பாராட்டுகளை குவித்து வரும் அஷிமா நர்வால்!

தற்போது Netflix தளத்தில் வெளியாகியிருக்கும், தெலுங்கு ஆந்தாலஜி திரைப்படமான “பிட்ட கதலு” திரைப்படத்தில், அற்புத நடிப்பை வழங்கியிருக்கும் நடிகை அஷிமா நர்வால், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார்.  “கொலைகாரன்” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இவர், “பிட்ட கதலு” ஆந்தாலஜி திரைப்படத்தில் ‘பிங்கி’ எனும் பகுதியில் இந்து கதாப்பாத்திரத்தில் மிக அருமையான நடிப்பை வழங்கி, அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இது குறித்து நடிகை அஷிமா நர்வால் கூறியதாவது…
தற்போது கிடைத்து வரும் பாராட்டுக்கள், பலவித காரணங்களால்,  என் வாழ்வின் சிறப்பு மிக்க தருணமாகியுள்ளது. முதல் காரணம் Netflix போன்ற உலகளாவிய மிகப்பெரும் புகழ் கொண்ட நிறுவனத்தின், முதல் தென்னிந்திய  ஆந்தாலஜி படத்தில் பங்கு கொண்டதாகும்.  அடுத்தது தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளான சங்கல்ப் ரெட்டி, நடிகர் சத்யதேவ் காஞ்சர்னா, ஈஷா ரெப்பா, ஶ்ரீனிவாஸ் அவரசலா ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்ததாகும். படத்தின் அனைத்து வேலைகளும் கடந்த வருடமே முடிந்த நிலையிலும், பொதுமுடக்கத்தினால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இறுதியாக தற்போது எங்களது திரைப்படம் உலகின் புகழ்மிகு நிறுவனமான Netflix ல் வெளியாகியிருப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. Netflix நிறுவனம் உலகம் முழுக்க 190 நாடுகளில், மிகப்பெரும் பார்வையாளர்களிடம் படத்தினை கொண்டு சென்றுள்ளது. இணையம் வழி, ஆஸ்திரேலியாவில் உள்ள எனது நண்பர்கள், எனது நடிப்பினை கண்டுகளித்தது ஒரே நேரத்தில் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. “பிட்ட கதலு” திரைப்படம் மிகப்பெரும் புகழினை பெற்று தந்துள்ளது. நிறைய நல்ல கதாபாத்திரங்கள் என்னை தேடி வர ஆரம்பித்துள்ளது. தற்போது சில தெலுங்கு திரைக்கதைகளை படித்து வருகின்றேன், விரைவில் சில படங்களை ஒப்பந்தம் செய்யவுள்ளேன். திரை வாழ்வில் எப்போதும் தனித்துவமிக்க கதைகள் மற்றும் சவாலான பாத்திரங்கள் செய்யவே ஆசைப்படுகிறேன். இனிவரும் காலங்களிலும் ரசிகர்கள் பாராட்டும் வகையிலான படங்களை கதாப்பாத்திரங்களை தொடர்ந்து செய்வேன்.