30 திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டறிக்கை!

“திரைப்படங்களை விற்பனை செய்ய எங்களுக்கு உரிமையுள்ளது…” – தியேட்டர் அதிபர்களுக்கு தயாரிப்பாளர்கள் பதிலடி..!

சூர்யா, தனது சொந்தப் படமான ‘பொன் மகள் வந்தாள்’ திரைப்படத்தை… தியேட்டர் வெளியீட்டுக்கு முன்பாகவே OTT தளமான அமேஸான் பிரைம் தளத்தில் வெளியிட அனுமதித்திருப்பது தமிழ்த் திரையுலகத்தில் புயல் அடித்தாற்போல ஒரு விஷயம் பேசப்பட்டு வருகிறது.

இதையறிந்து கோபமடைந்த தியேட்டர் அதிபர்கள் சங்கம் “சூர்யா தன் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் மற்றும் அவரைச் சார்ந்தோர் வெளியிடும் படங்களை இனிமேல் நாங்கள் வெளியிட மாட்டோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார்கள்.

அதோடு, “இனிமேல் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களுக்குப் பிறகு OTT தளத்தில் வெளியாகும் திரைப்படங்களை மட்டுமே நாங்கள் எங்களது திரையரங்குகளில் திரையிடுவோம் என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்.

இந்த நேரத்தில் இது தொடர்பாக நேற்றும், இன்றும் அவசரமாக பல தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் வீடியோ கால் மூலமாக கலந்துரையாடினர். .

இந்தக் கருத்துப் பரிமாற்றத்தின் முடிவில் தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்றைக்கு இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கை இங்கே :

அனைவருக்கும் வணக்கம்! திரைப்பட தயாரிப்பு துறையில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். ஏனென்றால் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட முடியும். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும். இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை நாம் அனைவரும் வரவேற்று மேலும் பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கு வாங்க வேண்டும் என்று கோர வேண்டும்.
மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும், சட்டப்படி வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம்.
திரைப்பட துறை வளமாக இயங்க அனைத்து தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம்.  


இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT ப்ரீமியர் படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.
ஒற்றுமையை எதிர்நோக்கி,


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்  
இயக்குனர் பாரதிராஜா, K. முரளிதரன், T. சிவா, K.S. ஸ்ரீனிவாசன், K. ராஜன், K.E. ஞானவேல் ராஜா,         H. முரளி, K. விஜயகுமார், சித்ரா லக்ஷ்மணன், S.S. துரைராஜ், FEFSI சிவா,  YNOT S. சஷிகாந்த்,                G. தனஞ்செயன், S.R. பிரபு, ராஜசேகர் பாண்டியன், JSK. சதீஷ்குமார், C.V. குமார், சுதன் சுந்தரம் (PASSION STUDIOS), சுரேஷ் காமாட்சி, இயக்குனர் மனோபாலா, S. நந்தகோபால், Auraa Cinemaas மகேஷ்,     R.K. சுரேஷ், வினோத் குமார், P.S. ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், P.ரங்கநாதன், M.S. முருகராஜ், Dr. பிரபு திலக், ‘கின்னஸ்’ பாபு கணேஷ் மேலும் பல தயாரிப்பாளர்கள்.