அன்னதானம் வழங்கி பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் வெற்றி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகரான வெற்றி இன்று தன் பிறந்தநாளை, கோவிலில் எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடியுள்ளார் .

தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடித்து,  நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிது. ஆனால் அறிமுகமாகி எட்டு தோட்டாக்கள், ஜீவி என முதல் இரண்டு படங்களிலேயே, அந்த உயரத்தை அடைந்தவர் நடிகர் வெற்றி. அவர் படங்களின் கதைக் களங்கள் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு, ரசிகர்களின் ரசிப்புத் திறனைக் கூட்டுவதாக அமைந்துள்ளது. தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திலும் தன்னை மெருகேற்றிக் கொள்வதோடு, ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறார் வெற்றி. அவருக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது.

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் இவர், தன் படங்கள் போலவே தன் பிறந்தநாளையும் தனித்துவமாகக் கொண்டாடியுள்ளார். தான் வசிக்கும் சின்மயா நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர், அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து அங்கு எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி, அவர்களுடன் தன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

ரசிகர்கள் நடிகர் வெற்றிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவரின் இனிமையான குணத்தைப் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான களங்களில் புதுமையான படங்களைத் தந்து அசத்தி வரும் நடிகர் வெற்றி தற்போது, இரவு, ஆலன், ஈரப்பதம் காற்று மழை முதலான படங்களில் நடித்து வருகிறார்.