‘ஊமைச் செந்நாய்’ விமர்சனம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய புகழ்பெற்ற நாவல் ஊமைச்செந்நாய்இந்தத் தலைப்பைக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இது.
படம் ஆரம்பிக்கும் போது ஜெயமோகனுக்கு நன்றி கார்டும் போடுகிறார்கள்.

மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, கஜராஜ் உள்ளிட்டோர் நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் சினிமா ஊமைசெந்நாய். குறைந்த பொருட் செலவில் தனக்கான குழுவைக் கொண்டு நல்ல த்ரில்லர் சினிமாவை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் அர்ஜுனன் ஏகலைவன்.

நகரின் முக்கியஸ்தர்களை பின் தொடரும் ஒரு டிடக்டிவ் குழு அதில் வேலை செய்யும் நாயகன், அரசியல்வாதி, காவல்துறை அதிகாரி என கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களுக்குள் நடக்கும் வன்முறை துரோகம் என ஒரு சஸ்பன்ஸ் சினிமாவாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. நாயகன் மைக்கேல் தங்கதுரைக்கும் நாயகிக்கும் இடையில் நடக்கும் காதல் காட்சிகள் இதம்.

அவர்கள் இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால் தன்னை தேடி வரும் பெண்ணின் அன்பைப் புரிந்து கொள்ளாமல் ஏன் அவ்வளவு இறுக்கமாக இருக்கிறார் நாயகன் என்றுதான் புரியவில்லை. டிடக்டிகவ் குழு தலைவராக கஜராஜின் தேர்வு மிகச்சரி. பெட்ரோல் பங்க் முதலாளி கதாபாத்திரம் அவரது மனைவி விஜயஸ்ரீ மற்றும் மகள் பாத்திரம் என எல்லாமே கதைக்குத் தேவையாக உள்ளது.

ஒளிப்பதிவை இன்னுமே சிறப்பாக செய்திருக்கலாம். சிவாவின் இசையில் மெலடி பாடல் ரசிக்க வைக்கிறது. கண்டெய்னருக்குள் நடக்கும் சண்டைக் காட்சியாகட்டும். விவசாய நிலத்தில் நடக்கும் இறுதிக்காட்சியாகட்டும் நல்ல முயற்சி. குழுவின் உழைப்பு தெரிகிறது. க்ளைமாக்ஸ் உட்பட பல காட்சிகள் மிஷ்கின் படங்களை நினைவுபடுத்துவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

திரைக்கதை அமைப்பில் இன்னும் கவனம் காட்டியிருக்கலாம். ஏனென்றால் த்ரில்லர் படத்துக்கான விறுவிறுப்பு கொஞ்சம் குறைவாக உள்ளது ,என்றாலும் இயக்குநருக்கு இது முதல் படம் என்பதால் சில குறைகளை மறந்து நிச்சயம் பாராட்டலாம்.