காதலி மீது காதலனுக்கு ஆச்சர்யம் தீருகிற போது காதல் தீர்ந்து போகிறது..!
கவிப்பேரரசு வைரமுத்து..!

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ள படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது,

”தங்கர் பச்சான் தோற்கக்கூடாத கலைஞன், தங்கர் பச்சானை இயக்குநராக மட்டும் அறிவீர்கள். ஆனால், சினிமாவை டிஜிட்டலில் கொண்டு வருவதற்கு முன்பு “காகிதம்” பத்திரிகையில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். எனது அருமை நண்பர் வீரசக்தி, தயாரிப்பாளர் ஆவதற்கு முன்பு திருச்சியிலிருந்து எனக்கு தோழமை கொண்டவர் வீரசக்தி.

ஒரு படம் தயாரிப்பது துயரமான சம்பவம்.
ஒரு முட்டையின் மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பது போல தான் இப்போது சினிமா தயாரிப்பது இருக்கிறது.
அருமை நண்பர் ஜி.வி.பிரகாஷ், இளமைக்கு இளமையானவர், முதிர்ச்சிக்கு முதிர்ச்சியானவர், நடிகருக்கு நடிகர், இசையமைப்பாளருக்கு இசையமைப்பாளர்.
இவர் இத்தனையிலும் இந்த போடு போடுகிறாரே.. இசையில் மட்டுமே இருந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இசையமைப்பார்.

இன்று இசை மாறியிருக்கிறது என்று சொல்லுகிறார்கள், மாறியிருப்பது வெறும் ஓசைகளாக, வெறும் அதிர்வலைகளாக, வாத்திய கூத்துகளாக இருந்துவிடக் கூடாது. அவை மனதில் மீட்டப்படுகிற மெல்லிய வீணை என்பதை இப்படத்தின் அத்தனை பாடல்களும் உணர்த்துகின்றன.

எல்லா தலைமுறையிலும் 5 படிகள் இருக்கின்றன. அந்த 5 படிகளுக்கும் ஆட்கள் இருக்கின்றார்கள். வல்லிசைக்கு சிலர், துள்ளிசைக்கு சிலர், மெல்லிசைக்கு சிலர், என்று சமூகம் பிரிந்து கிடக்கின்றது. ஆனால், 3 தலைமுறைக்கும் பாடலாக இப்படத்தின் பாடல்கள் அமைந்துள்ளது.

ஒருவன் பெண் பிள்ளையைக் தத்தெடுக்கிறான், உறவுகளற்ற உலகத்தில் நீ ஒருத்தி தான் உறவு என்று கொஞ்சுகிறான். அந்த பிள்ளையைப் பிரிந்துவிட்டால் வாழ்வே அறுந்துவிடும் என்று அஞ்சுகிறான். அப்போது அவர்களுக்கான பாடல், “என்னை விட்டு போய்விடாதே” என்ற பாடல். நான் தங்கர் பச்சனிடம் யார் இந்தப் பாடலுக்கான நடிகர் என்று கேட்டேன். அந்த தந்தை யார் என்றேன், யோகி பாபு என்றார்கள். அவர் சிகையை மாற்றுவாரா என்றேன். இல்லை என்றார்கள். அதை வைத்து பாடல் வரிகளை இப்படி அமைத்தேன்…

என் பறட்டைத் தலையிலே, சுருட்டைத் முடியிலே கூடு கட்டு குயிலே… காட்டு விட்டு தந்த மயிலே… என் கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே. என்று எழுதினேன் தங்கர் பச்சான் மகிழ்ந்துவிட்டார்.

தங்கர் பச்சானிடம் பிடித்த விஷயம், எதைக் கண்டாலும் ஆச்சரியப்படுவார். ஒரு பூவைப் பார்த்தால் ஆச்சர்யப்படுவார், பறவை பறந்தால் ஆச்சர்யப்படுவார், நீரை டம்ளரில் ஊற்றும் போது நுரை வந்தால், அடடே! நுரை என்று ஆச்சர்யம். காபி ருசியாக இருந்தால் ஒரு ஆச்சர்யம், என்னைப் பார்த்தால் ஆச்சர்யம். எனக்கு அவரைப் பார்த்தால் ஆச்சர்யம்.

ஆச்சர்யம் தீர்ந்துபோகும் போது வாழ்க்கைத் தீர்ந்து போகிறது. எப்போது வாழ்க்கை சலிப்படைக்கிறது தெரியுமா? வாழ்க்கையில் மனைவியின் மீதான ஆச்சர்யம் தீர்ந்துபோகிற போது கணவனுக்கு வாழ்க்கை முடிந்து போகிறது, காதலி மீது காதலனுக்கு ஆச்சர்யம் தீருகிற போது காதல் தீர்ந்து போகிறது, ஒரு தலைவன் மீது தொண்டன் கொண்ட ஆச்சர்யம் தீருகின்ற போது அரசியல் அஸ்தமித்து போகிறது, குழந்தையின் மீது தகப்பனுக்கு ஆச்சர்யம் தீர்ந்துபோனால் குழந்தை வளர்ந்துவிட்டது என்று அர்த்தம்.

ஒரு கலையைப் பார்த்து கலைஞனது ஆச்சர்யம் தீர்ந்து போனால் கலை நீர்த்துப் போய் விடுகிறது. ஆச்சர்யத்தால் உங்கள் வாழ்க்கை பரிணமிக்கும், ஆச்சர்யம் தீர்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் தங்கர் பச்சானைத் தொட்டு சொல்லுகிற செய்தி.

என்னுடைய ஆருயிர் சகோதரர் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா, சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மேடைக்கு வந்து உங்களையெல்லாம் சந்தித்து மகிழும் வாய்ப்பை இழந்திருக்கிறார்.

ஒரு மனிதன் வாலிபப் பருவத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கிறான். அதை நினைத்து வாழ்நாள் எல்லாம் குற்றஉணர்வோடு இருப்பதைக் கூறும் படம் தான் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம்.

“கருமேகங்கள் கலைகின்றன” என்ற தலைப்பே ஒரு கவிதை. இந்த தலைப்புக்கு அவர் செய்திருக்கிற நியாயம் அபாரம்.

இப்படத்தை நீங்கள் திரையரங்கிற்குச் சென்று பார்க்க வேண்டும். திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறும் போது வருத்தமாக இருக்கிறது.

ஒரு திரைப்படத்தை, திரையரங்கிற்கு சென்று பார்க்கிற பொழுது தான் திரையரங்கம் பொது மக்களின் கலையாக இருக்கும். வீட்டிலிருந்து ஒரு படம் பார்த்தால் அது அவ்வளவு சுகப்படாது. உங்கள் தனிமையை உறுதி செய்யும் இடத்தில் தான் திரைப்படம் பார்க்கப்படுகிறது. உங்கள் தனிமையால் தான் கலை ரசிக்கப்படுகிறது. உங்கள் கைபேசிக்கு வேலை இல்லாமல் இருக்கும் இடத்தில் தான் கலை அதன் முழுமையான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

வீரசக்தி, தங்கர் பச்சான் மற்றும் இந்த படம் அனைத்தும் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ” என்றார்.

அவரிடம் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு எந்தப் பாடலை அர்பணிப்பீர்கள் என்ற கேள்விக்கு, பூங்காற்று திரும்புமா? என்ற பாடல், தங்கர் பச்சானுக்கு ஒன்பது ரூபாய் நோட்டு மாதவனாக வாழ்ந்து பாரு என்ற பாடல், அவர் மாதவனாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தங்கமே தமிழுக்கு இல்லை பாடல் ஜி.வி.பிரகாஷுக்கு அளிப்பேன் என்று கூறினார்.

தங்கர் பச்சான், ‘என் உரிமை’ என்று என்னைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். (படக்குழுவினர் அனைவரும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பிறகு தங்கர் பச்சான் வைரமுத்துவை பற்றிப் பேசும்போது..

“மக்களுக்கு கவிதை என்பது திரைப்படங்கள் மூலமாகத்தான் சேர்கிறது. திரைப்படங்கள் இல்லாமல் இருந்திருந்தால் தமிழை விட்டு வெளியேறியிருப்பார்கள். திரைப்பட பாடல்கள் மூலமாகத்தான் தமிழ் நிலைத்துக் கொண்டு இருக்கிறது. கலைவாணர், கண்ணதாசன், வாலி இவர்களுக்குப் பிறகு வைரமுத்து தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பிறகு யார் என்ற கேள்வி வருகிறது. தமிழ்த்தாய் கொடுத்த மிகப்பெரிய செல்வம் அண்ணன் வைரமுத்து அவர்கள். தமிழ் மக்கள் எந்தளவிற்கு வாழ்ந்திருந்தால், திருக்குறள் உருவாகியிருக்கும். திருவள்ளுவனுக்கு முன்பே தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்” என்றார்.

அதற்கு வைரமுத்து, “வாழையடி வாழையாக தமிழ் மொழி வளரும். அதற்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவர் வருவார். அப்படி ஒருவர் வரும்வரை இந்த வைரமுத்து இருப்பார்” என்று பதிலளித்தார்.

விழாவில் கவுதம் வாசுதேவ் மேனன் பேசும்போது,

“தங்கர் பச்சான் கேட்டு என்னால் நோ என்று சொல்ல முடியாது. பாரதிராஜா சார் தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று கூறினார். நடிப்பதை விட இயக்குவது தான் சுலபம். இந்த படத்தில் நிறைய காட்சிகளில் புதுவிதமாக நடித்திருக்கிறேன். நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன். ஆனால், யோகிபாபுவுடன் காட்சிகள் இல்லாததில் வருத்தமாக இருந்தது. அடுத்த படத்தில் அவருடன் நடிப்பது குறித்து பேசியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் அனைவருக்குமே ஒரு தேடல் இருக்கும். பாரதிராஜா சாருக்கு ஒரு தேடல் இருக்கும், அதிதி பாலன் ஒரு விஷயமாக தேடிக் கொண்டிருப்பார். நான் ஒன்றைத் தேடிக் கொண்டிருப்பேன். பாரதிராஜா சாருக்கு மகனாக நடித்திருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் பாரதிராஜா சார் என்னை அடிக்க வேண்டும், முதலில் தயங்கினார், பின்பு அடித்துவிட்டார். எப்போதோ வாங்க வேண்டியதை இப்போது வாங்கிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டேன்.

தங்கர் பச்சானுடன் நிறைய பேசுவோம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் தான் இப்படத்தில் நான் இருக்கிறேன்.

தங்கர் பச்சான் என்னுள் நிறைந்தவன் என்று என்னைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அது ஏன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். அதேபோல், அவரும் எனக்குள் நிறைந்திருப்பார். ஜி.வி. நீங்கள் நன்றாக பணியாற்றியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை, வாழ்த்துகள்” என்றார்.

இவ்விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது,

“6 மாதங்களுக்கு முன்பு என்னைத் தொடர்பு கொண்டு உன்னை சந்திக்க வேண்டும் என்றார். முகவரி கொடுங்கள் வருகிறேன் என்றேன், ஆனால், நானே வருகிறேன் என்றார். அவரிடம் பேசும்போது தான் இன்னும் பல நேரம் பேச வேண்டும் என்று நினைத்தேன். அப்போது அவரிடம்.. அழகி எனக்கு மிகவும் பிடித்த படம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களைப் பற்றியும் கூறினேன். அவருடைய அனைத்து படங்களையுமே பார்த்திருக்கிறேன்.

அவர் இந்த விழாவிற்கு அழைத்தார், என்னால் மறுக்க முடியவில்லை. ஆகையால், லியோ படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே வந்துவிட்டேன் என்றார்.

இயக்குநர் தங்கர் பச்சான் அவருடைய மண்ணில் விளைந்த முந்திரி பருப்பு மற்றும் பலாப்பழம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்தார்.

தங்கர் பச்சான் லோகேஷ் கனகராஜை பற்றி பேசும் போது..

“இந்திய சினிமாவே திரும்பி பார்க்கக் கூடிய இயக்குநராக இருக்கிறார். வெற்றி மட்டுமல்ல, மென்மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும். இன்று விஜயை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார். நான் அழைத்ததற்காக படப்பிடிப்பை விட்டுவிட்டு வந்திருக்கிறார். நான் வந்திருப்பேனா என்று தெரியாது. அவருக்கு நன்றி” என்றார்.

விழாவில் நடிகர் நடிகர் டெல்லி கணேஷ்பேசும்போது,

“இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அருமையாக பேசிவிட்டார். இதற்கு மேல் நான் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த விழாவிற்கு தங்கர் பச்சான் என்னை அழைத்தார். இந்த படத்தில் என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இயக்குநர்கள். இவ்வளவு பெரிய ஜாம்பவான்களின் இடையில் இருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். படப்பிடிப்பில் நான் எது செய்தாலும் பாராட்டினார். அது எனக்குப் பயமாக இருந்தது.
தங்கர்பச்சான் மிகவும் கோபக்காரர் .
எப்போதும் தன்னுடைய கருத்தில் இருந்து சிறிதும் மாறமாட்டார். இப்படத்திற்காகப் பல சிறந்த இடங்களைத் தேடிப் பிடித்து எடுத்திருக்கிறார்.

மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கிய ‘பாயசம்’ குறும்படத்தில் அதிதி பாலனுக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன், அப்படத்தில் கதைப்படி ஒரு காட்சியில் நான் தப்பு செய்துவிடுவேன்,நீயா இப்படி பண்ணுனே? உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கவே இல்லையே ?என்று எந்த வசனமும் இல்லாமல் கண்ணாலேயே பேசி விடுவார் அப்படி ஒரு அற்புதமான நடிகை.அவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

உன்னை வைத்தே ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் இயக்குநர் தங்கர் பச்சான் கூறியிருக்கிறார். அது நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நான் ஒரு சிறிய பாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன், நான் கேமராவை நேசிப்பவன்.

தங்கர் பச்சான், எனக்கு மிகவும் பிடித்த வார்த்தையான பண்பாளர் என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார்,நன்றி”.. என்றார்.

விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது,

“என்னுடைய வெண்ணிலா கபடி குழு படத்தின் முதல் நாளில் என்னிடம் அதிகமாக பேசிய நபர் தங்கர் பச்சான் சார், இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. அவர் எப்போதுமே தரமான படங்களைத் தான் இயக்கியிருக்கிறார். ஆனால், அவருக்கு இன்னும் சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை.

ஜீ.வி.பிரகாஷ் எப்போதுமே உணர்வுபூர்வமான இசையைக் கொடுப்பார். இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். யோகிபாபு நடிக்க வந்த புதிதில்,
யோகிபாபுவின் போட்டோ ஒன்றைப் பார்த்தேன்.. தனித்தன்மையாக இருந்தார். அவரை ராஜபாட்டை படத்தில் நடிக்க வைத்தேன். வில் அம்பு திரைப்படத்தில் முழுநீளப் பாத்திரத்தைச செய்தார். விளம்பர ரீதியாக சூரியைக் கேட்டோம், அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால், யோகிபாபு நன்றாக நடித்திருக்கிறார் என்றார்கள். இன்று இவரை வைத்து படம் எடுத்தால் வியாபார ரீதியாக வெற்றி பெறும் என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறார். இரவு பகலாக பல படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிதி பாலன் தமிழ் சினிமாவின் சொத்தாகவே மாறியிருக்கிறார்.
பாரதிராஜா சார் நமக்குக் கிடைத்த பொக்கிஷம். அவர் இன்னும் 5 படங்கள் இயக்க வேண்டும், 50 திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”என்றார்.

நடிகை மஹானா சஞ்சீவி பேசும்போது,

“பள்ளிக்கூடம் படிக்கும்போது தங்கர் பச்சான் சாரின் பள்ளிக்கூடம் படம் பார்த்தேன். இந்த படத்திற்கு என்னை அழைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீ தமிழ் பெண் என்பதால் தான் உன்னை இந்த படத்திற்கு அழைத்தேன் என்று கூறினார், அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பெரிய இயக்குநர்களுடன் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். ஜி.வி.பிரகாஷ் சார் இசையில், சைந்தவி மேடம் பாடியிருக்கிறார். வைரமுத்து சார் வரிகளில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது.

என்னுடைய கதாபாத்திரம் மீனாகுமாரி, என்னுடைய வயதிற்கு மீறியதாக இருக்கும். இப்படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை விட வாழ்ந்திருக்கிறேன் என்று தான் கூறவேண்டும். அதேபோல், கிளிசரீன் உபயோகிக்காமல் நடித்தேன். அதற்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று கேட்டார், நான் இரண்டு நிமிடங்கள் எடுத்து கதாபாத்திரத்தை நினைத்து ஒவ்வொரு காட்சியிலும் கிளிசரீன் போடாமல் தான் நடித்திருக்கிறேன். மேக்கப் இல்லாமல் என்னை அழகாக காட்டியிருப்பதற்கு நன்றி” என்றார்.