‘லத்தி’டீசர் வெளியீட்டு விழாவில் உதயநிதி-விஷால் கலகல பேச்சு!

நடிகர்கள் நந்தா, ரமணா ஆகியோரைத் தயாரிப்பாளராக்கி
நடிகர் விஷால் ஆர்.வினோத் குமார் இயக்கத்தில் நடித்திருக்கும் புதிய படம் ‘லத்தி’.

இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு டீஸரை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் மேடையில் பேசும்போது, “நானும் விஷாலும் ஒன்றாகவே ஸ்கூலுக்குப் போனோம்.. காலேஜுக்கு போனோம். போனோம்.. அவ்ளோதான். விஷாலும் நானும் சேர்ந்து ஒரு படம் செய்றதா இருந்தது. ஆனால் அது இப்போதுவரையிலும் முடியவில்லை…” என்றார்.

விஷால் மேடையேறி தனக்கும், உதயநிதிக்குமான நட்பு பற்றி பேசினார். தொடர்ந்து, “எனக்கு ஒரு ஆசையிருக்கு.. இப்போ கட்டிக்கிட்டிருக்குற நடிகர் சங்கக் கட்டடத்தில் கலைஞர், ஸ்டாலின் இருவரும் பெயர்களும் இடம் பெற வேண்டும். நிச்சயம் அது விரைவில் நடக்கும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட உதயநிதி, “அந்தக் கட்டடத்தை சீக்கிரமா கட்டி முடிக்கச் சொல்லுங்க. இவன் வேற அதைக் கட்டினால்தான் கல்யாணம் செய்வேன்னு சொல்லிட்டிருக்கான்..” என்றார்.

மேலும் பேசிய விஷால், “ஆரம்பத்துல உதய்க்கு அரசியலுக்கு வரவே விருப்பமில்லை. ஒரு தடவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துல ஸ்டாலின் பேசிக்கிட்டிருக்கும்போது அந்த வேனுக்குள்ள நான், உதய், மகேஷ், வெங்கட் என்று நால்வரும் அமர்ந்து பேசிக்கிட்டிருந்தோம். அப்போ கண்டிப்பா ஒரு நாள் உதய் அரசியலுக்கு வந்தே தீருவான் என்று நான் உறுதியாகச் சொன்னேன். இப்போ என்னைக் கடத்திட்டுப் போய் உதயநிதியைப் பத்திக் கேட்டாலோ.. அல்லது உதயநிதியைக் கடத்திட்டுப் போயி என்னைக் கேட்டாலோ அவ்ளோதான்.. சோலி முடிஞ்சது. .” என்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்களிடத்தில், “உங்களில் யார் யோசிக்காமல் பொய் சொல்பவர்?” என்று கேள்வி கேட்டபோது “நான்தான்” என்றார் உதயநிதி. “ஏதாவது சேட்டை செய்து மாட்டிக்கிட்ட அனுபவம் உண்டா..?” என்று கேட்டதற்கு பதிலளித்த விஷால், “ஸ்கூல் படிக்கும்போது இண்டர் ஸ்கூல் போட்டிகள் நடந்துச்சு. போட்டி முடிஞ்ச பின்னாடி அந்தப் போட்டிகளின் போட்டோக்களை கொடுக்குறதுக்காக ஹெட்மாஸ்டர்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு போனோம். உண்மையில் நாங்கள் சைட் அடிக்கத்தான் போனோம். ஆதர்ஷ் ஸ்கூல், ஆதர்ஸ் வித்யாலயா என்ற பள்ளிகளுக்குப் போனோம்..” என்று சொல்லும்போதே குறுக்கிட்ட உதயநிதி, “நான் இப்போ வீட்டுக்குப் போகணும்..” என்றவுடன் இந்தப் பேச்சை இத்தோடு முடித்துக் கொண்டார் விஷால்.

கடைசியாக படக் குழுவினரை வாழ்த்திய உதயநிதி, “இந்தப் படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பாலு சார்தான் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளர். என்னோட 4 படத்துல இவர் ஒர்க் செஞ்சாரு. விஷாலுக்கு 3 படம் செஞ்சிருக்காரு. இவர் ஹீரோக்களைவிடவும் ஹீரோயின்கள்கிட்டதான் நெருக்கமா இருப்பாரு.

இங்கேயிருக்குற சுனைனா நான் தயாரித்த ‘நீர்ப்பறவை’ படத்துல நாயகியா நடிச்சாங்க. அவங்க நம்பர் என்கிட்ட இல்லை. நம்பர் மாத்திட்டாங்களோன்னு நினைச்சு கேட்டேன். உடனேயே பாலு ஸார் “நான் தரேன்…” என்றார். அந்த அளவுக்கு அவர் ஹீரோயின்களோட நெருக்கமா இருப்பார்..” என்று கிண்டல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.