மீண்டும் இணைந்திருக்கும் பிரபுதேவா – வடிவேலு கூட்டணி !


தமிழில் மிகப்பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன்  தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்”  படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியைத் தந்த, நடிகர் இயக்குநர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர்
வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது. இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் நாயகனாக நடிக்கும் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்”  படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்திற்கான ரசிகர்களின்  எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு செய்தி வந்துள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மைசூர் முதலான பகுதிகளில் நடத்தப்பட்டது. தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, மும்பை நடன கலைஞர்கள் பங்கேற்க, கோலாகலமாக ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. இந்திய நடனப்புயல் பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைக்கிறார். வில்லு   படத்தை தொடர்ந்து,  14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு கூட்டணி இப்பாடலில் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.   படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக  நடந்து வருகிறது. படத்தின் தயாரிப்பு பணிகள்  லைகா புரடக்சன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்லுக், இசை, டிரெய்லர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் சுராஜ் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தை லைகா புரடக்சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன்  தயாரிக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தயாரிப்புப்  பணிகளை  லைகா புரடக்சன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன் செய்து வருகிறார். ஒளிப்பதிவு – விக்னேஷ் வாசு, படத்தொகுப்பு- செல்வா RK,
கலை இயக்கம் –   உமேஷ் J குமார்,
ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்