‘பொம்மை’ விமர்சனம்

பொம்மைகளை நிஜ பாத்திரமாக வைத்து குழந்தைகள் விளையாடுவார்கள் . அது அவர்களது கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும்.இப்படி மன பாதிப்பு கொண்ட ஒருவன் பொம்மையை நிஜமாக நினைத்து வாழும் கதை இது.ஜவுளிக்கடை பொம்மையை தனது காதலியை போல் நினைத்து வாழும் ஒருவனது கதை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் குமுதத்தில் வந்தது. அப்படி ஒரு கதை தான் இது.

மனரீதியாக ஒரு பாதிப்புக்கு உள்ளானவர் எஸ்.ஜே.சூர்யா. துணிக்கடை ஷோகேஸ் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பொம்மை  வடிவமைக்கும் வேலை செய்து வருகிறார். அங்கே தாடையில் சிறிய தழும்புடன் பொம்மை ஒன்று வருகிறது. அது தனது பதின் பருவ காதலியை நினைவூட்டுகிறது.
பிறகு அந்தப் பொம்மையைத் தனது காதலியாக பாவித்து வாழ ஆரம்பிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவர் நேசத்துக்குரிய பொம்மை அதாவது எனது காதலியே என உண்மையைப் போல நம்பி உள்ள அந்த பொம்மை விற்பனையாகி வேறு கடைக்குச் சென்று விடுகிறது.அதற்குக் காரணமான மேலாளரை அடித்துக் கொன்றுவிடுகிறார் சூர்யா.பின்பு பொம்மை இருக்கும் இடம் தேடிக் கண்டுபிடித்து அந்த கடையிலேயே வேலைக்குச் சேர்ந்து விடுகிறார்.

மேலாளர் கொலை வழக்கை போலீஸ் விசாரிக்கிறது.குற்றவாளி யார் என்று தெரியாமல் போலீஸ் திணறுகிறது.எஸ்.ஜே.சூர்யாவோ அந்தப் பொம்மையைத் தனது வீட்டுக்கு எடுத்துச் செல்ல திட்டமிடுகிறார். குற்றவாளியான எஸ்.ஜே.சூர்யாவை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தார்களா ? காதல் பொம்மையின் நிலை என்ன என்பதைச் சொல்லும் படம்தான் ‘பொம்மை’

கதையின் நாயகனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரசிக்கும்படியான பல்வேறு முகபாவனைகளைக் காட்ட வாய்ப்பு .சிலவற்றில் மிகை நனடிப்பு என்றாலும் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நவரச நடிப்பின் மூலம் முத்திரை பதிக்கிறார் . பொம்மையாக வருகிறார் பிரியா பவானி சங்கர்.பொருத்தமான தேர்வு தான் அலட்டல் இல்லாமல் பொம்மை போலவே வந்து போகிறார். பெரிய வேடம் இல்லை என்றாலும் மனதில் பதிகிறார் சாந்தினி ,

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் குளோசப் காட்சிகளில் அசத்துகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் ,,, பின்னணி இசையும் தான்.அந்த தெய்வீக ராகம் பாடல் அழகாக பயன்பட்டுள்ளது.

தன் நேசத்திற்குரிய காதலை நினைத்து வாழும்,மன பாதிப்படைந்த ஒரு மனிதனின் கதையை வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் ராதா மோகன்.அவரது படங்கள் எப்போதும் மன நிறைவைத் தரும்.எஸ் ஜே சூர்யாவை மட்டும் நம்பி படத்தை எடுத்துள்ளதால்,அந்த நிறைவு இதில் இல்லை என்பது தான் உண்மை.