லீனா மணிமேகலை இயக்கிய ‘மாடத்தி’ஜூன் 24 முதல் நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் !

லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி திரைப்படத்தின் முன்னோட்டம் /Trailer சினிமா, இலக்கியம், கலை, அரசியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளால் பிரம்மாண்டமாக வெளியிடப் படுகிறது. ஷைலஜா டீச்சர், மஞ்சு வாரியர், பிரித்விராஜ் சுகுமாரன், ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலி மேனன், கீது மோகன் தாஸ், சேரன், ஆஷிக் அபு, பா ரஞ்சித், வசந்தபாலன், சி எஸ் அமுதன், ரீமா கல்லிங்கள், நீரஜ் கய்வான், தமிழச்சி தங்கபாண்டியன், என். எஸ். மாதவன், ரோஹிணி, எஸ்.ஆர். பிரபு, டி.எம். கிருஷ்ணா, ஷோபா சக்தி உட்பட பல கலைஞர்களும், அரசியல் தலைவர்களும்  செயல்பாட்டாளர்களும் படை திரண்டு மாடத்தியின் முன்னோட்டத்தை தத்தமது சமூக வலைத் தளங்களில் வெளியிட்டனர். லீனா மணிமேகலை எழுதி, இயக்கி, தன் நிறுவனமான கருவாச்சி ஃபிலிம்ஸின் தயாரிப்பில் உருவாக்கியிருக்கும் மாடத்தி ஜீன் 24 முதல் நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் திரையிடப்பட உள்ளது. 


“ஏதிலிகளுக்குத் தெய்வமில்லை. அவரே தெய்வம்” என்ற மேற்கோளுடன் வரும் இப்படம் தமிழ்நாட்டின் தென்கோடியில், ‘காணத்தகாதோர்’ என்று அடையாளப்படுத்தப்படும் புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்த ஒரு பதின்வயது பெண்ணின் பருவ வாழ்க்கையைப் பேசுகிறது. தலித் மக்கள் மற்றும் இறந்தவர்களின் துணிகளையும் மாதவிடாய் துணிகளையும் துவைப்பவர்களான இம்மக்கள் எதிர்கொள்ளும் கொடூரமான அடக்குமுறைகளை இப்படம் தோலுரிக்கிறது. இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று கருதப்படுவதால் மற்ற சமூகத்தினர் கண்ணில் படாமல் ஒளிந்து செல்லும் அவல நிலைக்குள்ளாகிய  இம்மக்களின் துயர வாழ்வின் பின்னணியில் பாலின, சாதி அடையாளங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆழ்ந்து அவதானிக்கும் ஒரு உக்கிர தேவதையின் கதை மாடத்தி. இன்று வெளியாகியிருக்கும் முன்னோட்டம்  அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தில் பிறந்த பெண் எப்படி தனக்கிழைக்கப்பட்ட அநீதியால் உக்கிர தெய்வமாகிறாள் என்ற கதையின் மிகத் துல்லியமான காட்சி குறுக்குவெட்டாய் அமைந்திருக்கிறது. சாதி அடுக்குகளின் கடைசி மனுசியாய் வாழும் ஒரு பெண் சாதியையும் பாலின அடக்குமுறைகளையும் எதிர்கொள்வதை  ஒரு பெண்ணின் பார்வை கொண்டு மாடத்தி திரைப்படம் காட்சிப் படுத்தியிருப்பதை முன்னோட்டம் கட்டியம் கூறுகிறது.


லீனா மணிமேகலை சமூக நீதி குறித்த கருத்துக்களை கவித்துவமான அழகியலுடன் பேசும் கலைப்படைப்புகளுக்காக பெயர்பெற்றவர்.  பலதரப்பட்ட பாணிகளிலான இவரின் படைப்புகள்  உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்றிருக்கின்றன. லீனா மணிமேகலையின் சிறந்த  படைப்புகளான  Goddesses (2009), செங்கடல் (Cinema Verite 2011), My Mirror is the Door (2012, Cine Poem), White Van Stories (2015, Feature Documentary) மற்றும் Is it too much to ask (2017, Mockumentary) ஆகியவை இவரை ஒரு தனித்துவமிக்க தனித்திரை ஆளுமையாக நிலைநாட்டி உள்ளன.

தென் கொரியாவின் பூசான் திரைப்பட விழா, கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, லத்தீன் அமெரிக்க FICCI 60, Third Eye Asian திரைப்பட விழா, சிகாகோ தெற்காசிய திரைப்பட விழா, DC தெற்காசிய திரைப்பட விழா என்று பல முக்கிய திரைப்பட விழாக்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் மாடத்தி வெகுவாக கொண்டாடப்பட்டது. FIPRESCI நடுவர் விருது, சிறந்த திரைப்படத்துக்கான தங்க கைலாசா விருது, 2020 அவுரங்காபாத் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகை மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகள் வென்றதோடு பிரான்ஸ் நாட்டின் லெ ரிம்பாட் விருதுக்கான இறுதி பட்டியலிலும் தேர்வானது மாடத்தி திரைப்படம்.

மாடத்தி படத்தின் திரைக்கதையை லீனா மணிமேகலையுடன் இனைந்து ரஃபிக் இஸ்மாயில் மற்றும் யவனிகா ஸ்ரீராம் எழுதியுள்ளனர். ஜெஃப் டோலென், அபிநந்தன் ராமானுஜம் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கூட்டுநிதியில் (crowd  funding) தொடங்கப்பட்ட இப்படத்தை பின்னர் பியூஷ் சிங்(Golden Ratio Films), பாவனா கோபராஜு மற்றும்  அபிநந்தன் ராமானுஜம் இணைந்து தயாரித்துள்ளனர்.  அஜ்மினா காசிம், பேட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம் மற்றும் அருள் குமார் முக்கிய கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்ட மற்ற கதாபாத்திரங்களாக அச்சமூக  மக்களே பங்கேற்றுள்ளனர். தங்கராஜ் படத்தொகுப்பு செய்ய தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். மோகன மகேந்திரன் கலை இயக்கம் செய்ய, இப்படத்திற்கான இசையை கார்த்திக் ராஜா அமைத்துள்ளார். பவிசங்கர் விளம்பர வடிவமைப்பு செய்துள்ளார். திவோ நிறுவனம் மாடத்தியின் இசை உரிமையைப் பெற்றிருக்கிறது

சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மாடத்தி இனி உங்கள் திரைகளில் காணலாம்.