வரலட்சுமி சரத்குமாரின் ‘சபரி’ படத்தின் முக்கிய ஷெட்யூல் கொடைக்கானலில் நிறைவு!

‘மஹா மூவிஸ்’ பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கும் ‘சபரி’ படத்தில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் இதற்கு முன்பு ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை மகரிஷி கொண்டலா வழங்குகிறார்.

இதன் படபிடிப்பு மிக விரைவாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய கட்டத்தை சமீபத்தில் படக்குழு முடித்துள்ளது. இதன் முக்கிய காட்சிகள் இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த கொடைக்கானல் ஷெட்யூலில் நடிகை வரலக்‌ஷ்மி மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நடிகர்கள் நடித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் மகேந்திர நாத் கொண்டலா தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசும்போது, “படத்தின் ஒரு பாடல், க்ளைமாக்ஸ் காட்சிகள் மற்றும் முக்கிய காட்சிகளை இந்த 14 நாட்களில் கொடைக்கானலின் அழகான இடங்களில் படமாக்கியுள்ளோம். சுசித்ரா சந்திரபோஸ் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இதுமட்டுமல்லாது, நந்து- நூர் இயக்கியுள்ள சண்டை காட்சிகளை இங்கு படமாக்கினோம்.

இதற்கடுத்து விசாகப்பட்டினம் ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் அனைத்து பாடல்களையும் பதிவு செய்து விட்டோம். பாடல்களை பாடகி சித்ரா, அனுராக் குல்கர்னி, ரம்யா பெஹரா மற்றும் அம்ரிதா சுரேஷ் பாடியுள்ளனர்” என்றார்.

மேலும் இயக்குநர் அனில் கட்ஸ் பேசியதாவது, “படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் பரபரப்பான திருப்பங்களை கொண்டது. இதில் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் பல கட்டங்களை உள்ளடக்கிய எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னால் இது போன்ற வேடத்தில் அவர் நடித்ததில்லை.

படத்தின் ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டும் சிறந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்” என கூறும் இயக்குநர் இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை தரும் என்கிறார்.

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கிறது. கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கோபி சுந்தரின் இசை படத்தில் முக்கிய கவனம் பெறும்.