விஷ்ணுவர்தன் உதவியாளர் இயக்கும் படம் ‘அதே கண்கள்’ !

vishnuvardhan

பல அறிமுக இயக்குநர்களுக்கு வெற்றி வாய்ப்புகளை அளித்து திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் மேலும் ஒரு புதுமுக இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் “அதே கண்கள்” எனும் படத்தை பிரம்மாண்டமாகவும், அதே நேரம் அனைத்து தரப்பு மக்களும் ரசித்து பார்க்கும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் தயாரித்துள்ளது.

சமையல் கலைஞனான வருண், தனியாக ஒரு ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறான். பத்திரிகையாளரான சாதனா, வருணின் நீண்ட காலத் தோழி. அவனை மனதார விரும்புகிறாள். சாதனா, வருணின் பெற்றோரைச் சந்தித்து, தனது திருமண ஆசையைத் தெரிவிக்கிறாள். அதே சமயம் வருண், துணிக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் தீபா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். அந்தச் சந்திப்பு வளர்ந்து காதலாகக் கனிகிறது. மூன்று பேரும் தங்கள் திருமணக் கனவினை நோக்கி நகரும் வேளையில் அசாதாரணமான நிகழ்வுகளும் திருப்பங்களும் அவர்களது வாழ்க்கையைப் புரட்டி போடுகின்றன. மூவரது விதியும் என்னவானது என்பதே ‘அதே கண்கள்’ சொல்லும் கதை.

இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட ரோகின் வெங்கடேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

கலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர், ஷிவதா கதாநாயகிகளாகவும் நடிக்க, பால சரவணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் அபிஷேக், சஞ்சய், லிங்கா, அரவிந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. தற்போது இறுதிகட்ட வேலைகள் மூம்முரமாக நடைபெற்று வருகின்றன.