிகைகளை சில ஊடகத்தினர் தரக்குறைவாகப் பேசுகிறார்கள், அவர்களை நான் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் போனை எடுக்கவில்லை. அதனால், அவர்கள் எங்கிருந்தாலும் என்னிடம் பேச வேண்டும், என்று தெரிவித்துக்கொள்கிறேன். இல்லை என்றால் அவர்களின் வீட்டுக்கு நான் வருவேன், என்பதையும் தெரிவித்துக்கொள்வேன். இனி சினிமாக்காரர்களைத் தரக்குறைவாக பேசுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். சரியான செய்தியைப் போடுங்கள் அதை விட்டுவிட்டு, தவறான பொய்யான செய்திகளைப் போடாதீர்கள், உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது மறந்துவிடாதீர்கள், என்பதை இங்கு தெரிவித்துக்கொண்டு, கம்பெனி படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகர் கராத்தே வெங்கடேஷ் பேசுகையில், “ இந்த படத்தில் எனக்கு சிறப்பான வேடத்தை கொடுத்த இயக்குநர் தங்கராஜுக்கு நன்றி. பரியேறும் பெருமாள் வேடத்திற்கு இணையாக ஒரு வேடம் கொடுத்திருக்கிறார்கள். என் வேடத்தை பார்க்கும் போது உங்களுக்கு கோபம் வரும், என்ன கூடவே கொஞ்சம் அனுதாபமும் வரும். சிறப்பாக இசையமைத்த ஜுபின், சிறப்பாக ஓளிப்பதிவு செய்த செந்தில், சிறப்பான கதாப்பாத்திரத்தை உருவாக்கிய இயக்குநர் தங்கராஜ், எனக்கு நண்பராக இருந்து பல உதவிகளை செய்த தயாரிப்பாளர் முருகேசன் அனைவருக்கும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் ஜுபின் பேசுகையில்,

“நான் ஒரு ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். அந்தப்படங்களில் இசை வெளியீட்டு விழா இதே பிரசாத் லேபில் தான் நடைபெற்றது. இந்த படத்தோட வாய்ப்பு எடிட்டர் சசிகுமார் மூலமாகத்தான் கிடைத்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகே நான் இசையமைக்கத் தொடங்கினேன். படத்தை பார்த்தவர்கள் இசையை வெகுவாகப் பாராட்டுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் படத்தில் செண்டிமெண்ட் அதிகம் இருக்கிறது. அதனால் தான் இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் ஒரு பாடல் தான், இந்த பாடலை விவேகா சார் சிறப்பாக எழுதியிருக்கிறார். கதையுடன் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்,

“தயாரிப்பாளர் பேசும் போது ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருப்பதாக சொன்னார். நீங்க கஷ்டப்பட்டு வந்தால் தான் இதை அனுபவிக்க முடியும். இதே வடபழனியில் தெரு தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன் தான் பாரதிராஜா. சினிமா லவ்வபல் வேர்ட், இது யாரையும் கைவிடாது, நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கனா அது உங்கள் லவ் பண்ணும். ஒரு வேலை செய்யும் போது அதில் ஒரு தாக்கம் வேண்டும், அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் நடித்திருக்கும் பசங்கள பார்க்கும் போதே படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

இதில் தயாரிப்பாளரின் மகன் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார். நான் எல்லாம் எந்த பின்புலம் இல்லாமல் வந்தேன். பாடல் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் பேசும் போது தன்னடக்கத்தோடு பேசினார். அது தான் அவரை பெரிய இடத்திற்கு அழைத்து செல்லும். ஆனால், பெரிய இடத்துக்கு போன பிறகும் இப்படியே இருக்க வேண்டும். பலர் பாராட்டுவார்கள் ஆனால், அதையெல்லாம் நாம் தலையில் தூக்கி வைத்துக்கொள்ள கூடாது, கக்கத்தில் வைக்க வேண்டும். நான் அப்படி தான் செய்வேன். என்னை இமயம், அப்படி இப்படினு சொல்லுவாங்க, அது அவங்களுக்கு தான், அவங்க சொல்றாங்க நமக்கு என்ன என்று ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுவேன்.

இங்கு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜான், பல பிரச்சினைகளைக் கூறினார். இதுவெல்லாம் கடந்து போகும், ஆனால் இதற்காக நாம் சண்டை போடக் கூடாது. எல்லமே நம்ம சகோதர்கள் தான், எனவே எதையும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.

நான்கு பசங்கள பார்த்ததும் நம்ம அலைகள் ஓய்வதில்லை போல இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், இது வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. உள்ளே என்ன வைத்திருக்கிறார்கள், என்று தெரியவில்லை. ஆனால், நான்கு பசங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள், அவர்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகிறது. நல்ல சிரித்த முகம், நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இங்கு இவ்வளவு பேர் வந்து வாழ்த்தியதே பெரிய விஷயம். நிச்சயம் படமும், ஹீரோவும் பெரிய வெற்றி பெறுவார்கள். இந்த இடத்தில் இவரை ஒரு ஹீரோவாக அப்பாவும், அம்மாவும் நிறுத்தியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய விஷயம். நிலம் நீர் காற்று இந்த மூன்றும் நம்மை வாழ வைக்கிறது. இவற்றுக்கு பிறகு அப்பா, அம்மா தான் நம்மை வாழ வைக்கிறார்கள். எனவே அவர்களை மறக்கக் கூடாது. படம் பெயர் கம்பெனி கிழக்கிந்திய கம்பெனி போல மிகப்பெரிய கம்பெனியாக படம் வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் இயக்குநர் பாரதிராஜா இசை குறுந்தகட்டை வெளியிட, மற்ற விருந்தினர்கள் பெற்றுக்கொண்டார்கள்.