‘போத்தனூர் தபால் நிலையம்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய மற்றும் தனித்துவமான அனுபவமாக இருக்கும்.”- இயக்குநர் பிரவீன் !

“போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய மற்றும் தனித்துவமான அனுபவமாக இருக்கும்.”- இயக்குனர் மற்றும் நடிகர் பிரவீன் !

Passion Studios தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் ஆகியோர் சிறந்த உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர். அவர்களது அடுத்த வெளியீடாக மே 27, 2022 முதல் ஆஹா தமிழில் ஓடிடி உலகளாவிய வெளியீடாக “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தை இயக்கியுள்ள பிரவீன் தான் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

‘போத்தனூர் தபால் நிலையம்’ என்ற தலைப்பில் வரும்போதே, இது ஒரு மென்மையான மெலோடிராமாடிக் டிராமாவாக இருக்கும் என்று நினைக்கையில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விஷுவல் ப்ரோமோக்கள் நம் அனுமானங்களை முற்றிலும் தவறென நிரூபிக்கின்றன. ஆம்! இந்த படம் ஒரு முந்தைய காலகட்டத்தில்-குற்றம்-விசாரணை சம்பந்தபட்ட சஸ்பென்ஸ் திரில்லராக இருக்குமென சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லர் கூறுகிறது, மற்றும் அந்த டிரெயலர் நமது ஆர்வத்தையும் அதிகரிக்கவைக்கிறது. மேலும், ‘தபால் நிலைய கொள்ளை’ என்பது படத்தின் கதைக்கரு என தெரிந்தவுடன், திரைப்படத்தின் மீது மிகப்பெரிய பரபரப்பும் ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.

இயக்குனர்-நடிகர் பிரவீன் கூறுகையில்…, “அஞ்சலகத்தில் காசாளராக இருந்த என் அப்பாவிடம் சாவகாசமாக பேசும் போதுதான் போத்தனூர் தபால் நிலையம் என்ற கதைக்கரு உருவானது. அவர் தனது அனுபவத்தை, சில நிஜ வாழ்க்கை சம்பவங்களுடன் பகிர்ந்து கொள்வார், அந்த பகிர்தல்கள் ஒரு கற்பனை நிறைந்த திரைப்படத்தை, உருவாக்க என்னைத் தூண்டியது. எனது முயற்சிகளை ஊக்குவித்து, இந்த திரைப்படத்தை செயல்படுத்தியதற்காக எனது தயாரிப்பாளர்களான சுதன் சுந்தரம் சார் மற்றும் ஜெயராம் சாருக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தில் ஆர்வம் காட்டி, மே 27, 2022 அன்று உலகம் முழுவதும் இப்படத்தை திரையிடுவதற்காக ஆஹா தமிழுக்கு நன்றி கூறுகிறேன்.

திரைக்கதையை ஈர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளோம், போத்தனூர் தபால் நிலையம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய மற்றும் தனித்துவமான அனுபவமாக இருக்கும். பார்வையாளர்கள் எங்களின் கதையை ஏற்று பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். இயக்குனர்-நடிகர் பிரவீன் தொடர்ந்து கூறுகையில், போத்தனூர் தபால் நிலையம் இந்தியாவின் முதல் தபால் அலுவலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். 90களின் பின்னணியில் இப்படம் அமைக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்களுக்கு ஒரு துல்லியமான காட்சி விருந்தளிக்க கலைத் துறையின் சார்பில் பல கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தப் படம் ரெட்ரோ பாணியில் இருக்கும், 90களை மீண்டும் பார்க்கும் அனுபவமாக இருக்கும் என்றார்.

VFX மற்றும் அனிமேஷன் உலகில் 13 வருட அனுபவத்தின் காரணமாக, இயக்குனர்-நடிகர் பிரவீன் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் சார்ந்த திரைப்படமான ‘கோச்சடையான்’ படத்தில் தொழில்நுட்ப இயக்குநராக பணிபுரிந்தார். Passion Studios ஏற்கனவே சீதக்காதி, அந்தகாரம், என்னாங்க சார் உங்க சட்டம் போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. பிரவீன் மற்றும் அஞ்சலி ராவ் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மே 27, 2022 முதல் போத்தனூர் தபால் நிலையம் ஆஹா தமிழ் செயலியில் திரையிடப்படுகிறது.