காம்ரேட் தமிழனுக்கு ஒரு லால் சலாம்: எழுத்தாளர் அஜயன்பாலா !

இன்று காலை இயற்கை ஈ பேராண்மை பொறம்போக்கு என்கிற . பொது உடைமை மற்றும் வெளிவர விருக்கும் லாபம் படங்களை இயக்கிய ஜனாசார் அவர்களுக்கு இறுதி யாத்திரை!

ஜனா சார் இயக்கி வெளிவரவிருக்கும் லாபம் படத்துக்காக 2017ல் கும்பகோணத்தில் கதைவிவாதத்தில் கலந்துகொண்டது அவரை முழுமையாக பல்வேறு பரிணாமங்களுடன் புரிந்து கொள்ள உதவியது. முன்னதாக முதன் முதலாக என்னுடைய நாயகன் மார்க்ஸ் நூலைப்படித்துவிட்டு பார்க்கவேண்டும் என அழைத்த போதுதான் அறிமுகம் அவர் நடத்திவந்த சினிமா கண்காட்சிக்கு ஒரு நூலை தொகுக்கும் பொருட்டு அந்த சந்திப்பு நிகழ்ந்தது. பிற்பாடு சங்க நடவடிக்கைகளின் நிமித்தம் அவரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தாலும் அவரது உதவியாளர் கல்யாண எடுக்கவிருக்கும் இரண்டாவது படத்துக்ககான கதை விவாதம் அவரது ராயப்பேட்டை இருப்பிடத்தில் நடந்த போதுதான் நெருக்கமாக பழக முடிந்தது. இதனைத் தொடர்ந்து தான் திருவண்ணாமலையில் ஒரு சில நாட்களும் கும்பகோணத்தில் இருபது நாட்களுமாக லாபம் படத்தில் கலந்துகொண்டேன்

இந்த நாட்களில் அவரை அணுகி பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அவரது அனுபவங்களை இங்கு தொகுத்து தருவது இந்நாளில் அவரை கூடுதலாக புரிந்து கொள்ள உதவக்கூடும் வழக்கமாக ஜனாசாரை அனைவருக்கும் ஒரு மார்க்சிய சித்தாந்த வாதியாக மட்டுமே தெரியும். ஆனால் அவரிடம் தமிழர் வரலாறு தொன்மம் ,கலை பண்பாடு குறித்த அறிவியல் பூர்வமான தேடலும் நுண்ணறிவும் ஒரு டாக்டர் பட்டம் பெற தகுதியான புத்தகம் எழுதும் அளவுக்கு தகவல்களு,ம் இருந்தது பலருக்கும் தெரியாத விடயம்
.
ராஜ ராஜ சோழன் குறித்த திரைப்படம் ஒன்றுக்காக அவர் தஞ்சை பெரிய கோயில் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் போது தமிழர் கட்டிடக்கலையில் இருந்த வியக்க வைக்கும் மேதமையும் ஆற்றலும் அவரை சிலிர்க்க வைத்துள்ளது . தொடர்ந்து அவர் தமிழ் நாடு முழுக்க பயணப்பட்டு இத்துறை சார்ந்த பல அறிஞர்களை சந்தித்து அவர்களுடன் அவர் கருத்து விவாதம் செய்து தெரிந்துகொண்ட தகவல்களை அவ்வப்போது என்னுடன் பகிரும் போது எனக்கு அது புதிய ஜன்னல்களை திறந்து வைத்தது. வெறுமனே தகவல்களாக இல்லாமல் எந்த துறையாக இருந்தாலும் அதன் எண் தசம விகித கணித இலக்கணங்களுடன் உரிய வார்த்தைகளுடன் துல்லியமாக நமக்கு விளக்க முனைவது அவருடைய உரையாடலில் எனக்கு ஆச்சர்யமளித்த விடயம் .

இவ்வளவு தகவல் தெரிந்து வைத்திருந்தாலும் ஒரு புதிய சிறிய வயது இளைஞன் அவருக்கு தெரியாத புதிய தகவல்களையோ அல்லது புத்தகத்தையோ சினிமாவையோ சொல்ல ஆரம்பித்தால் ஒரு குழந்தை போல அவனை வியந்தோதி என்னாபா பயமுறுத்துறியே என குழந்தையாக மாறிவிடுவார் .

அவருக்கு பலமே அவருடைய உதவியாளர்கள் தான் . ஒவ்வொருவரும் இருபது வருடம் இருபத்தைந்து வருடம் அவருடன் பயணிப்பவர்கள் . எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் இவ்வளவு காலம் ஒரே இயக்குநருடன் பயணிக்கும் உதவி இயக்குநர்கள் அவரிடம் மட்டும் தான் . காரணம் அவரிடம் இருக்கும் கம்யூன் வாழ்க்கை. அவருடைய இருப்பிடமே ஒரு கூட்டுப்பண்ணை வாழ்க்கைதான் . சீமான் அண்ணனுக்கு பிறகு ஒரே சமயத்தில் அனைவரும் வட்டமாக அமர்ந்து சமைத்த உணவை பகிர்ந்து சாப்பிடும் அழகை அவரிடம் மட்டுமே பார்த்து நெகிழ்ந்தேன் .

சிலர் முதல் படத்தின் போது இப்படி ஒரு வாழ்க்கையில் துவங்கினாலும் பேரும் புகழும் பெற்றபின் உதவி இயக்குநர்களோடு பழகுவதில் ஒரு இடைவெளி வெற்றியின் அளவைபோல அதிகரித்துக்கொண்டே இருக்கும் . இந்த சூழலில் வைத்து பார்க்கும் போதுதான் ஜனாசார் தோற்றம் எவ்வளவு உயரம் என தெரிய வரும் . அது போல அவரிடம் எனக்கு ஆச்சர்யமளிக்கும் இன்னொரு விடயம் என்னதான் அவர் ருஷய் இலக்கியங்களின் காதலராக இருந்தாலும் அவரை இயக்குவது என்னமோ தமிழ் சினிமாவின் எம் ஜி ஆர் தான் . ஒரு பககம் தொழில் நுட்பத்தில் அபாரமான அறிவும் நவீன அணுகுமுறையும் அவர் படங்களில் இருந்தாலும் அதே அளவுக்கு எம் ஜி ஆரையும் அவரது திரைப்படங்களையும் உள்வாங்கியிருந்தார் . சார் எனக்கு சினிமாவில் குரு எம் ஜி ஆர்தான் நீங்க சீன் சொன்னா எம் ஜி ஆர் படத்துல இந்த மாதிரி சீன் வந்துருக்கா அவர் எப்படி இந்த சீனை பண்ணியிருக்கார்னு பாத்துதான் புரிஞ்சுக்குவேன் .. ஏன்னா அவரை விட இந்த மக்களை புரிஞ்சுகிட்டவங்க வேறு யாருமில்ல என்பார் . இயற்கை ஈ .. பேராண்மை போன்ற படங்களின் வெற்றிக்கும் எம் ஜி ஆர் படங்களுக்கும் இருக்கும் கணித பொருத்தப்பாடுகளை என் சினிமா அறிவை வைத்து எப்படியெல்லாமோ ஆய்வு செய்து பார்க்கிறேன் . அதுதான் ஜனாசாரின் வெற்றி .. இல்லாவிட்டால் பெரிய அறிஞர்களே விளக்க முடியாமல் தடுமாறும் மார்க்சிய தத்துவத்தை பேராண்மை படத்தில் ஜெயம் ரவி மூலம் வகுப்பறை காட்சியில் அத்துணை தெளிவாக பல கோடி மனிதர்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார் . தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகளுள் ஒன்றாக அக்காட்சி இன்றும் பரிணிமித்து வருகிறது . அது போலத்தான் கொரோனாகாலத்துக்கு முன்பே ஈ படத்தின் மூலம் பயோவார் குறித்த தகவலை மிக எளிமையாக எடுத்துச்சொல்லியிருந்தார் .
இந்த சமூக அக்கறையும் எளிய மனிதர்களுக்கான வெளிப்பாடும் தான் ஜனாசார்

சென்று வாருங்கள் ஜனா சார் இந்த சமூகம் குறித்தும் மக்களைகுறித்தும் உங்கள் ஏக்கம் கனவுகள் அப்படியே தொடர்கின்றன . உங்களது உதவியாளர்கள் அதை ஈடுசெய்வார்கள் என நம்புகிறேன் ;
தனிப்பட்ட முறையிலும் பாலுமகேந்திரா நூலகம் சார்பாகவும் என் இதய அஞ்சலிகள் _அஜயன்பாலா

லால் சலாம் காம்ரேட்!