யதார்த்த நாயகன் விதார்த் நடிக்கும் ‘வைப்பர்’ படத்தின் டைட்டில்  வெளியீடு!

கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் ‘யதார்த்த நாயகன்’ நடிகர் விதார்த், சைக்கோ கிரைம் த்ரில்லர் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராசன் இயக்கி வருகிறார். ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட படபிடிப்புக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில் படத்தின் டைட்டிலை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தமிழ் புத்தாண்டு அன்று அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். படத்திற்கு ‘வைப்பர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

“கண்ணாடி விரியன் பாம்பின் தன்மையையும், பண்பையும் கொண்டவர் தான் கதையின் நாயகன் என்பதால் வைப்பர் என திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது” என இயக்குநர் மணிமாறன் நடராசன் கூறுகிறார்.

“இந்த திரைப்படத்தில் மிஸ் பெமினா பட்டம் வென்ற ரோஷினி பிரகாஷ் நாயகியாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் பாலாவின் படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைக்கிறார். எஸ். ஆர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுதி இருக்கிறார். பிரமிப்பை உண்டாக்கும் சண்டை காட்சிகளை தினேஷ் சுப்ராயன் அமைத்துள்ளார். பாடல்கள் கார்த்திக் நேத்தா, படத்தொகுப்பு நாகூரான் ராமசந்திரன், கலை இயக்கம் பிஜுசந்திரன், ஒப்பனை தேசிய விருது பெற்ற பட்டணம் ரஷீத், Atmos mixing தேசிய விருது பெற்ற ராஜாகிருஷ்ணன் என பிரபல தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து அகில இந்திய (Pan india) அளவிலான கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை தயாரித்து கொண்டு இருக்கிறோம்” என கிரினேடிவ் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு கூறுகிறார்.