சிவாஜி- எம்.ஜி.ஆருக்கு சமமானவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் : சிவகுமார் புகழாரம்

sivakumar1தென்னிந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்படுபவருமான பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு  ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் சிவகுமார் பேசும் போது. ” இவ்விழாவின் மூலம் வேருக்கு மரியாதை செய்யும் விழுதுகளுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரும்  தனக்கென தனியான சரித்திரம் படைத்தவர்கள். அவர்களுக்குச் சற்றும் குறையாமல் சரித்திரம் படைத்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள்.அவரது  தாத்தா காலத்திலேயே வசதியான குடும்பம். அவரது  தாத்தா சென்னையில் நாலுகிரவுண்ட் இடத்தில் வீடு வைத்திருந்தவர்.  .

பிலிம் நியூஸ் ஆனந்தன் 90 வயது நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்.அவரது அஞ்சலி நிகழ்ச்சியில் துக்கமோ வருத்தமோ படத் தேவையில்லை. ஏனென்றால் அவர் பூரணமான  வாழ்க்கை வாழ்ந்தவர்.அவர் போல வாழும் வாய்ப்பு இனி எவருக்கும் கிடைக்காது. அவர் போல வாழவும் முடியாது.

film-news-anandan4அவரது நண்பர் தேவராஜ் நடத்திய ‘பிலிம் நியூஸ்’ பத்திரிகைக்கு போட்டோகிராபராக இருந்தார். அது முதல் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்றாகி விட்டார் .முதல் படம் ‘காளிதாஸ்’ 1931 அக்டோபர் 31ல்   வந்தது. அந்தப்  படம் முதல் 7000 படங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்து இருந்தார் பிலிம் நியூஸ் ஆனந்தன் . இரவு 12 மணிக்கு போன் செய்தால்கூட தகவல் தருவார், அலுக்க மாட்டார். கோபமே வராது. சாந்தசொரூபி.

என் முதல் படம் முதல் என்னைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து உதவி வந்தவர். இப்போது உள்ளவர்கள் போல நான் சம்பாதிக்கவில்லை.என் 125 வது படம் வந்த போதுதான் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன்.

அப்போது ஒவ்வொரு படத்தின் போதும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க உதவினார். என் 100 வது படம் வந்த போது 1979-ல் அவற்றை தயாரித்த 100 தயாரிப்பாளர்களையும் ஒரே மேடையில் அழைத்து எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது  நன்றி தெரிவித்து ஷீல்டு கொடுத்தேன். இந்த யோசனையைச் சொன்னவர் அவர்தான்.

1974ல் எனக்குத் திருமணம் ஆனது. இங்கிருந்து எல்லா பத்திரிகையாளர்களையும் கோயமுத்தூர் அழைத்துச் சென்று சிறப்பு செய்தவர் அவர். 1980 முதல் ப்ளஸ்டூவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டி வருகிறேன். இதற்குப் பின்னணியில் இருந்தது அவர்தான்.

அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்  என்றெல்லாம் சொல்வதைவிட அவர் போல பல பிலிம் நியூஸ் ஆனந்தன்கள் உருவாக வேண்டும் என்று சொல்லலாம். ஏனென்றால் அதுவே அவருக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்.” இவ்வாறு சிவகுமார் பேசினார் .தென்னிந்திய திரைப்படப் பத்திரிகை தொடர்பாளர் யூனியன் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

விழாவில் நடிகர்கள்  ராஜேஷ்,எஸ்.வி.சேகர்,  , மன்சூரலிகான், ராகவா லாரன்ஸ்,பூவிலங்கு மோகன், பாடகர் கானாபாலா, எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், இயக்குநர்கள் சங்கச் செயலாளர் ஆர்.கே. செல்வமணி,  நடிகை குட்டி பத்மினி, தயாரிப்பாளர்கள் ஏ.எல் அழகப்பன், கே.ராஜன், கதிரேசன்,எச் முரளி, ‘பெப்ஸி’ செல்வராஜ், ஜாகுவார் தங்கம், இயக்குநர்கள் பேரரசு, சக்தி சிதம்பரம்,   இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் ,கவிஞர்கள் சொற்கோ, கிருதியா,  பத்திரிகையாளர் நெல்லைபாரதி ,தென்னிந்திய திரைப்படப் பத்திரிகை தொடர்பாளர் யூனியன் செயலாளர் பெரு துளசி பழனிவேல் , கௌரவ தலைவர்  நெல்லை சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்