’இந்தியன் 2’ என்னாச்சு? : ’விக்ரம் ’ விழாவில் கமல் பதில்!

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படம் அடுத்த மாதம் ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.அனிருத் இசையமைப்பில் ஏற்கெனவே வெளியான ‘பத்தல பத்தல’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகியுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் தயாரித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

‘விக்ரம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் கமலஹாசன் கலந்து கொண்டார். இதில், நடிகர் கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது கமல்ஹாசன் கூறுகையில், “4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. 4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக எனது அன்பான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

அவர் மேலும் பேசும் போது,”‘விக்ரம்’ படத்தின் தலைப்பைக் கேட்டது இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் . 36 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘விக்ரம்’ படத்தின் சீக்குவல் என்று நம்புவது உங்களுடைய நம்பிக்கை . எனது பல படங்களுக்கு லோகேஷ் கனகராஜ் ரசிகர் என்பதால், ‘சத்யா’ என்று கூட பட தலைப்பு வைத்திருப்பார், ஆனால் இந்தப் படத்திற்கு ‘விக்ரம்’ தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்ததால் அதை வைத்துள்ளார்” என்றவர், ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகம் குறித்து லோகேஷ் கனகராஜ் தான் சொல்ல வேண்டும்; அதற்கும் இவர்தான் இயக்குநர் என நான் முடிவு செய்துவிட்டேன்” என தெரிவித்தார்.

இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ பாடலில் உள்ள பாடல் வரிகளுக்கு விமர்சனங்கள் கிளம்பியிருக்கிறதே என்று கேள்வி எழுப்பியபோது, ”ஒன்றியம் என்ற வார்த்தைக்கு தமிழில் பல வார்த்தைகள் உள்ளது என்றும், பத்திரிகையாளர் ஒன்று சேர்ந்துள்ள இந்தக் கூட்டமும் ஒன்றியம் தான், இயக்குநர்கள் எல்லாம் ஒரு சங்கம் வைத்து நடத்தினால் அதுவும் ஒன்றியம் தான், தயாரிப்பாளர்கள் எல்லாம் சேர்ந்த வைத்துள்ள சங்கமும் ஒன்றியம் தான், இந்த சங்கங்களில் தவறுகள் நடந்தால் படம் பாதிக்கப்படும் அந்த மாதிரி எடுத்துக்கொள்ளலாம் ” என்றும் ’இந்தியன் 2’ நிச்சயம் முடிக்கப்பட்டு வரும்” என்றும் கூறினார்.அதன் பிறகு செய்தியாளர் ஒருவர் கமல்ஹாசனிடம் “மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று விக்ரம் படம் வெளியிடுவது திட்டமிட்டதா” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் “சினிமாக்காரனாக கலைஞரைப் பற்றிப் பேச ஆயிரம் உள்ளது. அது தற்செயலாக நடந்தது ” என்றார்.