‘மாஸ்டர்’ படத்திற்காக விருதை வென்ற மாஸ்டர் மகேந்திரன்!

தமிழ் சினிமாவில் இளம் நடிகரான மாஸ்டர் மகேந்திரன் ஆந்திர முன்னணி இதழ் வழங்கும் ‘சந்தோஷம்’ விருதுகளில், சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘மாஸ்டர்’ படத்திற்காக பெற்றுள்ளார்.

நாட்டாமை படத்தின் மூலம் தமிழக மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். தற்போது தமிழில் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான இவருக்கு தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் நடித்த கதாப்பாத்திரம், பெரும் புகழை பெற்றுத்தந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் சேதுபதியின் இள வயது பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் மாஸ்டர் மகேந்திரன். இந்த பாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

பெரும் ப்ளாக்பஸ்டராக மாறிய ‘மாஸ்டர்’ படம் ஆந்திராவிலும் வெற்றிக்கொடி நாட்டியது. தற்போது ஆந்திராவின் முன்னணி இதழ் வருடாவருடம் வழங்கும் சந்தோஷம் விருது விழாவில், மாஸ்டர் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார் மகேந்திரன்.

இது குறித்து மாஸ்டர் மகேந்திரன் கூறியதாவது…
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம், வளர்ந்து வரும் இளம் நடிகரான எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது. இந்த வாய்ப்பை அளித்த தளபதி விஜய் அண்ணாவுக்கும், லோகேஷ் அண்ணாவுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தக் கதாப்பத்திரம் ரசிகர்களின் மனங்களை வென்றது, இப்போது உயரிய விருதுகளை வெல்வது இன்னும் மகிழ்ச்சி தருகிறது. இந்தக்கதாப்பாத்திரத்தை செய்வதற்கு விஜய் சேதுபதி அண்ணா பெரும் ஆதரவாக இருந்தார். அவரது பிறந்த நாளில் விருது வென்ற இந்த செய்தியை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி என்றார்.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தற்போது நீலகண்டா, அர்த்தம், அமிகோ கராஜ், ரிப்பப்பரி, இயல்வது கரவேல் முதலான படங்களில் நடித்து வருகிறார்.