ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள்தான் :ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேச்சு

rajbagadurரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள் தான் என்று ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் ரஜினி ரசிகர்களிடையே பேசினார்.

ரஜினி ரசிகர்களின் சார்பில் ‘மலரட்டும் மனித நேயம்’ என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் செய்திருந்தது.

பகல் முழுதும் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். மாலையில் விழாவில் சங்கமித்துக் கூடினர். அரசியல் கட்சி மாநாடு போல பிரமாண்ட கட்அவுட் , மாபெரும் மேடை ,பேனர்கள் , ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என சோளிங்கரே குலுங்கியது.

மாலையில் விழா தொடங்கியதும் விழாமேடையில் குத்து விளக்கேற்றப்பட்டது. ரஜினி மன்றத்தின் கொடியேற்றப் பட்டது. விழா மேடையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் திருவுருவப் படம் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவரும் ‘கபாலி’ தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ். தாணு ஆகியோரால் திறந்து வைக்கப் பட்டது.

மேடையில் தமிழ் நாட்டின் 33 மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றத்தலைவர்களும் பங்கேற்றனர். .

ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேசும்போது ” இது சாதாரண விழா அல்ல. இது ஒரு முப்பெரும் விழா என் நண்பன் ரஜினி நடிக்க வந்து 40 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா, அவரது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும விழா. இப்படி ஒரு முப்பெரும் விழாவாக இது நடக்கிறது..

ஏழைகளுக்கு நற்பணிகள் செய்ய இவ்வளவு சிறப்பாக பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதைச் சிறப்பாகச் செய்துள்ள சோளிங்கர் ரவியையும் அவரது தம்பி முருகனையும் பாராட்டுகிறேன்.

ரஜினியும் நானும் 45 ஆண்டு கால நண்பர்கள் சினிமாவில் நடிக்கும் முன்பே ரஜினி எனக்கு நண்பன். வாடா போடா நண்பர்கள் நாங்கள். இவ்வளவு உயர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனாலும் இன்றும் ரஜினியை ‘டா’ போட்டு கூப்பிடும் நண்பன் நான்தான். அப்படி அழைக்கும் உரிமை உள்ளவன் நான்.

kb-solingarசினிமாவில் 40 ஆண்டுகளாக நடிப்பதே சாதனை .அதுவும் ஒரு கதாநாயகனாக நிலைப்பது பெரிய சாதனை. 67 வயதிலும் ஒரு கதாநாயகனாக நிலைப்பது மிகப்பெரிய சாதனை.

இதற்கெல்லாம் யார் காரணம்? ரஜினி சாதனை மேல் சாதனை படைக்க யார் காரணம்?அன்பு ரசிகர்களாகிய நீங்கள்தான் இதற்கெல்லாம் காரணம்.

ஒரு முறை ரஜினி உடல் நலம் குன்றி ராமச்சந்திரா மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். டாக்டர்கள் பார்க்க யாரையும் அனுமதிக்க வில்லை நான் அங்கே போனேன் .ரஜினியைப் பார்க்காமல் போகமாட்டேன் என்று சொன்னேன். ஆனால் டாக்டர்கள் என்னைப் பார்க்க அனுமதிக்க வில்லை லதாரஜினிகாந்தும், ஐஸ்வர்யாவும் அரைமணி நேரம் என்னை அனுமதிக்குமாறு போராடினார்கன். ஒரு நிமிடமாவது அவரைப் பார்க்க விடுங்கள் என்றார்கள். இவ்வளவு தூரம் இப்படிக் கேட்கிறீர்களே இவர் யார் என்று டாக்டர்கள் வியப்போடு கேட்டார்கள்.அதுதான் நண்பன்.

போய்ப் பார்த்த போது என் நண்பன் ரஜினி, ஒரு குழந்தையைப் போல படுத்துக்கிடந்தான். எனக்கு அழுகையே வந்து விட்டது. மானைப் போலத் துள்ளிக் குதித்து வருபவன் அவனால் ஒரு நிமிடம் கூட ஓய்வாக உட்கார முடியாது.அப்படிப்பட்ட என் நண்பன் குழந்தையைப் போல படுத்துக்கிடந்தான்.

விரைவில் குனமாகிவிடுவான் என்றார்கள். மீண்டும் சிங்கப்பூருக்கு மேல் சிகிச்சைக்குப் போகிறான் என்றதும் நான் பதறிப் போனேன்.

ரஜினியை ‘டா’ போட்டு பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ரஜினியை அவர் வந்தார் ,போனார் என்று சொல்ல எனக்கு வாயே வராது. அவன் இவன் என்று சொல்லித்தான் பழக்கம்.

ஒரு நிகழ்ச்சியில் நான் ‘வாடா போடா’ என்று பேசியதும் எங்கள் தலைவரையே ‘வாடா போடா’ என்றுபேசுகிறாயா என்று ரசிகர்கள் ‘பிடிடா அவனை’ என்று என்னை அடிக்க வந்தார்கள். ரஜினி அவர்களைத் தடுத்து உங்கள் நண்பர்களை வாங்க ஐயா, போங்க ஐயா, சார் என்றா சொல்வீர்கள்? என்று கேட்டதும் அமைதியானார்கள். நட்புக்கு இலக்கணம் ரஜினி.

‘படையப்பா’ படத்தில் நடித்த போது எனக்கும் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதிலும் ‘வாடா’. என்று பேசும் வசனம் வந்தது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயக்கத்துடன் ‘ரஜினி சார் அவ்வளவு பெரிய நடிகர் அவரை நீங்கள் எப்படி இப்படிப் பேசுவது ?’என்று ‘வேண்டாம்’ என்றார். இதை அறிந்த ரஜினி, தடுத்து உள்ளபடியே ‘வாடா’. என்று பேசட்டும் என்றார்.

சிங்கப்பூர் போன ரஜினி திரும்பிவரக் காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான். ரஜினியின் ஆரோக்கியம், இளமை, சுறுசுறுப்பு எல்லாம் மீண்டும் வந்து நடிக்கிறார். இதற்கெல்லாம் காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான்.ரஜினி செத்துப் பிழைத்திருக்கிறார். ரஜினிக்கு உயிர் கொடுத்தது. நீங்கள்தான். என்னை வாழவைக்கும் தெய்வங்கள் என்று எப்போது ரஜினி பேச ஆரம்பித்தாலும் சொல்வார். அது உண்மைதான். அவரைக் கடவுளாக நீங்கள் நினைக்கிறீர்கள். அவர் உங்களை கடவுளாக நினைக்கிறார். இந்த விழாவை நடத்தும் சோளிங்கர் என். ரவி யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்த விழாவை நடத்துகிறார். இவர் ரஜினி குணமடைய வேண்டி சோளிங்கர் கோவிலில் 1308 படிகளை முட்டிக்கால் போட்டு ஏறியவர். இதை அறிந்த ரஜினி நெகிழ்ந்து போனார். அவரைச் சந்தித்தார் நெகிழ்ந்து போய் ‘என்னப்பா இதெல்லாம்’ என்று கட்டிப்பிடித்துக் கொண்டார். ரஜினி யார் திருமணத்துக்கும் போனதில்லை. இந்த ரவியின் தம்பி முருகனின் திருமண விழாவில் கலந்து கொண்டதுடன் ஓராண்டு கழித்து அவரது குழந்தைக்கும் ‘வைபவி’ என்று ரஜினி பெயர் வைத்தார். அப்படிப்பட்ட ரவி நடத்தும் இந்த விழாவுக்கு ரஜினியை அழைத்தேன். நான் வந்தால் விழா கெட்டுவிடும் என்றார். அவ்வளவு அழகாக இந்த விழா அமைந்திருக்கிறது. “இவ்வாறு ராஜ் பகதூர் பேசினார்.

திரையுலகிலிருந்து எஸ்.தாணு. இயக்குநர் என். லிங்கு சாமி, நடிகர்கள் தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா, கருணாஸ், கருணாகரன், ‘லொள்ளுசபா’ ஜீவா, வழக்கறிஞர் வி.பாலு. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

விழாவில் நலிவடைந்த  ரசிகர்களின் குடும்பத்தினருக்கு  15லட்ச ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்கள்,இஸ்திரிப்பெட்டிகள்,3 சக்கர சைக்கிள்கள்  பண உதவி என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக யூகே.முரளியின் இன்னிசை நிகழ்ச்சி நடை பெற்றது. இவ்விழாவை’ விஜய் டிவி’  தொகுப்பாளர் ஈரோடு மகேஷ்  மற்றும் பண்பலை ஆர்.ஜே. ஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.