‘மூன்றாம் உலகப் போர்’ விமர்சனம்

3uporஇரு நாடுகள் அவை தொடர்பான புது வகையான போர் பற்றிய கற்பனைதான் இந்த  ‘மூன்றாம் உலகப் போர்’ படக்கதை.

இந்திய ராணுவத்தில் சுனில்குமார் மேஜர் பொறுப்பில் இருக்கிறார். விடுமுறைக்காக ஊருக்குச் செல்கிறார்.ஊரிலுள்ள அவரது பெற்றோர்கள், நாயகி அகிலா கிஷோரை அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே புது மாப்பிள்ளை மனைவியை விட்டு பிரிந்து ராணுவத்துக்கு சென்றுவிடுகிறார் சுனில்குமார்.

அந்த நேரத்தில் சீன ராணுவத் தளபதியான வில்சன், இந்தியாவில் நாசகார சதிவேலைகள் செய்து நம் நாட்டின் அமைதியை குலைப்பதற்காகத்  தனது மகனுடன் நூறு வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார். அவர்களைக் கண்காணிக்க ஒவ்வொருவர் உடம்பிலும் ‘ட்ராக்கிங் டிவைஸ்’ சிப் வைத்து அனுப்புகின்றனர்.

ஆனால், இந்தியாவுக்குள் நுழைந்த அந்த நூறு வீரர்களும்  திடீரென காணாமல் போகிறார்கள். அதனால்  அவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போகிறது.அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது சீனத் தளபதிகளுக்கு மர்மமாக இருக்கிறது.

இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் மேஜர் சுனில்குமார்  மீது சந்தேகம் வருகிறது. அவருக்கும்  அவரது கூட்டாளி வீரர்களுக்கும் இதுபற்றி தெரிந்திருக்கலாம் என்று சீன ராணுவத்தினர் அவர்களைப் பிடித்து   கடத்தி கொண்டுபோய் சிறை வைக்கின்றனர்.

அப்போது சுனில்குமாரை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்களை அநியாயமாகக் கொன்றுவிடுகிறார்கள். சுனில்குமாரிடம் அந்த நூறு ராணுவ  வீரர்கள் பற்றிய விவரங்களை கேட்டு அவரை பலவிதமாகத் துன்புறுத்துகிறார்கள்.

இறுதியில், அந்த நூறு  வீரர்கள் என்ன ஆனார்கள் என்பது சுனில் குமாருக்குத் தெரிந்ததா? அந்த நூறு வீரர்கள்  உண்மையில் என்னதான் ஆனார்கள்? சீன ராணுவத்தினரிடம் இருந்து சுனில்குமார் எப்படி தப்பித்தார்? என்பதே க்ளைமாக்சை நோக்கிச் செல்லும்  மீதிக்கதை.

நாயகன் சுனில்குமார் நல்ல வாட்டசாட்டமாக விஷால் மாதிரி இருக்கிறார்.இந்திய ராணுவ மேஜருக்கே உரித்தான மிடுக்குடனும், தைரியத்துடனும் அழகாக நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு ஜோடி இருந்தாலும், அவருடனான காதல் காட்சிகள் மிகவும் குறைவு. போர் சம்பந்தப்பட்ட படம் என்பதால், பெரும்பாலும் சீருடையும் உடம்புமாக துப்பாக்கியும்  கையுமாகவே வருகிறார். எனவே பரபரப்புப் பாதையில் கலகலப்புக்குப் பஞ்சமாகத் தெரிகிறது.

சீனாவின் தளபதியாக வரும் வில்சன்  நம்பிக்கை முகம்.நடை உடை பாவனையால் சிரிக்க வைத்தாலும், சித்ரவதை செய்யும்  காட்சிகளில் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். படத்தில் இவர் பேசும் வசனங்கள் இந்தியனாக நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது. இவருக்கும் நாயகனுக்கும் உண்டான காட்சிகளே படத்தில் பிரதானமாக இருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.அதில் நாயகி அகிலா கிஷோரும் அடக்கம்.  அவர் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார். இன்னமும் அவரிடம் எதிர் பார்த்ததால்  அகிலா கிஷோர் என்கிற நல்ல நடிகையின் நடிப்பைக்காண முடியாமல் போய்விடுகிறது

இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே ‘உலக’ப்போர் 2025-ல் நடப்பதாக வருகிறது. ஆனால், அந்தக்கால கட்டத்தில்  வளர்ந்த தொழில்நுட்பத்திற்காகக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

படத்தின் முதல் பாதி  உள்புறக்காட்சிகள்  என நான்கு சுவர்களுக்குள்ளேயே முடிந்துவிட்டாலும், மறு பாதியில் அண்டர் வாட்டர், நீர்மூழ்கி கப்பல், பறக்கும் போர் விமானங்கள் என்று  விஸ்வரூப வித்தை காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் தேவா.

பாடல்களில் கவனம் ஈர்த்திருக்கிற வேத் சங்கரின்  பின்னணி இசை சுமார் ரகம்.பின்னணியில் முதிர்ச்சி காட்டிக் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்திற்கு பெரிய பலம் வசனங்கள்தான். நாயகனாகட்டும், வில்லனாகட்டும் இருவரும் பேசும் வசனங்கள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கின்றன.நம் நாடு பற்றி சிந்திக்கவும் பெருமிதமும் கொள்ள வைக்கின்றன.

‘இந்தியனாக இரு இந்தியப்பொருள்களை வாங்கு ‘என்று நெத்தியடியாகச்  சொல்கிறது. காமெடி,பேய் சீசனைப் பற்றியெல்லாம் நினைத்துக்  கதை யோசிப்பதை விட்டு விட்டு நாட்டைப்பற்றிப் பேசியதற்கே இயக்குநர்  சுகன் கார்த்தியைப் பாராட்டலாம்.

படம் இயக்குநர் சொல்ல நினைத்ததை சொல்லத் தவறிய உணர்வைத் தருகிறது.இருந்தாலும் ‘மூன்றாம் உலகப் போர்’  போர் அடிக்கவில்லை.