அதர்வா தண்ணீர்கூட அருந்தாமல் உழைத்த படம் ‘ஈட்டி’!

eetti-adoஅதர்வா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “ஈட்டி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. .

விழாவில் முதலாவதாக பேசிய படத்தின் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் , ”நான் என்னுடைய முதல் படமான நாடோடிகளின் கதையை கேட்கும் போது எவ்வளவு உற்சாகம் அடைந்தேனோ அதே போல் இந்த படத்தின் கதையை இயக்குநர் ரவி அரசு என்னிடம் விளக்கும் போது அதைவிட பன்மடங்கு நான் வியப்படைந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். எல்லாப் படத்தின் முதல்விழா என்றால்அது இசை விழா தான். இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். என்னை பொறுத்தவரை இந்த படத்துக்கு இரண்டு நாயகர்கள் இருக்கிறார்கள் ஒருவர் அத்ர்வா மற்றொருவர் ஜி.வி.பிரகாஷ் குமார். அவரை படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு படத்தில் அவருடைய பங்கு மிக பெரியது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நிச்சயம் மிகபெரிய வெற்றி பெறும். நான் என்னுடைய வாலிப வயதில் நடிகர் முரளிக்கு மிகப் பெரிய ரசிகனாக இருந்தேன். இப்போது இந்த தலைமுறைகாரர்களான என்னுடைய மகன் செராபினும் முரளி சாரின் மகன் அத்ர்வாவும் இணைந்து பணியாற்றி இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் அத்ர்வாவின் உழைப்பை கண்டு அசந்துவிட்டேன் படத்துக்காக அவர் கடுமையாக உழைத்து தன்னுடைய சிக்ஸ் பேக்யை உருவாக்கி நடித்துள்ளார்.நிச்சயமாக இதற்கான பலன் அவருக்கு கிடைக்கும் ”என்றார்.

 

இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது, ”இந்த ஈட்டி படத்தின் கதையை முதலில் நான் தயாரிப்பதாகத்தான் இருந்தது. பின்னர் அது தாணு சாரிடம் சென்று மைகேல் ராயப்பன் சாரின் கைக்கு சென்றுள்ளது. நான் தயாரித்திருந்தால் படத்தை இவ்வளவு பெரிதாக தயாரித்திருக்கமாட்டேன். மைக்கேல் ராயப்பன் அவர்கள் மிகவும் துணிவான தயாரிப்பாளர் நிச்சயமாக படத்தை அவர் வேறு இடத்துக்கு கொண்டு செல்வார். ஜி.வி.பிரகாஷுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அவருடன் ஒரு கிரீன் டீ குடித்து கொண்டே ஒரே இரவில் , ஒரு பாடலின் கம்போசிங்யை முடித்துவிடலாம். நாயகன் அதரவா படத்துக்கு கொடுத்துள்ள உழைப்பு பெரியது. மூன்று நாட்கள் தொடர்ந்து தண்ணீர் அருந்தாமல் இருந்தால் தான் சிக்ஸ் பேக் வரும் என்று சொல்வார்கள். நாயகன் அதர்வா தண்ணீர் அருந்தாமல் இந்த படத்துக்காக எவ்வளவு உழைத்திருப்பார் என்பது பாடல் மற்றும் ட்ரைலரை பார்க்கும் போது தெரிகிறது.”என்றார்.

நாயகன் அதர்வா பேசியது , இந்த படத்தின் கதையை தாணு சார் தான் முதல் எனக்கு அனுப்பி வைத்தார். கதையை படித்தவுடன் எனக்கு பிடித்துவிட்டது. இந்த கதைக்கு பின்னால் இயக்குநர் வெற்றிமாறனும் இருக்கிறார் என்பதால்தான்  நான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். ரவி அரசு மிக சிறந்த இயக்குநர். நான் என்னுடைய முயற்சிகளில் உறுதியாக இருந்தேன். மேலும் இந்த படத்துக்காக மிக பெரிய அளவில் உணவு கட்டுபாட்டு முறையை கடைப்பிடித்து வந்தேன். அதனாலேயே எனக்கு படபிடிப்பு தளத்தில் அடிக்கடி மயக்கம் வரும். எனக்கு சில நேரங்களில் கண் மங்கலாக தெரியும். எதிரில் என்ன இருக்கிறது என்றே எனக்கு தெரியாது , கேமராவை கூட நான் தேடிக் கொண்டு தான் இருப்பேன். அந்த நேரங்களில் நான் ஏதாவது ஒரு திசையை நோக்கி நடிக்கிறேன் நீங்கள் அதை படம் பிடித்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவேன். பாக் மில்கா பாக் படத்தில் நடிகர் இயக்குநர் பார்ஹான் அக்தர் அவர்களின் நடிப்பை பார்த்து நான் மிரண்டுவிட்டேன். அவருடைய நடிப்பு தான் இந்த படத்தில் நான் நடிக்க மிக பெரிய பலமாக இருந்தது. பாக் மில்க்ஹா பாக் படம் தான் இந்த படத்துக்காக நான் கடுமையாக உழைக்க என்னுள் வெறியை உண்டாக்கியது ”என்றார்.

விழாவில் படத்தின்  நாயகி ஸ்ரீ திவ்யா , படத்தின் தயாரிப்பாளர் ,செரொபின் ராய சேவியர் , இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் சரவணன், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு , கதிரேசன் , தேனப்பன் பி.எல் , கே.ராஜன்  ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.