‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பொதுமக்களுக்கான சிறப்பு குடும்பக் காட்சியைத் திரையிடும் தங்கர் பச்சான்!

செப்டம்பர 1 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பொதுமக்களுக்கான சிறப்பு குடும்பக் காட்சியை திரையிடும் தங்கர் பச்சான்

தனித்துவமான இயக்குநரான தங்கர் பச்சான், மக்களின் மனதுக்கு மிக நெருக்கமான, உணர்வுப்பூர்வமான படங்களை கொடுத்து வருபவர். அந்த வகையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

பாரதிராஜா, கவுதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

தங்கர் பச்சானின் படங்கள் என்றாலே மனித உறவுகளின் மேன்மையை, குடும்பங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இருக்கும் என்பதால் யதார்த்த மனிதர்களிடம் அவரது படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.

அதனால் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்திய திரையுலக வரலாற்றிலேயே ஒரு புது முயற்சியாக ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னதாக இப்படத்திற்கான குடும்ப காட்சி (Family Show) ஒன்றை திரையிட ஏற்பாடு செய்துள்ளார்.

பொதுவாக ஒரு படம் வெளியாகும் முன் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் காண்பிக்கப்படுவது வழக்கம். ஆனால் முதல்முறையாக பொது மக்களுக்காகத் திரையிடப்படும் இம்முயற்சி அனைவரையும் மிகவும் வியப்பிற்குள்ளாக்குகிறது.

கவனம் பெற்ற இந்த சிறப்பு காட்சியை, ஆர்வமுள்ள ரசிகர்களுக்குள் போட்டிக்கான நிபந்தனைகளை அறிவித்து தகுதியானவர்களை தேர்வு செய்து சென்னை கமலா தியேட்டரில் திரையிட இருக்கிறார்.

வருகிற 26ம் தேதி நடக்கும் இந்த சிறப்பு குடும்ப காட்சி, இந்தியாவில் புகழ் பெற்ற படப்பிடிப்பு தளங்களில் ஒன்றான வடபழனியில் நிகழ்வது சிறப்பு வாய்ந்தது.

இவர்களோடு, படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.