4- ஆம் ஆண்டு ‘வானம் ‘கலைத் திருவிழா!

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. இதன் இரண்டாம் நிகழ்வாக PK ரோசி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் முதல் நாளான 08.04.2024 அன்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களால் பறை இசையுடன் துவங்கி வெகுசிறப்பாக நடந்து முடிந்தது.

முதல் நாள் நிகழ்வில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

இதனை தொடர்ந்து திரைக்கதையாசிரியர் ஜா.தீபா அவர்கள் தொகுத்த “சமூக சிந்தனை” எனும் தலைப்பில் இயக்குநர் அருண் மதேஸ்வரன், இயக்குநர் P. S. வினோத்ராஜ், இயக்குநர் கௌதம்ராஜ் ஆகியோர்கள் அடங்கிய கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் அருண் மதேஸ்வரன் “திரைத்துறையில் இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களின் வருகைக்கு பிறகு மிக எளிதாக சமூக சிந்தனைக் கொண்ட திரைப்படம் எடுப்பதற்கு வழிவகுத்தது” என்று பேசினார். அடுத்ததாக பேசிய இயக்குநர் P.S. வினோத் ராஜ் “ஒரு வட்டத்திற்குள் அடங்கி கொள்ளாமல் திரைப்பார்வையை விரிவடைய செய்ய வேண்டும்” என்றும் பேசினார். கடைசியாக இயக்குநர் கௌதம் ராஜ் அவர்கள் “சமூக அரசியல் என்பது என் வாழ்வில் கலந்த ஒன்றாகும்” என்று பேசினார். மேலும் இந்த திரைப்பட விழா இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதுமட்டுமல்லாமல் நாடக விழா, புகைப்பட விழா, ஓவிய கண்காட்சி மற்றும் தலித் இலக்கிய கூடுகை போன்ற பல நிகழ்வுகள் இம்மாதம் முழுவதும் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.